பித்அத் -நூதன அனுஷ்டானம் என்றால் என்ன? ஒரு விளக்கம்-Bidat

பித்அத் -நூதன அனுஷ்டானம் என்றால் என்ன? ஒரு விளக்கம்-Bidat

By Sufi Manzil 0 Comment June 1, 2010

Print Friendly, PDF & Email

பித்அத் -நூதன அனுஷ்டானம் என்றால் என்ன? ஒரு விளக்கம்.

அன்று முதல் இன்று வரை நாம் பின்பற்றியொழுகி வருகின்ற எத்தனையோ நல்ல செயல்களை அவை பித்அத் என்று கூறி, அஹ்லுஸ்ஸுன்னத் வல் ஜமாஅத்தின் அழகுறு பாதையிலிருந்து விலகி வழி கெட்டும், வழிகெடுத்தும் வருகின்றனர் சில அதிபுத்திசாலிகள்(?)!

திருமறையையும், திரு நபி வழிமுறைகளையும் மட்டுமே நாங்கள் பின்பற்றுகின்றோம், ஏற்றுக் கொள்கிறோம்ட என்று கூறித்  திரியும் இவர்கள் திருமறை மூலமாகவும், ஹதீஸ்கள் மூலமாகவும் நற்செயல்கள் என ஏற்றுக் கொள்ளப்பட்ட காரியங்களையெல்லாம் ஒட்டுமொத்தமாக பித்அத் எனவும், பித்அத்துகள் அனைத்தும் வழிகேடே எனவும் பிரச்சாரம் புரிகின்றனர்.

சுன்னத் என்றால் என்ன? பித்அத் என்றால் என்ன? என்பது குறித்து அடிப்படை அறிவு இல்லாத காரணத்தினாலேயே அவர்கள் இவ்வாறான தப்புப் பிரச்சாரத்தில் இறங்கியுள்ளனர்

'திருமறை , திருநபி வழிமுறை, சஹாபாக்களின் நடைமுறை, இமாம்களின் ஒத்தக் கருத்துரை ஆகியவற்றிற்கு எதிராக – புதிதான ஒன்றைக் கொண்டு வந்தால் அது வழி கெட்ட-தவறான பித்அத்!'

மேற்கூறப்பட்டவைகளுக்கு முரணில்லாமல் ஒரு நற்செயலை உருவாக்கினால் அது ஏற்றுக் கொள்ளாபபட்ட –புகழுக்குரிய பித்அத்! என சட்டமேதை இமாமுனா ஷாபிஈ ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் கூறுகின்றானர்.

நூல்: பத்ஹுல் முபீன் பக்கம் 95, தஹ்புல் அஸ்மாஉ வல்லுகாத் பாகம் 2 பக்கம் 23.

பித்அத்துகளை இவ்வாறு இருவகையாகப் பரித்து எந்த அடிப்படையில் கூறுகின்றனர்? 'எல்லா பித்அத்துகளும் வழிகேடு, எல்லா வழிகேடுகளும் நரகில்' என்று அண்ணல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறுகின்றனரே! ன்பது சில அளிவாளிகளின் வினா! விடையைத் தேடும் இந்த வினாவுக்கான பதில் சற்று விரிவாகத்தான் தர வேண்டும்!

'அல்லாஹ்வை நீங்கள் நேசிப்பீர்களாயின்  என்னைப் பின்பற்றுங்கள். அல்லாஹ் உங்களை நேசிப்பான் என நபியே ! கூறுங்கள்' (அல்-குர்ஆன்)

நபிபெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை பின்பற்றுவது என்றால் என்ன? அவர்களின் சுன்னத்துக்களை ஏற்றுக் கொண்டு செயல்படுதல்! (சுன்னத் என்றால்-நபிகளாரின் சொல், செயல், அங்கீகாரம் மூன்றும் இடம் பெறும்)

பித்அத் என்றால் 'அண்ணல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் காலத்தில் இல்லாத ஒரு புதிய செயல்'  (மிர்காத் பாகம் 1, பக்கம் 178)

பெருமானாரின் காலத்தில் இல்லாதவற்றை நாம் செய்யலாமா? கூடாதா? எல்லா பித்அத்துகளுமே வழிகேடுகள்தானா? ஹதீஸ்களின் அடிப்படையில் ஆராய்வோம். இமாம்கள் பித்அத்களை இரண்டாகப் பிரித்து நல்லவை, கெட்டவை எனப்  பெயர் சூட்டியது எந்த அடிப்படையில்? இதனையும் ஹதீஸ்கள் மூலமே தெளிவுபடுத்துவோம்.

ஸெய்து இப்னு தாபித் கூறுகின்றார்கள்: 'யமாமா போர் நடந்துக் கொண்டிருந்த போது கலீபா அபூபக்கர் ரலியல்லாஹு அன்ஹு என்னை அழைத்துவர ஆளனுப்பினார்கள். நான் சென்றபோது கலீபாவுடன் உமரும் இருந்தார்கள். யமாமாப் போரில் குர்ஆனைப் பாடமிட்டிருந்த பலர் மறைந்து விட்டனர். மீதமுள்ளோரும் இப்படியே கொல்லப்பட்டு விடுவார்களாயின் குர்ஆனைப் பாடமிட்டவர்கள் இல்லாமலாகிவிடுவாரோ என அஞ்சுகின்றேன்.

எனவே திருமறையை நூலுருவில் கொண்டுவர வேண்டுமென உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகின்றனர். 'நபி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் செய்திராத ஒரு காரியத்தை நாம் எப்படி செய்வது? என்று உமரிடம் கேட்டேன். 'இறைவன் மீது ஆணையாக! இது நல்லதோர் செயல்! என உமர் ரலியல்லாஹு அன்ஹு கூறுகின்றார்கள். அல்லாஹ் இது விஷயத்தில் உமருடைய இதயத்தை விசாலமாக்கி வைத்தது போன்று எனது இதயத்தை விசாலமாக்கி வைப்பது வரை என்னிடம் பலமுறை எடுத்துக் கூறினார்கள். தற்போது எனக்கும் உமருடைய அபிப்ராயம்தான்! எனவே அறிவாளியும், இளைஞரும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களி;ன் வஹியை அவ்வப்போது எழுதி வந்தவர்களுமான தாங்கள் குர்ஆனை நூலுருவில் சேர்க்கின்ற பணியினை செய்திட வேண்டும்' என கலீபா அபூபக்கர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள்.

பெரியதொரு மலையைப் பெயர்த்தெடுக்க கூறினால் அது எனக்கு இலேசான செயலாக இருந்திருக்கும். நபி பிரான் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் செய்யத் துணியாததை நீங்கள் ஏன் செய்ய வேண்டும்?  என நான் கேட்டேன். அபூபக்கர் அவர்கள் சொன்னார்கள். 'இஃதோர் சிறந்த செயல்' என இதயத்துக்கு சமாதானம் ஏற்படுவது வரை பன்முறை இந்தக் காரியத்தை குறித்து அபூபக்கர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களிடம் கூறிக்கொண்டே இருந்தனர். பின்னர் நான் குர்ஆனை சேகரிக்கத் தொடங்கினேன்.'

(புகாரி: பாகம் 1, பக்கம் 745)

நபிகளாரின் காலத்தில் இல்லாத செயல்கள் எல்லாமே வழிகேடு. நரகத்தில் சேர்ப்பவை என்றிருக்குமாயின் அபூபக்கர், உமர், ஜைது போன்ற கண்ணியமிகு நபிமணித் தோழர்கள் அண்ணலார் செய்யாத ஒரு செயலைச் செய்து 'அதற்கு நற்செயல்' என பெயருமிட்டனர் என்றால், அவர்கள் வழி கேட்டிற்குத் துணைபோயினரா? அனாச்சாரத்தின் மீது ஸஹாபாக்களும் ஒத்த கருத்து கொண்டிருந்தனரா?

இந்த அடிப்படையில்தான் இமாம்கள் பித்அத்துகளை இரு கூறுகளாகப் பிரித்தனர். நல்லது, கெட்டது என வகைப்படுத்தினர்.

எனவே, 'அண்ணலாரின் காலத்தில் இல்லாத புதிய செயல்களுக்கு ஷரீஅத்தில் பித்அத் என்று கூறப்படும். இது நல்லது, கெட்டது என இரு வகைப்படும்.' என்று இமாம் நவவி ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் கூறுகின்றார்கள்.

நூல்: தஹ்தீபுல் அஸ்மாஉ பாகம் 2, பக்கம் 22

மிர்காத், பாகம் 1, பக்கம் 178.

ரமலானின் ஓரிரவில் உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களோடு நான் பள்ளிக்குச் சென்றேன். சிலர் தனித்தும், வேறு சிலர் ஜமாஅத்தாகவும் தொழுது கொண்டிருந்தனர். இதனைக் கண்ட உமர் ரலியல்லாஹு அன்ஹு இவர்களை ஒரே இமாமின் கீழ் ஜமாஅத்தாக தொழச் செய்வது மிகச் சிறந்தது எனக் கூறி உபை இப்னு கஃபு ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் தலைமையில் ஜமாஅத்தாக்கினார்கள். மற்றொரு நாள் நான் உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களுடன் பள்ளிக்குச் சென்றபோது மக்கள் ஜமாஅத்தாக தொழுது கொண்டிருந்தனர். இது கண்ட உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள், 'இஃ;தோர் நல்ல பித்அத்' என்றனர். அப்துற் றஹ்மான் இப்னு அப்துல் காரி அறிவிக்கின்ற இந்நிகழ்ச்சியை புகாரி (பாகம் 1 பக்கம் 269)ல் காணலாம்.

தராவீஹ் தொழுகையினை ஜமாஅத்தாக தொழச் செய்து அதற்கு நல்ல பித்அத் என்று பெயரும் சூட்டினர் உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். எனவே எல்லா பித்அத்துகளும் வழிகேடல்ல என்பது தெளிவாகிறது. யாராவது இஸ்லாத்தில் ஒரு நல்ல செயலை அறிமுகப்படுத்தினால் அதனுடைய கூலியும், அதனை செயல்படுத்தியரின் கூலியும், அறிமுகப்படுத்தியவருக்குக் கிடைக்கும். யாராவது ஒரு தீய செயலைக் கொண்டு வந்தால் அதனுடைய தண்டனையும் கிட்டும். (முஸ்லிம் பாகம் 1, பக்கம் 241, இப்னுமாஜா பக்கம் 18, மிஷ்காத் பாகம் 1 பக்கம் 33)

இறைவனும் இறைத்தூதரும் திருப்தியுறாத வழிதவறிய ஒரு பித்அத்தை கொண்டு வருபவனுக்கு அதனுடைய தண்டனையும், அதை செய்பவனுக்குரிய தண்டனையும் கிடைக்கும் (இப்னு மாஜா பக்கம் 19, மிஷ்காத் பாகம் 1 பக்கம் 30) இந்த நபி மொழிக்கு விளக்கமெழுதிய ஹதீஸ்கலை விற்பன்னர் முல்லா அலீ காரீ ரஹ்மத்துல்லாஹி  அலைஹி அவர்கள் நல்ல பித்அத்துகள் தவறானதல்ல என்பதைக் காட்டுவதற்கே தீய பித்அத் என்று குறிப்பிடப்பட்டுள்ளது என்று தமது மிர்காத் பாகம் 1 பக்கம் 202ல் எழுதுகிறார்கள்.

இந்த ஹதீஸ்களின் அடிப்படையில் தான் இமாம்கள் பித்அத்துகளை வகைப்படுத்தினார்களே தவிர, ஆதாரமின்றி வகைப்படுத்தவுமில்லை. புதுக்கொள்கைகாரர்கள் கூறுவது போன்று எல்லா பித்அத்துகளும் வழிகேடுமல்ல. அப்படிக் கூறுபவன் தான் வழிகேட்டின் அதல பாதாளத்தில் வீழ்ந்து கிடக்கின்றான் என்பது மறுக்க முடியாத உண்மை.

எனவே ஹதீஸ்கள், ஸஹாபாக்களின் நடைமுறைகள் ஆகயிவற்றின்படி இமாம்கள் வகுத்துத் தந்துள்ள நல்ல பித்அத்களை நாம் செய்தால் அவற்றுக்கு அல்லாஹ்வுடை;யவும், அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடையவும் அங்கீகாரம்  உண்டு. நற்கூலியும் உண்டு என்பது உறுதி.

நபிமொழித் தொகுப்பு நூற்களில் 'எல்லா பித்அத்துகளும் தவறானவை' என்று கூறுகின்ற சில ஹதீஸ்களைக் காணலாம். இங்கெல்லாம் பித்அத்தெ ஸய்யிஆ-தீய பித்அத் என்றே நபி மொழிக் கலை வல்லுனர்கள் விளக்கம் தந்துள்ளனர்.
 

'எல்லா பித்அத்துகளும் வழிகேடனாவை' என்று மிஷ்காத் பாபுல் இஃதிஸாம் எனும் பாடத்தில் வருகின்ற நபிமொழிக்கு, மிஷ்காத்தின் விளக்கவுரை நூலான அஷிஃஅத்துல்லம்ஆத் இவ்வாறு விளக்கம் கூறுகின்றது:

'எந்தவொரு பித்அத்தும் அடிப்படைவிதிகளுக்கும், ஸுன்னத்திற்கும், ஷரீஅத்தின் நடைமறைகளுக்கும் ஒத்திருந்தால் அதனை பித்அத்தே ஹஸனா-நல்ல பித்அத் எனவும், முரண்பட்டிருந்தால் பித்அத்தே ஸய்யிஆ-தீய பித்அத் எனவும் கூறப்படும்.

இப்போது பித்அத்துகளெல்லாம் வழிகேடு என்று கூறப்படுவதின் அர்த்தம் புரிந்திருக்கும். வல்லான் அல்லாஹ் உண்மைகளைப் புரிந்து, அதனை ஏற்றுக் கொண்டு செயல்படும் அஹ்லுஸ்ஸுன்னத்தின் அழகிய பாதையில் என்றும் நம்மையும், நம் சந்ததிகளையும் நிலைத்து வாழச் செய்வானாக! ஆமீன்.

முற்றும்.

நன்றி: வஸீலா 1-3-1987.