நூரி ஷாஹ் தரீகா பற்றிய உண்மைகள்-Real Fact of Noorie Sah Tareeka

நூரி ஷாஹ் தரீகா பற்றிய உண்மைகள்-Real Fact of Noorie Sah Tareeka

By Sufi Manzil 1 Comment December 7, 2010

Print Friendly, PDF & Email

நூரி ஷாஹ் தரீகா பற்றிய உண்மைகள்!

1. நூரிஷாஹ்வின் ஞானவழித் தொடர்

2.யார் இந்த ஸெய்யித் அஹ்மத் பரேலவீ?

3.நூரிஷாஹ் தரீகாவின் ஷெய்குமார்களின் நிலைகள்

4.நூரிஷாஹ் தரீகாவின் மெய்(அஞ்)ஞானமும், ஸூபிகளின் மெய்ஞ்ஞானமும்

5.உண்மை ஸூபியாக்களின் நிலை

6.ஆதார நூல்கள்

தமிழகத்தில் சுமார் 30 வருடங்களுக்கு முன் மெய்ஞ்ஞான வழி, தரீகத், சுன்னத் வல் ஜமாஅத், ஷெய்குமார்கள் என்ற போர்வையில் நுழைந்த இயக்கம்தான் நூரி ஷாஹ் தரீகா ஆகும். ஆரம்பத்தில் ஆந்திர மாநிலம் ஹைதராபாத்தைச் சார்ந்த நூரி ஷாஹ் என்பவர் தன்னை காதிரிய்யா, ஜிஷ்திய்யா தரீகாக்களின் ஷெய்கு என்று பிரபலபடுத்திக் கொண்டுதான் நுழைந்தார். பின் மக்களிடையே தான் ஸில்ஸிலாயே நூரிய்யா என்ற தரீகத்தின் ஸ்தாபகர் என்று கூறிக் கொண்டார். நன்கு நாவன்மையுடைய அவருடைய பேச்சில் மதிமயங்கி கேரளா, தமிழ்நாடு முஸ்லிம்களில் ஆலிம்களும் அவரிடம் பைஅத் வாங்கினார்கள்.

இதற்கிடையில் சென்னை திருவல்லிக்கேணி பகுதியில் இவரது ஷெய்கான கௌஸ் அலி ஷாஹ் என்பவர் தமது தரீகாவை நிறுவி அங்கும் முரீதுகள் கொடுத்து வந்தார். இந்நிலையில்தான் நூரி ஷாஹ் தமிழகத்தில் நுழைந்தார். இவ்விருவர்களுக்கிடையே பிரச்சனைகள் தோன்றி இருவரும் சொற்போரில் ஈடுபட்டனர். அவன் என் முரீது இல்லை மரீதாகி விட்டான் என்று ஷெய்கு கூறும் அளவிற்கும், ஷெய்கின் முரீதுகள் நூரி ஷாஹ்வா? நாரி ஷாஹ்வா?, என்று வால்போஸ்டர் ஒட்டி பிரபலப்படுத்தியிருக்கும் அளவிற்கு பகைமைகளை வளர்த்துக் கொண்டனர்.

கேரளா சென்று அங்கும் தன் தரீகாவை பரப்பிய நூரிஷாஹ் பட்டிக்காடு என்னும் ஊரில் ஜாமிஆ அரபிய்யா நூரிய்யா என்ற அரபு கல்லூரி (மத்ரஸா) யை தோற்றுவித்தார்.

மக்கள் இவர் சேவையாற்றுகிறார் என்று எண்ணி இவர் தரீகாவில் சேரவாரம்பித்தனர். இவரின் தரீகாவில் மக்கள் கூட்டம் அதிகமாகவே தன் கொள்கைகளை பகிரங்கமாக பேசவாரம்பித்தார். இவரின் இந்தப் போக்கை கண்ட கேரளாவின் சமஸ்த கேரளா ஜம்இய்யத்து உலமா சபையினர் மௌலவி கே.கே. அபூபக்கர் முஸ்லியார் தலைமையில் ஒன்று கூடி இவரின் கொள்கை மற்றும் தரீகத்தை ஆய்வு செய்து கடந்த 16-12-1974 அன்று, 'நூரிஷாஹ் தரீகா இஸ்லாம் மார்க்கத்தின் ஷரீஅத்திற்கு மாற்றமானது என்றும், ஆகவே பொதுமக்கள் இத்தரீகாவில் ஈடுபடாமல் ஒதுங்கி இருக்குமாறு மக்களை வேண்டி' தீர்மானம் நிறைவேற்றி பகிரங்கப்படுத்தினாhர்கள்.

அதன்பின் கேரளா பட்டிக்காடு நூரிய்யா மத்ரஸாவை விட்டும் நூரிஷாஹ் தரீகாவினர் வெளியேற்றப்பட்டு சுன்னத் வல் ஜமாஅத்தினர்கள் அந்த நிர்வாகத்தை எடுத்து நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

15-5-77 அன்று ஹாஜி எம். அப்துல் ஹகீம் சாகிப் (ஆயங்குடி) அவர்களால் வெளியிடப்பட்ட பிரசுரத்தில், நாகப்பட்டினம் நஸீஹத்துல் இஸ்லாமிய அங்கத்தினர் கேட்ட கேள்விகளுக்கு கேரளா ஜன்னத்துல் உலூம் அரபிக் கல்லூரி முதல்வர் இ.கே. ஹஸன் முஸலியார்(பாகவி) அளித்த விளக்கவுரையின் இறுதியில் 'இத்தரீகாவானது மார்க்கத்திற்குப் புறம்பானதும், அதனுடைய அந்தரங்கம் குஃப்ரின்பால் சேர்ந்ததுமாகும்' என்றும்,

எவர் தன்னை ஷைகு என்று தாவா செய்து கொண்டு மேற்கூறிய செயல்களை செய்கின்றாரோ அவர் முழுப் பொய்யராவார். குழப்பத்திற்கும் மனோ இச்சைக்கும் அவர் ஷைகாவார். அவரை விட்டு நீங்கவதும், முஸ்லிம்களை விட்டு அவர்களை விரட்டுவதும் வாஜிப் எனும் கடமையாகும் என்றும் கூறியுள்ளார்கள்.
ஏன் இந்த பத்வா? அதில் கொடுக்கப்பட்டிருந்த காரணங்கள்:

1.    'முஹம்மத்', அஹ்மத்' என்பவற்றை திக்ரு செய்வது மார்க்கத்திற்கு முரண்பட்டது. பழிப்பிற்குரிய தீமையாகும். ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மரியாதையைக் கிழிப்பதாகும்.
2.    பெண்களுடன் அவரும் அவருடைய கலீபாக்களும் நேரடியாகச் பேசுவதும், பெண்கள் ஷைகுடைய கால், கைகளை பிடித்து விடுவதும் ஹராமானதாகும் என்பவை முக்கியமானவை.

இவ்வாறு ஆலிம்களாலும், உலமா சபையினராலும் விரட்டப்பட்ட ஷைத்தானியத்தான தரீகாவின் அடிமூடு (மூல பிதாக்கள்) எத்தகையவர்கள், ஞானவழித் தொடர் எத்தகையது? அவர்கள் ஞானம் பற்றிய கருத்த என்ன? தற்போதுள்ள கலீபாக்களின் நிலை என்ன? அனைத்தும் சுன்னத் வல் ஜமாஅத்தின் கொள்கைகளுக்கு ஒப்பானதா? முரண்பட்டதா? என்று சற்று ஆராய்வோம்:

நூரிஷாஹ்வின் ஞானவழித் தொடர்:

தரீகா என்றால் மெய்ஞ்ஞான நாதாக்களின் வழித் தொடர் (ஸில்ஸிலா) அவசியம். அத் தொடர் கண்ணியமிக்கவர்களாகவும், சுன்னத் வல் ஜமாஅத்தினர்களைச் சார்ந்தவர்களாகவும் உள்ளவர்களைக் கொண்டதாக இருப்பது அவசியத்திலும் அவசியம்.கனவில் பெற்றதாக இருக்கக் கூடாது. வழித் தொடர் உண்மையானதாக இருக்க வேண்டும். அப்போதுதான் தொடர்பு தம் ஷெய்கிலிருந்து முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வரை சென்று அல்லாஹ்வை அடைய முடியும்.

நூரிஷாஹ்வின் தொடரை பார்ப்போமானால், அவர் 8 தரீகாவிற்கு கிலாபத் பெற்றவராகவும், தன்னை ஷெய்கு என்றும் கூறி நூல் வெளியிட்டுள்ளார். இவரின் சுஹரவர்திய்யா, நக்ஷபந்தியா தரீகாக்களின் தொடர்களில் ஸெய்யிதினா அலி ரலியல்லாஹு அன்ஹு அவர்களை அடுத்து அவர்களின் மகனார் ஸெய்யிதினா இமாம் ஹஸன் அடுத்து (அவர்களின் மகனார்) ஸெய்யிதினா இமாம் ஹுஸைன் அவர்களும் இடம் பெற்றுள்ளனர்.

உலகிலுள்ள எந்த ஸில்ஸிலாவிலும் இந்த வழிமுறை இல்லை. மற்றும் வரலாற்றுக் குறிப்புகளோ, ஆதாரங்களோ காணக்கிடைக்கவில்லை.

'தபகாத்திய்யா'சில்சிலாவில் 7, 8வது தொடருக்குப் பின் நீண்டதொரு ஷெய்குமார்கள் இடைவெளி உள்ளது.

அடுத்து, ஸில்ஸிலாயே அக்பரிய்யா உவைஸிய்யாவில் நூரிஷாஹ் 5வது ஷெய்காக வருகிறார். சுமார் 1430 வருடங்களுக்கு இந்த தரீகாவில் 5 ஷெய்குமார்கள்தானா?

ஆக தங்களுக்கு தகுந்தவாறு ஸில்ஸிலா தொடர்களைத் தயாரித்துள்ளார் என்பதும், இந்த ஸில்ஸிலாக்கள் போலியானவை என்பதும் தெரியவருகிறது. அப்படியிருக்க, இந்த தொடரில் நாயகம் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் நிஸ்பத் எவ்வாறு கிடைக்கும்.?

இதில் மிக முக்கியமான விஷயம் யாதெனில், நக்ஷபந்தியா தொடரில் 39 வதாகவும், நக்ஷபந்தியா உவைஸிய்யா, அக்பரிய்யா தரீகாக்களில் 31 வதாகவும் வரும் ஷைய்கு ஸையித் அஹ்மத் பரேலவீ என்பவர். இவரின் அடக்கஸ்தலம் பாலாகோட் (பஞ்சாப்)டில் இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

யார் இந்த ஸெய்யித் அஹ்மத் பரேலவீ?

இந்த ஸெயித் அஹ்மத் பரேலவீ என்பவர் யார்? இவரின் கொள்கை என்ன? இவரின் மரணம் எப்படி சம்பவித்தது? இவருக்கு அடக்கஸ்தலம் இருப்பது என்று சொல்லப்பட்டது உண்மையா? என்று பார்க்கும்போது,

இவர் ஒரு பக்கா வஹ்ஹாபி ஆவார். தப்லீக் ஜமாஅத்தின் மூல குருவான மௌலவி இஸ்மாயில் திஹ்லவி என்பவர் முஹம்மத் பின் அப்துல் வஹ்ஹாப் நஜ்தியின் 'கிதாபுத் தவ்ஹீது' என்னும் வஹ்ஹாபிய சித்தாந்த நூலை 'தக்வியத்துல் ஈமான்' என்ற பெயரில் மொழிபெயர்த்து இந்தியாவில் வெளியிட்டவர். இதில் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைப் பற்றி மிகத் தரக்குறைவாக விமர்சித்துள்ளார். மேலும் சுன்னத் வல் ஜமாஅத்திற்கு மாற்றமான கொள்கைகளை எழுதியுள்ளார்.

இவரைப் (திஹ்லவியைப்) பற்றிக் கூட நூரி ஷாஹ் 'இஸ்மாயீல் திஹ்லவி, ரஷீத் அஹ்மது கங்கோஹி போன்றோர் அப்துல் வஹ்ஹாப் நஜ்தியின் கொள்கைகளை பரப்ப தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் என்றும் இவர்களால் முஸ்லிம்களின் ஏகத்துவக் கோட்டை கலகலத்துவிட்டது' என்றும் பேசியதை ஷைகுனா செய்யது நூரிஷாஹ், ஜுஹூரி ஷாஹ் நினைவு மலர் (தொகுப்பு: கனி சிஷ்தி ) பக்கம் 60, 61ல் கூறப்பட்டுள்ளது.

இவரின் ஞான குருதான் மௌலவி ஸையித் அஹ்மது பரேலவீ என்பவர். இவருடன் இவரது சிஷ்யர் இஸ்மாயில் திஹ்லவியும் சேர்ந்து தங்களது வஹ்ஹாபியக் கொள்கைகளை முஸ்லிம்களிடையே பரப்பவும், ஆங்கிலேய அரசிற்கு கூலியாக செயல்பட்டனர். இவர்களின் கொள்கைகள் மிக மோசமானதாக இருந்ததால் பட்டாண் முஸ்லிம்களால் துண்டு துண்டாக வெட்டி கொல்லப்பட்டு தூர வீசப்பட்டனர்.

ஆனால் இவர்களை இந்த தரீகாவினரும், தப்லீக் இயக்கத்தினர்களும் 'தியாகி' என்கின்றனர். இவர்கள் தியாகியாக ஆவதற்கு முஸ்லிம்களின் எதிரிகளோடு ஜிஹாத் செய்தார்களா? என்றால் இல்லை என்றே பதில் கிடைக்கிறது. மேலும் அப்போது சுதந்திரத்திற்காக பாடுபட்ட இந்தியர்களுக்கு எதிராகவும், ஆங்கில அரசுக்கு ஆதரவாகவும் செயல்பட்டனர் என்பதை இவர்கள் எழுதிய புத்தகங்களிலிருந்து எடுத்துக் காட்டி 'பாஸ்பான்' எனும் பத்திரிகை ஆசிரியர் மௌலானா முஸ்தாக் அஹ்மத் சாஹிப் நிஜாமி(இலாஹாபாத்) அவர்கள் எழுதிய நூலான 'கூன்கே ஆன்ஸு'(இரத்தக் கண்ணீர்) எனும் நூலிலிருந்து பார்த்தால் உண்மை புரியும். அதன் ஆதாரங்களை இங்கே தருகிறேன்.

1.    'ஸையத் சாஹிப்(பரேலவி)யுடன் முஜாஹிதீன்கள் ஒன்று திரள ஆரம்பித்தனர். உடன் மௌலானா இஸ்மாயீல்(திஹ்லவி) உடைய ஆலோசனையின் பேரில் இலாஹாபாத்தைச் சார்ந்த செல்வந்தர் ஷைகு குலாம் அலியவர்கள் மூலம் தொடர்பு கொண்டு வடமேற்கு மாகாண லெப்டினட் கவர்னருடைய சமூகத்திற்கு 'நாங்கள் சீக்கியர்களுடன் ஜிஹாத் செய்ய ஆயத்தம் செய்து கொண்டிருக்கிறோம். இதில் ஆங்கிலேய அரசுக்கு ஆட்சேபணை ஏதமில்லையே!' என்று கேட்டோம். அதற்கவர்கள் …….. எங்களின் செயல்திட்டம் மற்றும் அமைதிக்கு எவ்வித பங்கமும் ஏற்படாதிருக்குமேயானால் நமக்கு எவ்வித ஆட்சேபணையும் இல்லை என்று லெப்டினட் கவர்னர் சாஹிப் தெளிவாக எழுதி விட்டார்'.

              நூல்:-ஹயாத்துத் தையிபா பக்கம் 302
              தொகுப்பு: மீர்ஜா ஹைரத் தெஹ்லவி.

இந்திய நாட்டை அப்போது ஆக்கிரமித்து அட்டூழியங்களும், கொடுமைகளும் செய்து கொண்டிருந்த ஆங்கிலேய அரசை எதிர்த்த மார்க்கப்போர் புரிய இந்திய உலமாக்கள் பத்வா வெளியிட்டு களத்திலும் இறங்கி செயல்பட்டுக் கொண்டிருந்த நேரத்தில்(அதற்காக மௌலானா பஜ்லுல் ஹக் ஹைதராபாதி ரஹிமஹுல்லாஹ் போன்றோர் தம் இன்னுயிரை நீ;த்தனர்) ஆங்கியேல அரசின் கைக்கூலிகளாக செயல்பட்டு வந்தஇந்த சையத் அஹ்மது பரேலவி, இஸ்மாயில் திஹ்லவி போன்றோர் அவர்களின் அணுசரணை, தயவிற்காக கடிதம் எழுதுகின்றனர் பாருங்கள். இந்த உதவியுடன் செய்யும் சண்டைகளை 'ஜிஹாத்' என்று சொல்லி ஜிஹாத்திற்கு புதுவிளக்கம் அளிக்கின்றார்கள் இவர்கள்.

2.    'கல்கத்தாவில் மௌலவி இஸ்மாயில் (திஹ்லவி) ஜிஹாதைப் பற்றி பயான் செய்து கொண்டிருக்கும்போது, ஒருவர் எழுந்து நின்று, 'நீங்கள் ஏன் ஆங்கிலேயர்களை எதிர்த்து ஜிஹாத் செய்ய பத்வா கொடுப்பதில்லை என்று கேட்டார். அதற்க மௌலவி இஸ்மாயில்…… 'ஆங்கிலேயர்களுடன் ஜிஹாத் செய்வதென்பது எவ்வகையிலும் வாஜிபில்லை…….அவர்கள் மீது எவரேனும் தாக்குதல் நடத்தினால் அப்படித் தாக்குவொரை எதிர்த்துப் போரிட வேண்டியது முஸ்லிம்களது கடமையாகும்….'
                  
                              நூல்: ஹயாத்துத் தையிபா பக்கம் 296

இவர்களின் இந்த ஆங்கிலேய பாசம்தான் இவர்களை இஸ்லாமிய மார்க்கத்திற்கு எதிராக செயல்படத் தூண்டிற்று. அதனாலேயேதான் இஸ்மாயில் திஹ்லவி ஹஜ் சென்றிருந்த சமயம் முஹம்மத் இப்னு அப்துல் வஹ்ஹாப் நஜ்தியின் 'கிதாபுத் தவ்ஹீது' எனம் நூலை எடுத்து வந்து 'தக்வியத்துல் ஈமான்' என்ற பெயரில் மொழிபெயர்த்து வெளியிட்டார். அதில் இஸ்லாத்திற்கு எதிரான கொள்கைள் கூறப்பட்டிருந்தன.

இந்தக் கொள்கைகளை இஸ்லாமிய மக்கள் மத்தியில் பரப்பி ஒன்றுபட்டு போராடும் முஸ்லிம்களை சிதறடிக்கச் செய்து பலவீனப்படுத்தி ஆங்கிலேயர்களுக்கு எதிராக கொடுக்கப்பட்ட ஜிஹாத் பத்வாவை பலமிலக்கச் செய்வதுதான் இவர்களின் நோக்கமாக இருந்தது.

இதற்காக இவர்கள் ஊர்ஊராக சென்றனர். அதற்கு ஆங்கிலேய அரசம் உதவிக்கரம் பலவகையிலும் செய்து கொண்டே வந்தது.

சையத் அஹ்மத் பரேலவிக்கு ஆங்கிலேயர் செய்த உதவி பற்றி அபுல்ஹஸன் அலி நத்வியால் எழுதப்பட்ட 'ஸீரத்தே ஸையத் அஹ்மத்' எனும் நூலின் முதல் பாகம் பக்கம் 190 ல் கூறப்பட்டுள்ளது:

'இதற்குள் குதிரை மீது சவாரியாகி ஒரு ஆங்கிலேயன் சில பல்லக்குளில் உணவுப் பொருட்களைச் சுமந்து கொண்டு (எங்கள்) படகுக்கருகில் வருவதைப் பார்த்தோம். அருகில் வந்த ஆங்கிலேயன்,…….பாதிரிசாஹிப் எங்கேயிருக்கிறார்? என்று வினவினான். உடனே ஹஜ்ரத் அவர்கள் படகிலிருந்து 'நான் இங்கே இருக்கிறேன்' என பதில் தந்தனர்.

'…….தங்களுக்காக சூரியன் மறையும் வரை உணவு தயாரிப்பதில் மும்முரமாயிருந்தேன். இது கேட்டஸையத் சாஹிப் (பரேலவி) அவர்கள், கொண்டுவரப்பட்ட உணவுப் பொருட்களை தமது பாத்திரங்களுக்கு மாற்றுமாறு ஆணையிட, உணவு பெற்றுக் கொள்ளப்பட்டு கூட்டத்தினர்களுக்கு விநியோகிக்கப்பட்டது…..'

அடுத்து, சையத் சாஹிப்(பரேலவீ) ஜிஹாதில் மும்முரமாய் ஈடுபட்டிருந்த நேரம் அப்போது டில்லியைச் சார்ந்த தனவந்தர்கள் மூலமாக முஹம்மது இஸ்ஹாக் என்பவரிடமிருந்து சையத் சாஹிபுடைய பெயருக்கு ஏழாயிரம் ரூபாய்க்கான ஒரு உண்டி(ஒரு வகை செக் போன்றது) அனுப்பப்பட்டது….'

நூல்: தாரீகே அஜீபஹ் பக்கம் 89

இவ்வாறு பல்வேறு வழிகளில் பணமும், உணவும் இஸ்லாத்தைக் கூறுபோடும் பணியை செய்வதற்காக செய்யித் அஹ்மத் பரேலவிக்கு கிடைத்துக் கொண்டிருந்தது. மேலம் ஆங்கிலேய அரசின் ஆதரவும் இருந்தது. இந்த தைரியத்தில்தான் செய்யத் சாஹிப் சில காரியங்களைச் செய்தார். அவர் செய்த இஸ்லாத்திற்கு மாற்றமான காரியங்களை பார்ப்போம்.

'நாங்கள் சையத் சாஹிப் அவர்களைத் தேடித் தேடி அலைந்து கொண்டே ஒரு நாள் ஒரு கிராமத்திற்கு வந்து சேர்ந்தோம். அங்குள்ளோரிடம் விசாரித்தபோது, புதிதாக கட்டப்பட்டிருந்த கப்ரு அப்போதுதான் இடித்துத் தள்ளப்பட்டிருந்ததென்பதை அறிந்தோம். உயரமாக கப்ரு இருந்த காரணத்தினால் சையத் சாஹிப் அவர்கள்தான் அதை இடிக்கச் செய்தார்கள் என்பதை தெரியவந்தபோது……'

நூல்: அர்வாஹே ஸலாஸஹ் பக்கம் 140

இவ்வாறு மகான்களின் கப்ருகளை இடித்து தரைமட்;;டமாக்கியவர் ஒரு தரீகாவின் ஷெய்கு என்றால் எப்படி ஏற்றுக் கொள்வது? அந்த தரீகாதான் எப்படி இருக்கும்?

தற்போது பார்த்தால் இந்த தரீகாவின் ஷெய்குமார்களுக்கு உயரமான கப்ருகள்? கந்தூரிகள்? அதை கொண்டாடுவதற்குள் பிரச்சனைகள், கோர்ட் வரை செல்கின்றனர். என்னே இவர்களின் கேடுகெட் கொள்கை! இதுதான் நூரிஷாஹ் தரீகாவின் இலட்சணம்.

ஜிஹாத் செய்யப்போகிறேன் என்று மார்தட்டி சென்ற இந்த செய்யித் சாஹிப் ஜிஹாதை உண்மையில் செய்தாரா?

தப்லீக் ஜமாஅத்தின் ஸ்தாபகர் இல்யாஸ் மௌலவியின் குரு ரஷீத் அஹ்மது கங்கோஹி தமது 'தத்கிரத்துர் ரஷீது' பாகம் 2 பக்கம் 270ல், 'அம்பேட்டவி நகரில் வசிக்கும் ஹாபிஸ் ஜானி என்பவர் தம்மிடம் கூறியதாக, '……ஹஜ்ரத்மார்களும் செய்யித் சாஹிபுடன் சேர்ந்து ஜிஹாதுக்காக சென்று கொண்டிருந்தனர். யாகிஸ்தானுடைய அதிகாரி 'யார் முஹம்மது கான்' என்பவருடன் சையத் சாஹிப் அவர்கள் முதன்முதலாக ஜிஹாத் செய்தனர்' என்று கூறுகிறார்.

இதே வாசகங்கள் ஸீரத்தே ஸையத் அஹ்மத் (ஆசிரியர்: அபுல்ஹஸன் நத்வி) பாகம் 1, பக்கம் 190ல் காணக் கிடக்கிறது.

இஸ்லாமியர்களுடன் அதுவும் சுன்னத் வல் ஜமாஅத்தினர்களுடனும், தங்களது கொள்கையை ஏற்காதவர்களுடனும் சண்டை செய்வதை இவர்கள் ஜிஹாத் என்கின்றனர். இதுதான் வஹ்ஹாபிகளின் தலைவன் முஹம்மத் இப்னு அப்துல் வஹ்ஹாபின் கொள்கை. இதற்காகத்தான் இவர்கள் பாடுபட்டார்கள். இதைத்ததான்,

'ஸையத் அஹ்மத் மற்றம் மௌலவீ இஸ்மாயீல் திஹ்லவியும் 'பீச்தார்' எனும் இடத்திற்கு போய் சேர்ந்தபோது, அங்குள்ள தனவந்தர் 'பதஹ்கான்' என்பவர் துவக்கத்தில் இவர்களுக்கு மிகவும் மரியாதை பணிவிடை செய்து வந்தார். இவர்களும் சிறிது நாட்கள் வரை அங்கேயே தங்கியிருந்தனர். ஆனால் நாளடைவில் இவர்களிருவரும் அங்குள்ளோரிடம் அநியாயமும், அக்கிரமும் செய்ய ஆரம்பித்தனர். அங்கு வாழ்ந்த மக்களை தீய நெறி கொண்டோரென்றும், தீய மார்க்கமுடையோரென்றும் கூறத் துவங்கினர். நிலைiமை மிகவும் மோசமாகவே இவர்களிருவரையும் அதே ஸ்தலத்'தில் பட்டாண்கள் தீர்த்து விட்டனர். தமது அக்கிரம அழிச்சாட்டியத்தால் அவ்விருவரும் பட்டாண்களால் கொல்லப்பட்டனர்.'

(நூல்: கூன்கே ஆன்ஸு முதல்பாகம் பக்கம் 36)
 

கேடுகெட்ட கொள்கைக்காக ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை இழிவுபடுத்தியதற்காக கொல்லப்பட்ட இந்த கேடுகெட்ட ஸைய்யித் அஹ்மத் பரேலவீ ஒரு தரீகாவின் ஷெய்கு என்றால் எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்?

இவ்வாறு இருக்கும் தரீகாதான் சுன்னத் வல் ஜமாஅத் தரீகாதானா? சிந்தித்துப் பாருங்கள்.

ஆக நூரிஷாஹ்வின் தரீகா போலியானது என்பதும், மக்களை ஏமாற்ற தயாரிக்கப்பட்ட ஸில்ஸிலாவைக் கொண்டது என்பதும் வழிகெட்ட தலைவர்களை குருமார்களாக கொண்டது என்பதும் மேற்கண்ட ஆதாரங்கள் மூலம் புலனாகிறது. ஆக இத் தரீகாவில் பொதுமக்கள் சேருவது கூடாது என்று மேற்கூறிய பத்வாக்கள் சொன்னது உண்மை என்றாகிறது.

நூரிஷாஹ் தரீகாவின் ஷெய்குமார்களின் நிலைகள்:

1.    நூரிஷாஹ் தரீகாவின் செய்குவான கௌஸலி ஷாஹ் என்பவர் எழுதியதாக கூறப்படும் 'நூருன்னூர்' எனும் நூலின் பக்கம் 9 ல், 'தப்லீக் ஜமாஅத்தின் மூலக் குருமார்களில் ஒருவரான, மக்கா, மதினா உலமாக்களால் 'காபிர்' என்று முத்திரை பத்வா கொடுக்கப்பட்ட, மீரட் மௌலானா அப்துல் ஹலீம் சித்தீகி ரலியல்லாஹு அன்ஹு அவர்களால் (அல் இம்தாது எனும் பத்திரிகையில் தன்னை ரஸூல் என்று தாவா செய்த அவரின் தீயக் கொள்கை பற்றி விசாரிக்கப்பட்டு அதற்கு அவர் பதில் தராமல் தான் கொண்ட கொள்கையிலேயே உறுதியாக இருந்ததால்) காபிர் என்று பத்வா கொடுக்கப்பட்டவரும், பற்றி ஹிப்ளுல் ஈமான் என்ற நூலில் நாயகம் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் அறிவை பேயன், பைத்தியக்காரன், மதளைக் குழந்தைகளின் அறிவோடு ஒப்பிட்டுப் பேசியவரும் இன்னும் அவர் எழுதிய பல்வேறு நூல்களில் நாயகம் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைப் பற்றி மிகவும் தரக்குறைவாக விமர்சித்தவருமான மௌலானா அஷ்ரப் அலி தானவி என்பவரைப் பற்றி மகிவும் போற்றிப் புகழ்ந்து எழுதியது மட்டுமில்லாமல், அவருக்கு ரஹ்மத்துல்லாஹி அலைஹி என்று துஆவும் கேட்டுள்ளார்.

2.    தன்னுடைய குருவின் வழியைப் பின்பற்றிதான் சிஷ்யரான நூரிஷாஹ்வும் 'இறைவனுடைய காதலை விட மஜ்னூன் காதல் பெரிதா? என்ற தலைப்பின் கட்டுரையில் அஷ்ரப் தானவிக்கு கொடுக்கப்பட்ட காபிர் பத்வா போலி என்றும், ஷம்சு தப்ரேஜ், ஹஜ்ரத் ஜுனைதுல் பக்தாதி போன்றோர்களுக்கு கொடுக்கப்பட்டதைப் போல் இவருக்கும் பத்வா கொடுக்கப்பட்டது' என்று ஷைகுனா செய்யிது நூரி ஷாஹ் ஷைகுனா ஜுஹூ ஷாஹ் நினைவு மலர் பக்கம் 42 ல் எழுதியுள்ளார்.

ஷம்சுத் தப்ரேஜ், ஜுனைதுல் பக்தாதி நாயகங்கள் ரலியல்லாஹு அன்ஹுமா போன்றோருக்கு எப்போது பத்வா கொடுக்கப்பட்டது? நாயகம் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை அவர்கள் தரக்குறைவாக விமர்சித்தார்களா? தங்களை ரஸூல் என்று வாதித்தார்களா? (நவூதுபில்லாஹி மின்ஹா) எதை எதோடு ஒப்பிட்டுப் பேசுகிறார் பாருங்கள் இந்த மார்க்கம் தெரியாதவர்.

இதுபற்றி கேட்டால் அஷ்ரப் அலி தானவி திருந்திவிட்டார் என்றார்கள். அதற்கு ஆதாரம் தாருங்கள் என்று அஹ்லெ சுன்னத் மாத இதழ் மூலம் கேட்டு  சுமார் 15 வருடங்கள் ஆகிவிட்டது. இன்றுவரை அவர்களால் தரமுடியவில்லை. இருந்தால்தானே தருவதற்கு. இன்றுவரை அஷ்ரப் அலி தானவி எழுதிய அந்த கேடுகெட்ட புத்தகங்கள் அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றன. அதுவும் அவருடைய சில்சிலா கலீபாக்களால்.இவ்வாறிருக்க இந்த அஷ்ரப் அலி தானவியை ஏற்ற இந்த தரீகாவை நாம் எவ்வாறு ஏற்றுக் கொள்ள முடியும்?

3.    தாய் 8 அடி பாய்ந்தால் குட்டி 16 அடி பாயும் என்பது பழமொழி. குருவின் கலீபாவான லால்பேட்டை பஷீர் மௌலானா ஷெய்கு பைஜி ஷாஹ்வின் நிலையை பார்க்கப்போனால், ஷைகுனா செய்யிது நூரி ஷாஹ் ஷைகுனா ஜுஹூ ஷாஹ் நினைவு மலர் எனும் நூலில் அவரது வாழ்க்கை சரிதத்தை கூறும்போது பக்கம் 123 ல்,
'கோட்டைக்குப்பம், நெல்லிக்குப்பம், பாண்டிச்சேரி, கடலூர், திண்டுக்கல் போன்ற தப்லீக் இஜ்திமாக்களில் பிரதான பேச்சாளராக இடம் பிடித்தனர்'

'நூருன்னூர்' எனும் நூலின் பக்கம் 11ல் '(பைஜி ஷாஹ்) தப்லீக் இயக்கத்தில் சேர்ந்து 19 வருடங்கள் சேவை செய்தார்கள்' என்று பெருமையாக கூறப்பட்டுள்ளது. தப்லீக் ஜமாஅத் ஒரு வழி கெட்ட இயக்கம் அதில் சேரக்கூடாது என்று சுன்னத் வல் ஜமாஅத் உலமாக்கள் பத்வா வெளியிட்டிருக்க இவர் அதில் சேர்ந்து 19 வருடங்கள் பணியாற்றினார் என்று சொல்லப்படுவது இவரின் கொள்கை எத்தகையது என்பது விளங்குகிறது.

அதே நூல் பக்கம் 11ல்  'ஆரம்பத்தில் சென்னையில் வாழ்ந்த ஷைகுநாயகம் பின்னர் லால்பேட்டைக்கு ஹிஜ்ரத் செய்தனர்' என்றும் கூறியதன் தாத்பரியம் என்ன? ஹிஜ்ரத் என்றால் என்ன? என்று கூட விளங்காமல் உளறி கொட்டியிருக்கின்றனர்.

மேலும் தாய்,தந்தை சொல்லிற்கு கட்டுப்பட்டு நடக்கவேண்டியவர்களையும் தனது கட்டுப்பாட்டிற்குள் வசியம் செய்து வைத்ததையும், பலருக்கு கட்டப் பஞ்சாயத்து செய்து வந்ததையும் ஷெய்குனா செய்யிது நூரிஷாஹ் ஷெய்குனா ஜுஹூரி ஷாஹ் நினைவு மலர் பக்கம் 123, 127ல் கூறியிருப்பது இவரின் கீழ்த் தரத்தையே காட்டுவதாக அமைந்துள்ளது.

3.கடையநல்லூரைச் சார்ந்த எம்.எஸ். அப்துல் காதிர் பாகவி என்ற ஐனி ஷாஹ் என்பவர் 'திருக்கலிமாவின் பொக்கிஷம்(பைஜானே ஷைகீ) எனும் நூலில் 'அணிந்துரை' எனும் பகுதியில் கம்பம் அம்பா நாயகம் அவர்கள் இந்த நூலை மதித்து அணிந்துரை வழங்கியிருப்பதாகவம் அவர்கள் எழுதிய சில வாசகங்களை சொல்லி எழுதியிருப்பதாகவும் சில பொய்களை எழுதி புத்தகத்தை அம்பா நாயகம் அவர்கள் மறைந்த பிறகு வெளியிட்டுள்ளார்.

ஆனால் உண்மை என்னவென்றால், இந்த அணிந்துரையை அம்பா நாயகம் அவர்கள் எழுதவோ சொல்லவோ இல்லை. இதை நிரூபிக்கும் விதமாக, இந்நூலைக் கண்ணுற்ற அம்பாநாயகம் அவர்களின் மகனார் மௌலவி அப்துல் கபூர் ஸயீதி அவர்களும், அம்பா நாயகத்தின் முரீது கிருஷ்ணாபட்டணம் மௌலவி ஜவாஹிர் ஹுஸைன் ஆலிம் மன்பஈ அவர்களும் நேரடியாக அப்போது பொரவாச்சேரி மத்ரஸாவில் பணியாற்றிக் கொண்டிருந்த எம்.எஸ். அப்துல் காதிர் பாகவி அவர்களிடம் சென்று, 'நீங்கள் இந்த புத்தகத்தில் அம்பாநாயகம் அவர்கள் அணிந்துரை எழுதியிருப்பதாக எழுதியிருக்கிறீர்கள். அதை நாங்கள் பார்க்க இயலுமா?' என்று கேட்ட போது, அவர் மழுப்பலாக, 'அவர்கள் சொல்ல நான் எழுதியதில் அவர்கள் கையொப்பமிட்டார்கள'; என்று சொன்னார். அவர்களிருவரும் 'சரி அந்த கையெழுத்தையாவது காட்டுங்கள் நாங்கள் பார்த்துவிட்டுச் செல்கிறோம்' என்றதற்கு, 'iகெயழுத்திற்குப் பதிலாக சிறு கோடு மட்டும் போட்டார்கள்' என்றிருக்கிறார். அவர்களும் விடவில்லை. 'அந்த கோடையாவது காட்டுங்கள்' என்று கூற, அவர் சும்மா தேடுவது மாதிரி நடித்துவிட்டு 'தற்போது இல்லை' என்று சொல்லவும், 'நீங்கள் இதற்கு மறுப்பு வெளியிட வேண்டும'; என்று அவர்களிருவரும் சொல்லிவிட்டு அவ்விடத்தை விட்டு அகன்றார்கள். அம்பா நாயகத்தின் மகனார் அவர்களும், அவர்களுடன் சென்ற மௌலவி அவர்களும் இன்றும் இருக்கிறார்கள். நடந்த சம்பவத்தை நேரில் கேட்டுக் கொள்ளலாம். இவ்வாறு பொய்களையும் புரட்டுகளையும் சொல்லி தம்மை வளர்த்துக் கொள்வதில் மட்டுமே கவனம் செலுத்தும் இவர்கள் மார்க்கத்தையும், இஸ்லாமிய ஞானத்தையும் எங்ஙனம் வளர்ப்பார்கள்?

கம்பம் அம்பா நாயகம் அவர்களிடம் பைஜி ஷாஹ் எப்படிப் பட்டவர்? அவரின் ஞானம் எப்படி? அஷ்ரப் அலி தானவியை ஒப்புக் கொள்கிறார்களே! என்று கேட்ட கேள்விக்கு, பைஜி ஷாஹ் வின் ஞானம் சரியில்லை. நமது ஷெய்குமார்கள் சொன்ன ஞானமாக இல்லை. அஷ்ரப் அலி தானவியை ஏற்றுக் கொண்ட யாரும் சுன்னத் வல் ஜமாஅத்தாக இருக்க முடியாது என்று பதிலளித்தார்கள். இந்தப் பேச்சின் ஒலிப்பதிவு நாடா பலரிடமும் இருக்கிறது.

இதே ஐனிஷாஹ் என்பவர்தான், 'தப்லீக்கும் அதன் தலைவர்களும்' என்ற புத்தகத்தை எழுதி அதில் அஷ்ரப் அலி தானவியின் கேடுகெட்ட கொள்கைகளை விமர்சித்து, அவரின் மேல் விடப்பட்ட குப்ரு பத்வாவையும் எடுத்துக் காட்டியவர். பின்னர் என்ன நடந்ததோ? தெரியவில்லை.

4.    பொரவாச்சேரியில் பணியாற்றிய அப்துஸ்ஸலாம் மௌலவி என்ற ஜமாலிஷாஹ் என்பவர் தப்லீகின் தலைவர்களுள் ஒருவரான மௌலானா ஜகரிய்யா சாஹிபை போற்றிப் புகழ்ந்தும், அவர் மத்ரஸாவில் தான் ஓதியது பெரும் பாக்கியம் என்றும், அஷ்ரப் அலி தானவியை ஒரு மகான் என்றும் போற்றி புகழ்ந்தும் ஒப்புதல் வாக்குமூலம் அளித்ததை அஹ்லெ சுன்னத் மாத இதழ் ஜனவரி 1996 வெளிச்சம் போட்டுக் காட்டி ஜமாலி ஷாஹ்வின் முகத்திரையை கிழித்தது உங்களுக்கு நினைவிருக்கலாம்.

5.    இதே மாதிரிதான் அஷ்ரப் அலி தானவி வழிகெட்ட தப்லீக் ஜமாஅத்தின் மூல குருமார்களுள் ஒருவர் என்று நூரிஷாஹ்வின் பிரதம சீடர் முஸ்லிம் குரல் ஆசிரியர் கனி சிஷ்தி கூறியிருப்பதையும் அஹ்லெசுன்னத் பத்திரிகை வெளியில் கொண்டுவந்தது குறிப்பிபடத்தக்கது.

குருமார்களும், சிஷ்யர்களும் இவ்வாறு ஒன்றுக்கொன்று முரண்பட்டு பைத்தியக்காரத்தனமாக உளறிக் கொட்டுவதற்கு என்ன காரணம்? என்று பார்க்கப்போனால், அவர்களின்  நோக்கம் என்ன என்று தெரியவேண்டுமானால், 'ஷைகுனா செய்யிது நூரிஷாஹ் ஷைகுனா ஜுஹூரி ஷாஹ் நினைவு மலர்' என்ற நூலில் உள்ள ஒரு சம்பவம் உங்களுக்கு அதை தெரியப்படுத்தும். அது இதுதான்:

'சர்காரின் (நூரிஷாஹ்) முரீதான ரெயலி; டிரைவர் ரெயலி; ஓட்டும்போது தண்டவாளத்தில் பெரிய மிருகம் இருப்பதை பார்த்ததாகவும், அதன்மீது மோதினால் பெரிய விபத்து நடந்திருக்கும் என்று எண்ணியதாகவும் ஒன்றுமே புரியாத நேரத்தில் சர்க்காரே வந்து எதிரில் தோன்றினார்கள். அப்படியே வண்டி நின்று விட்டது.

அப்போதுதான் எனக்கு மனதில் ஒரு ஊசல், கடந்த மாதம் நான் ஷெய்குனாவுக்கு சேர்க்க வேண்டியதை சேர்க்கத் தவறி விட்டேன் என்றும் அதை ஷைகுனாவிடம் அந்த முரீது சொன்னார். அதற்கு சர்க்கார் கிப்லா சொன்னார்கள் 'புரிந்து கொண்டால் சரி'.

நூல்: ஷைகுனா செய்யிது நூரிஷாஹ் ஷைகுனா ஜுஹூரி ஷாஹ் நினைவு மலர், பக்கம் 43.

உங்களுக்க இதன் அர்த்தம், தாத்பரியம் இந்த சம்பவத்தின் மூலம் தெரிந்திருக்கும். முரீதுகள் ஷெய்குமார்களுக்கு மாதமாதம் கப்பம் செலுத்துவதும் இதற்காகத்தான் இவர்கள் ஸில்ஸிலா தயாரித்து, தரீகா என்ற பெயரில் ஒன்றை நடத்துகிறார்கள் என்றும் தெரியவந்திருக்கும்.

6.    நூரிஷாஹ்விடம் அதிக நெருக்கமாக இருந்தவரும், பிலாலி ஷாஹ் என்பவருடைய ஷெய்கா இருப்பவருமான ஜுஹூரி ஷாஹ் என்பவரின் வாழ்க்கையை, ஷைகுனா செய்யிது நூரிஷாஹ் ஷைகுனா ஜுஹூரி ஷாஹ் நினைவு மலர் (இந்த மலரை தொகுத்தவர் நூரிஷாஹ்வின் பிரதம சீடர் கனி சிஷ்தி என்பவர்) என்ற நூல் பக்கம் 100 ல் வர்ணிக்கிறது,:'காயலான் சடை வைத்து அதன்மூலம் கள்ள சரக்குகளை வாங்கி வந்ததன் காரணமாக பலமுறை பல்வேறு சங்கடங்களில் சிக்கிய சம்பவங்கள் நமது யூசுப் ஹழரத் எனும் ஜுஹூரி ஷாஹ் கிப்லா அவர்களின் வாழ்க்கையில் நடந்துள்ளது.'

ஆக முரீதுகள் முதல் ஷெய்குமார்கள் வரை அனைவர்களின் வாழ்க்கையையும், கொள்கைகளையும் உங்கள் கண்முன் எடுத்துக் காட்டப்பட்டுள்ளன. இதுதான் இந்த தரீகாவின் நிலை.

சிலர் சொல்கிறார்கள், இந்த தரீகாவிலுள்ள இந்த ஷாஹ் தப்லீகை எதிர்க்கிறார். ரஸூலின் முஹப்பத்தைப் பற்றி அழகாக பேசுகிறார். எனவே அவரை மட்டும் நாங்கள் பின்பற்றுகிறோம் என்று. இந்தக் கூற்று மிகவும் மோசமான கூற்றாகும். ஏனெனில் இவர்களின் தலைவர்கள், ஷெய்குமார்கள் அனைவர்களும் நமது உயிரினும் மேலான நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை மோசமாக பேசியும், எழுதியும் வந்தவர்களை ஆதரித்து பேசுவது மட்டுமில்லாமல் அவர்களை மகான்கள் என்றும் கூறுகின்றனர். இப்படிப்பட்டவர்களின் தொடர்பு கொண்ட தரீகாவில் இருக்கும் வரை யாரையும் சுன்னத் வல் ஜமாஅத்தினர்கள் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள்.

மேலும் பாருங்கள்! வஹ்ஹாபிகள் தங்களது தீவிரவாதப் போக்கை உலகிற்கு காட்டியது தற்போது பத்திரிகைகளில் வெளிவந்து அவர்களின் உண்மை முகம் அம்பலமாகிக் கொண்டிருக்கிறது. இச்சமயத்தில் இந்த வஹ்ஹாபி தரீகாவான நூரிஷாஹ் தரீகாவைச் சார்ந்த மௌலவி அப்துல் நாஸர் மதானி என்பவரின் தீவிரவாதப் போக்கு தற்போது பத்திரிகையில் வெளிவந்துள்ளது. அதனைப் பார்வையிட:http://timesofindia.indiatimes.com/city/bangalore/Madani-reveals-he-was-member-of-Hyderabad-terror-outfit/articleshow/6435291.cms


நூரிஷாஹ் தரீகாவின் மெய்(அஞ்)ஞானமும், ஸூபிகளின் மெய்ஞ்ஞானமும்:

தங்களின் முரீதுகளால் ஷம்சுல் ஆரிபீன் என்று புகழப்படும் நூரிஷாஹ், 'காதிரிய்யா, சிஷ்திய்யா தரீகாவிற்கு ஒரு ஷைக என்பதாகக் கூறிக் கொண்டு கேரளாவில் நுழைந்தார். பொதுமக்களும் சில உலமாக்களும் அவரை அங்கீகரித்தனர். மக்களின் மனதில் நல்ல மதிப்பை பெற்ற பின்னர், 'தரீகத்தே நூரிஷாஹ்' என்ற ஒரு தரீகாவிற்கு தான் தனியொரு ஷைகு என்பதாக தாவா செய்தார். தம்மை பின்பற்றிய பிரத்தியேகச் சீடர்களுக்குப் பற்பல தவறான கருத்துக்களை போதித்தார். அவை அல்லாஹ்வுடைய வாக்கு என்றும், தான் அல்லாஹ்வின் தானமென்றும் அல்லாஹ்வுடைய காலம் என்றும, அவனுடைய தூதரின் நிழல் என்றும் வாதித்தார்.'
                            

                                                                                                                              (ஆதாரம்: ஆயங்குடி பிரசுரம் 15-5-1977)

என்று அறிமுகம் கொடுக்கப்பட்ட நூரிஷாஹ்வின் ஞானம், மஃரிபா சரியானதுதானா? நமது மகான்கள் சொன்னதுதானா? என்று பார்க்கும்போது, கம்பம் அம்பா நாயகம் அவர்கள் சொன்ன சொல் நமக்கு ஞாபகத்திற்கு வருகிறது. அது, அவர்களின் ஞானமே சரியில்லை' என்பதுதான்.

மெய்ஞ்ஞனாத்தைப் பற்றி தெரிந்த மற்ற ஷெய்குமார்கள் சொல்கிறார்கள், 'மெய்ஞ்ஞானத்தைப் பற்றி சரியாக தெரியாமல் உளறும் வார்த்தையாகத்தான்; இருக்கிறது. இது ஞானமே இல்லை' என்று.

ஆனால் இவர்கள் சொல்கிறார்கள், நாங்கள் சொல்லும் ஞானமே சரியானது. மற்றவைகள் தவறானது மட்டுமில்லாமல் மற்ற வஹ்தத்துல் வுஜூது கொள்கையைப் போதிக்கும் மற்ற ஷெய்குமார்கள் தவறிழைத்துவிட்டார்கள். காயல்பட்டணம் தைக்கா சாகிபு வலியுல்லாஹ் சறுகிவிட்டார்கள்.ஹைதராபாத் ஸூபி ஹஜ்ரத் அவர்கள் ஙைரியத்து, ஐனியத்து தெரியாமல் இருக்கிறார்கள்.. ஷிர்க் செய்து விட்டார்கள்.(நவூதுபில்லாஹி மின்ஹா) என்பது போன்ற தவறான செய்திகளை உளறிக் கொட்டுகிறார்கள். தாங்கள் போதிக்கும் தவறான ஞானத்தை 'வஹ்தத்துல் வுஜூது' என்றும் சொல்கிறார்கள்.

இவர்கள் போதிக்கும் ஞானம் வஹ்தத்துல் வுஜூது என்றால், வஹ்தத்துல் வுஜூதைப் போதித்த கௌதுல் அஃலம், அப்துல் கரீம் ஜீலி, முஹ்யித்தீன் இப்னு அரபி, அப்துல் வஹ்ஹாப் ஷஹ்ரானி, ஷாஹ் வலியுல்லாஹ், ஆலா ஹஜ்ரத் பரேலவி ரலியல்லாஹு அன்ஹும் போன்ற எண்ணற்ற மகான்கள் இவர்கள் சொல்லியபடி எங்காவது, எந்த கிதாபிலாவது போதித்திருக்கிறார்கள், எழுதியிருக்கிறார்கள் என்று இவர்களால் ஆதாரத்துடன் சொல்ல முடியுமா? அவர்கள் சொன்ன சொல்லிற்கு இவர்கள்தான் தான்தோன்றித்தனமாக வலிந்துரைகள் செய்திருக்கிறார்கள். இந்த வலிந்துரைகள் மகான்களின் கூற்றுகளுக்கு மாற்றமானவைகளாகும். இவர்களின் ஞானத்தின் சூனியத்தைப் பாருங்கள்:

கௌஸி ஷாஹ் சிஷ்தி காதிரி எழுதியதாக 'நூருன்னூர்' என்ற நூலில் இவர்கள் வெளியிட்ட புதிய ஞானம் பற்றிய வரிகள்:

'வுஜூது ஒன்றாகவும், தாத்து இரண்டாகவும் இருக்கிறது. ஒன்று மவ்ஜூதே ஹகீகிய்யான ஜாத். இன்னொன்று மவ்ஜூதே இளாபிய்யான ஜாத்.  (பக்கம் 76)

'அவனோ அவைகள் ஜாத்திலே வேறானவை. உஜூதிலே ஒன்றானவை என்று அறிகிறான்' (பக்கம் 69)

'உஜூதே முத்லக்தான் ரப்புடைய ஜாத்து. அத தானல்லாத இன்னொரு ஜாத்தான அப்துடைய ஜாத்தை தன்னிலே காட்டுகிறது என்று கூறினால் அது சரிதான்.' (பக் 102)

ஹக்குக்கும் ஹல்குக்கும் உதாரணம் கூறும்போது கடலும் அலையும் போல என்றும், தண்ணீரும் பனிக்கட்டியும் போல என்றும்…..சில விஷயங்களை விளக்குவதற்காகக் கூறியுள்ளார்கள்………அவர்களின் உதாரணங்களை அப்படி அப்படியே நம்பிக் கொண்டு வழி தவறி விடுகிறார்கள்.' (பக் 117)

இவர்கள் கூறுவதிலிருந்து வுஜூது ஒன்று, தாத்து இரண்டு என்றும் ஹக்கிற்கும், கல்கிற்கும் கொடுக்கப்படும் உதாரணங்கள் கடலும் அலையும், தண்ணீரும் பனிக்கட்டியும் என்பது தவறானவை என்றும் வாதிக்கிறார்கள்.

நமது ஷெய்குமார்கள், மகான்கள் சொல்லும் ஞானத்திற்கு முற்றிலும் மாறுபட்டதாகவும், வழிதவற செய்யக்கூடியதாகவும் இருக்கும் இவர்களின் கூற்றை ஏற்றுக் கொண்டவர்களுக்கு ஏற்படும் தவறுகள் மற்றும் அபாயங்கள் பற்றி இங்கே ஹைதராபாத் ஸூபி மகான் குத்புஜ் ஜமான் மௌலவி முஹம்மது அப்துல் காதிர் ஸூபி ஹஜ்ரத் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் எழுதிய 'அல்ஹகீகா' ( தமிழில்: மௌலவி அஸ்ஸெய்யிது ஜலாலுத்தீன் பூக்கோயா தங்கள் ஸூபி ஹஜ்ரத் ரலியல்லாஹு அன்ஹு)என்ற நூலில் விளக்கம் தந்திருப்பதை எடுத்துக் காட்டுகிறேன்:

தாத், உஜூது என்ற இரு பெயர்கள் ஒரே அர்த்தத்தை கொடுக்கக் கூடியன. எதன்பேரில் சிபாத்துகள் சேர்க்கப்படுமோ அதற்கு தாத்து என்று பெயர் வைப்பதை ஸூபியாக்கள் வழக்கமாக்கிக் கொண்டார்கள்.

ஹகீகிய்யான உஜூதாகிறது தாத்தாகும். ஹகீகிய்யான தாத்தாகிறது உஜூதாகும். சில அனுபவ அறிவில்லாதவர்கள் ஊகித்ததைப் போல ஹகீகிய்யான உஜூதாகிறது தாத்திற்கு மேலதிகமானதாக இல்லை.

உஜூதாகிறது அவர்களின் யூகத்தின் படி தாத்தை விட அதிகமானதாக ஆகியிருக்குமானால், தாத்தானது தன்னுடைய தாத்தின் மர்தபாவில் அது தனித்த இல்லாததாகவும், உஜூதின் பக்கம் தேவைப்பட்டதாகவும் ஆக வேண்டி வரும். ஆகவே தேவைப்பட்ட பொருள் இலாஹாக இருப்பதற்கு தகுதியற்றதாகும்.

'தாத்து உஜூதைத் தேடுது' என்ற கூற்று அர்த்தமற்றதாகும். ஏனெனில் தேட்டம் என்பது உஜூதிய்யான விஷயமாகும். உஜூதிய்யான விஷயமாகிறது எவ்வாறு அதமிய்யான விஷயத்திலிருந்து உருவாகும்? அதமிய்யான விஷயமாகிறது அதனடைய மர்தபாவில் இல்லாமலான தாத்தாகும்.

அவர்கள் தாத்தை திஹ்னிய்யான (கற்பனையான) விசயம் என்று சொல்வார்களேயானால், அந்த தாத்தாகிறது இரண்டாவதான மஃகூலான வஸ்துக்களாக வேண்டிவரும். அப்படியானால் அதற்கு வெளியில் உஜூது இல்லை. அப்பொழுது இலாஹ் என்பது வெளியில் உண்டாகாத மஃகூலான(விளங்கப்பட்ட) விசயமாகி விடும்.

இவர்கள் இரண்டு தாத்தை தரிபடுத்துவது ஏனெனில், அஹ்காம், ஆதாறுகளை மேலான அல்லாஹ்வின் பக்கம் சேர்ப்பது இயலாது என்ற காரணத்திற்காக. மேலம் தாத்தும், உஜூதும் ஒன்று என்று சொல்கிறவர்களை காபிராக ஆக்குகிறார்கள்.

தாத்துல் மும்கினை – தீமை விளையுமிடமாகவும்,
தாத்துல் வாஜிபை – நன்மை விளையும் இடமாகவும் ஆக்கினார்கள்.

இது கலப்பற்ற ஷிர்க் என்பதை அவர்கள் அறியவுமில்லை. குர்ஆனின் நஸ்ஸான ஆயத்துகளுக்கு மாறுபடுகிறார்கள். இதிலிருந்து பல்வேறு ஆட்சேபணைகள் கிளம்புகின்றன.

1.    தாத்துல் மும்கின் என்பது அவர்களிடத்தில் ஆக்கப்படாததும்,தன் தாத்தைக் கொண்டு தானே நிற்கிறதும் வெளியாக்குகிறவன், உண்டாக்குகிறவன், படைக்கிறவன் பேரில் தேவையில்லாதிருக்குமானால் மும்கினுடைய தாத்துகள் பூர்வீகமானதாகி விடும். பூர்வீகமானது எண்ணிக்கையாவது இங்கு ஏற்படுவதால் இது தௌஹீதுக்கு மாற்றமாகும்.
2.    தாத்துல் மும்கின் அவர்களிடத்தில் ஆக்கப்பட்டதாக இருப்பின், உண்டாக்குகிறவனுடைய உண்டாக்குதல் எனும் குணபாடு நிகழுவது மவ்ஜூதான விஷயத்திலா? அல்லது மஃதூமான விஷயத்திலா? அந்த உண்டாக்குதல் அல்லாஹ்வின் தாத்துக்கு வேறான உஜூதிய்யான விஷயத்தில் நிகழுமானால் இங்கேயும் பூர்வீகம் எண்ணிக்கையாவது நிர்ப்பந்தமாகும். இனி அந்த உண்டாக்குதல் எனும் குணம் இல்லாத விஷயத்தில் நிகழுமானால், இல்லாத விஷயம் குணபாட்டை ஏற்றுக் கொள்ளாது.
3.    மும்கினுடைய தாத்தாகிறது அல்லாஹ்வின் இல்மின் மர்தபாவில் தரிபட்டது என்று சொன்னால், நிச்சயமாக அல்லாஹ்வுடைய இல்மானது மற்ற கமாலிய்யத்தான சிபத்துக்களைப் போல தாத்தின் ஐனாகும். இல்மிய்யான கோலங்கள் என்பது அல்லாஹ்வுடைய அஸ்மாக்கள் ஆகும்.

இல்மிய்யான கோலங்கள் தாத்துக்கு வேறானதும், புதிதானதும் என்று சொன்னால், அப்போது தாத்துல் வாஜிபு புதிதுகளுக்கு இடமளிப்பதாகிவிடும்.

மும்கினாத்துகளுடைய தாத்துக்கள் இல்முடைய மர்தபாவை விட்டும் வெளியேறுவது அல்லாஹ்வுடைய இல்மில் குறைவும், இல்முடைய மர்தபாவில் அறியாமையும் ஏற்படும். ஆனால் மும்கினாத்துகளின் தாத்துக்கள் அல்லாஹ்வின் இல்மில் தரிபட்ட கோலங்களாகும். ஆகவே அந்த கோலங்களாகிறது ஆதியிலிருந்து அந்தம் வரை இல்முடைய மர்தபாவில் கட்டுப்பட்டதாகும். அது வெளியில் வெளியாவதில்லை. அப்போது வெளியில் ஒரு தாத்தைத் தவிர அல்லது ஒரு உஜூதைத் தவிர எட்டிக் கொள்ளப்படவில்லை.

செயல்களாகிறது நல்லதோ கெட்டதோ அது உஜூதிய்யான விஷயமாகும். உஜூதிய்யான விஷயம் அதமிய்யான விஷயத்திலிருந்து உண்டாகாது. உஜூதிய்யான விஷயத்தை அதமிய்யான விஷயத்'தில் சேர்ப்பது இரண்டு இலாஹை தரிபடுத்துவது ஆகும். மஜூஸிகளின் இமாமான ஸறது, சத்து சொல்வது போல். அதாவது:

ஒரு இலாஹ் நன்மையைப் படைக்கிறான். ஒரு இலாஹ் தீமையைப் படைக்கிறான் என்று. ஆனால், நன்மையையும், தீமையையும் அல்லாஹ் தன்பக்கம் சேர்த்துக் கொண்டான். ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அதை ஈமானின் ஷர்த்தாக (அதாவது நல்லதும், கெட்டதும் அல்லாஹ்வின் புறத்திலுள்ளது என்று ஈமான் கொள்வது) ஆக்கினார்கள்.

இந்த இரு தாத்தை தரிபடுத்துபவர்கள் நன்மையை அல்லாஹ்வின் பக்கமும், தீமையை மும்கினுடைய தாத்தின் பக்கமும் சேர்ப்பதினால், அல்லாஹ் ரஸூலுக்கு மாறு செய்து விட்டார்கள். மேலும் நல்லதும், கெட்டதும் அல்லாஹ்வின் புறத்திலுள்ளது என்று சொன்னவர்களை காபிர்களாகவும் ஆக்கிவிட்டார்கள். (நவூதுபில்லாஹி மின்ஹா)

இத்துடன் அவர்களுடைய கொள்கையின் பேரில் வேறு ஆட்சேபணைகளும் உண்டு. அவை:

1.    வெளியில் மவ்ஜூதான மும்கினில் மூன்று விஷயங்கள் ஒன்று சேர்கிறது.

                                  1.    தாத்துல் மும்கின் 2. தாத்துல் வாஜிபு 3. உஜூது.

அவர்களிடத்தில் உஜூது என்பது தாத்திய்யான தேட்டத்தைக் கொண்டு தாத்துல் வாஜிபின் பேரில் இடையில் வந்த விஷயமாகும். தாத்திய்யான விஷயம் தாத்தை விட்டும் பிரியாது. மேற்கூறப்பட்ட சேர்க்கை ஒன்று சேர்வது நிர்பந்தமாகும்.

2.    நிச்சயமாக உஜூது வாஜிபுடைய தாத்துக்கு ஆதேயமாகவும், வாஜிபுடைய தாத்து அந்த உஜூதுக்கு ஆதாரமாகவும் உள்ளது.ஆதேயப் பொருள் ஆதாரப் பொருள் இன்றி நிற்பதில்லை. ஆதாரப் பொருளின் நிலையானது ஆதேயப் பொருளின் நிலையாகும். மும்கினுடைய (வெளியில் உண்டான) தாத்து அசம்பாவிதம் என்பதாக இதிலிருந்து தெரிகிறது. காரணம் இரு ஆதாரப் பொருள்களுக்கு ஒரு ஆதேயம் இருப்பது அசம்பாவிதம் என்பதற்காகவும், முதல் ஆதாரப் பொருளை விட்டும் அந்த ஆதேயம் பிரிவது அசம்பாவிதம் என்பதற்காகவும் ஆகும்.

3.     சந்தேகமில்லாமல் மும்கினுடைய தாத்து இல்லாமலானதாகும். வெளியில் உண்டான தாத்துல் மும்கின்:
உஜூது வந்து சேர்ந்ததன் பின் உண்டானால், ஹகீகத்து புரள்வது அசம்பாவிதமாகும்.

அது இல்லாமலிருப்பதுடன் உஜூதுடன் சேர்ந்தது என்றால், இரண்டு எதிரிடைகள் சேர்வது நிர்பந்தமாகும்.

மும்கினுடைய தாத்து அதனுடைய இல்லாமை எனும் அசலின்பேரில் நிற்க உஜூது அதனுடைய கோலத்தின் பேரில் வெளியானால், வாஜிபுடைய தாத்து ஒன்று என்றும், வெளியில் வெளியானது அதனுடைய உஜூதுதான் என்றும் விளங்கும்.

4.    ஒரு இல்லாத வஸ்து அதனைப்போன்று இல்லாத வஸ்துவை உண்டாக்குவதின்பேரில் சக்தி பெறுவது நிர்பந்தமாகும். வெளியில் உண்டான மும்கினுடைய உஜூதிலிருந்து உண்டான செயல்களாகிறது தனித்த மும்கினுடைய தாத்திலிருந்து உண்டாகுமானால் சுயமே இல்லாத ஒன்றிலிருந்து உள்ள விஷயம் உண்டாவது அசம்பாவிதமாகும்.

மும்கினுடைய தாத்திலிருந்தும், வாஜிபுடைய தாத்திலிருந்தும் கூட்டாக செயல்கள் உருவானால் உஜூதானது தீமைகளை உருவாக்குவதில் கூட்டாகி விட்டது. இது தாத்து இரண்டு என்று சொல்பவர்களின் நம்பிக்கைக்கு பிழையாகும்.

வாஜிபுல் உஜூதிலிருந்து தீமையான செயல்கள் உண்டாகுமேயானால், அப்போது உஜூது தீமைகள் உண்டாவதற்கு இடமாகிவிடும். இது நன்மைகள் விளையும் இடத்தில் தீமையைச் சேர்ப்பது என்ற ஆபத்தில் உங்களை இட்டுச் செல்லும். ஆகவே இரு தாத்தை தரிபடுத்துவது சரியில்லை. தரிபடுத்துவது ஷிர்க்காகும்.

5.    ஒரு உதாரணம்: வெளியில் உண்டான ஜெய்து என்பவன் உங்களிடத்தில் அல்லாஹ்வுக்கு வேறானவன் அல்ல. ஏனெனில் நீங்கள் உஜூது ஒன்று என்று ஈமான் கொண்டுள்ளீர்கள். அப்போது வெளியில் உண்டான ஜெய்துவிடமிருந்து உண்டாகும் தீமைகள் அனைத்தும் அல்லாஹ்விலிருந்தே உண்டாகிறது. ஜெய்துடைய தாத்தாகிறது அல்லாஹ்வின் இல்மின் மர்தபாவில் கட்டுப்பட்டதாகும். அது உஜூதின் வாடையைக் கூட நுகரவில்லை. ஆகவே ஜெய்து என்பவனிலிருந்து உண்டாகக் கூடிய தீமைகளை ஜெய்தின் பக்கம் சேர்ப்பதானது உங்களுடைய நம்பிக்கையின்(ஜைது என்பவன் அல்லாஹ்வாகும்) படி அறவே இல்லாத ஜெய்தின் பக்கம் சேர்ப்பது மடமையிலும் மடமையாகும். நீங்கள் எதிலிருந்து விரண்டு ஓடினீர்களோ அதன்பேரில் முகம் குப்புற விழுந்து விட்டீர்கள்.

உண்மை ஸூபியாக்களின் நிலை:

தாத் என்பது உஜூதின் ஐனாகும். உஜூது என்பது தாத்தின் ஐனாகும். ஆலமானது அதன் எல்லாக் கௌனுகளைக் கொண்டும் ஹக்கான உஜூதுடைய ஷுஊனாத்துகளும் சுற்றுகளும் ஆகும்.

வெளியில் மவ்ஜூதான பொருள்கள் அல்லாஹ்வின் தாத்துக்கு வேறானவை இல்லை. அல்லது தாத்தின் ஷுஊனாத்துகளுக்கு வேறானவை இல்லை. ஷுஊனாத்துக்கள் மட்டிலடங்காதது ஆகும். அதனுடைய சுற்றுகளும் எண்ணிக்கையற்றதாகும். கௌனுகளுடைய எல்லா அணுக்களும் ஆதியிலிருந்து அந்தம் வரை  ஷுஊனாத் என்னும் உடையில் வெளியாகிக் கொண்டிருக்கிறது.

அவன் ஒரு ஷஃன்(காரியத்தின்) உடைய உடையில் இரண்டு தடவை வெளியாவதில்லை. ஒவ்வொரு அணுவின் பேரிலும் சொந்தமான ஒரு கோலத்தைக் கொண்டு வெளியாகிறான். அந்த சொந்தமான கோலத்தைக் கொண்டு வேறு எந்த அணுவிலும் ஒரு காலமும் வெளியாக மாட்டான்.

வெளிப்பாட்டில் இந்த அதிகத்துடனேயே அதிகமாகவில்லை, எண்ணிக்கையாகவில்லை, பேதகமாகவில்லை. அவன் எப்பொழுதும் முன்னுள்ள மாதிரியே இருக்கிறான். அவன் பன்மையுடன் ஒருவனாகவும், ஒருமையுடன் பன்மையானவனாகவும் தாத்தில் அல்லது உஜூதில் ஒருவனானவனும் ஆவான். சுற்றுகளிலும் ஷுஊனாத்துகளிலும் பலதானவனும் ஆவான்.

இத்துடனே ஒருமை பன்மையினதும் பன்மை ஒருமையினதும் ஐனாகும். அவனின் நிலைகளாகிறது அவனின் தாத்தின் ஐனாகும். அவனின் தாத்தாகிறது அவனது நிலைகளின் ஐனாகும். மட்டிலடங்கா ஷுஊனாத்துக்களுடைய அவன் அவனுடைய ஷுஊனாத்துக்களுடைய ஐனாகவும், சுற்றுகளின் ஐனாகவும் (தனி நிலையிலும் கூட்டான நிலையிலும்) ஆகிறான்.

இதுபோல்தான் அவனது ஷுஊனாத்துக்களை(காரியங்களை)க் கொண்டு மொத்தமாக ஐனாகிறான்(தானாகிறான்). தனித்த நிலையிலும் சேர்ந்த நிலையிலும் அவன் எல்லாவற்றினதும் ஐனாகும். எல்லாம் அவனது ஐனுமாகும்.

ஆகவே தாத்தாகிறது ஒரு தாத்தாகும். ஷுஊனாத்துகள் பலதாகும். கடலின் தாத்து ஒன்றானதாகவும், அதன் அலைகள் என்னும் சுற்றுகள் பலதானதும் போல, கடலின் தாத்தாகிறது தனித்தனி எல்லா அலைகளினதும் ஐனாகும். இதுபோலவே மொத்தமாக எல்லா அலைகளினதும் ஐனுமாகும்.

ஐனு ஒன்றானதாகவும், சுற்றுகள் அநேகமானதாகவும் இருக்கும். 'லா மவ்ஜூத .இல்லல்லாஹ்'. இதுதான் ஹகீகிய்யான தௌஹீதுத் தாத்தியாகும்.
   

                            ஆக நூரி ஷாஹ் தரீகா என்பது நமது சுன்னத் வல் ஜமாஅத்தைச் சார்ந்த மகான்களின் நடைமுறைகளுக்கு முற்றிலும் மாறுபட்ட ஒன்று என்பது உங்கள் முன் எடுத்துக் காட்டப்பட்டிருக்கும் ஆதாரங்கள் மூலம் நிரூபணம் ஆகியிருக்கிறது. தெளிவு பெறுங்கள்!!!

ஆதார நூல்கள்:

1.    திருக்கலிமாவின் பொக்கிஷம்.
2.    நூருன்னூர்
3.    15-5-1977 ஆயங்குடி பிரசுரம்
4.    அல் ஹகீகா
5.    தப்லீக் ஜமாஅத் என்றால் என்ன?
6.    ஷைகுனா செய்யிது நூரிஷாஹ் ஷைகுனா ஜுஹூரி ஷாஹ் நினைவு மலர்.
7.    மெய்ஞ்ஞான வழித் தொடர் ஷஜ்ரா
8.    அஹ்லெ சுன்னத் மாத இதழ்கள்.
9.    தப்லீக்கும் அதன் தலைவர்களும்.
10.    சமஸ்த கேரள ஜம்இய்யத்து உலமா சபை தீர்மானம்.

முற்றும்.

1 Comment found

User

ishanahvi

masa allah good  proof thanx for your newse