நபி யூனூஸ் அலைஹிஸ்ஸலாம்

நபி யூனூஸ் அலைஹிஸ்ஸலாம்

By Sufi Manzil 0 Comment December 21, 2014

Print Friendly, PDF & Email

ஹழ்ரத் யூனூஸ் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் ஹழ்ரத் ஹூத் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் வழித்தோன்றலில் வந்தவர்கள். இவர்களது தாயார் பெயர் மத்தா என்றும்> பதூரா என்றும் கூறப்படுகிறது. தந்தையின் பெயர்தான் மத்தா என்ற கூற்றும் உள்ளது. ஹழ்ரத் ஹாரூன் அலைஹிஸ்ஸலாம் அவர்களது வழித்தோன்றலில் வந்தவர்கள் என்ற குறிப்பும் காணப்படுகிறது. இவர்களது காலம் கி.மு.860லிருந்து கி.மு. 784வரை என்று சரித்திர ஆசிரியர்கள் கூறுகிறார்கள்.

ஈராக் நாட்டின் தஜ்லா நதிக் கரையோரத்தில் உள்ள யூனூஸ் நபி மலை என்ற பெயரில் பிரசித்திப் பெற்ற ஒரு குன்று உள்ளது. அப்பகுதியில்தான் நைனுவா என்ற பெயருடன் ஒரு நகரம் இருந்தது. அந்நகரில் சுமார் ஓரிலட்சம் தகடகளட வாழ்ந்து கொண்டிருந்தனர். இவர்கள் அனைவரும் விக்கிரகத்; தொழும்பர்களாக இருந்தனர். அவர்களது பாதங்கள் மூன்றடி நீளமுள்ளதாக இருந்தது.

அக்காலத்தில் அஷ்இயா என்ற பெயருடன் இஸ்ரவேலர்களில் ஒரு நபியாகவும், ரசூலாகவும் இருந்தார்கள். ஹஸ்கியா என்பவர் இஸ்ரவேலர்களின் அரசராக இருந்தார். நைனுவா மக்கள் இஸ்ரவேலர்கள் மீது படையெடுத்து, அவர்களில் பலரைச் சிறைபிடித்துக் கொண்டனர்.

அவர்களை மீட்க அரசரின் ஆணைப்படி, யூனூஸ் நபி அவர்கள் நைனுவா சென்றனர். அந்நகரை முல்இப் இப்னுல் இர்ஷா என்ற அரசன் ஆண்டு வந்தான். அவனை நோக்கி யூனூஸ் நபி அவர்கள், ‘தான் பனூ இஸ்ரவேலர்களின் நபி என்றும்> நீங்கள் விக்கிரகதொழும்பை விட்டுவிட்டு முஸ்லிமாகி விடவேண்டும் என்றும், சிறையில் அடைக்கப்பட்டுள்ள இஸ்ரவேலர்களை விடுவிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்கள். அந்த அரசன் அவர்களை ஏளனமாகப் பார்த்து சிரித்தான். அவர்களை விடவில்லை.

யூனூஸ் நபி அவர்கள் தொடர்ந்து மூன்று தினங்கள் வரை இதே கோரிக்கையை அரசனிடம் வேண்டியபடி இருந்தனர். அவன் செவிசாய்க்கவில்லை. அதன்பிறகு அரண்மனையை விட்டு வெளியேறி நகருக்குள் சென்று மக்களிடம் இஸ்லாமியப் பிரச்சாரம் செய்தனர். விக்கிரக வணக்கத்தை விட்டுவிடுமாறும், அல்லாஹ்வை மட்டும் வணங்குமாறும் வீதிதோறும்> வீடுதோறும் இரவும் பகலும் பிரச்சாரம் செய்து கொண்டிருந்தனர். அம்மக்களில் ஒருவர் கூட இஸ்லாத்தை ஏற்கவில்லை.

இதைக் கண்ட அரசன் நபி அவர்களை சிறையில் அடைத்து உண்ண உணவும்>தண்ணீரும் கொடுக்காமல் மிகவும் கொடுமைப் படுத்தினான். ஆயினும் அவர்கள் சிறையில் மிகவும் தெம்பாகவே காணப்பட்டனர். இது சிறைப் பணியாளர்களுக்கு மிகவும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. நபி அவர்களிடம் கேட்டதற்கு எனக்கு அல்லாஹ் சுவர்க்கத்திலிருந்து தினமும் தவறாது உணவு தருகிறான். அதனைத்தான் நான் சாப்பிட்டு வருகிறேன் என்று கூறினர்.

சிறைப்பணியாளர்கள் இதைக் கேட்டதும் மிகவும் ஆச்சரியப்பட்டு, நமக்கும் இதுபோல் கிடைக்குமா? என்று கேட்கவாரம்பித்தனர். அல்லாஹ் நாடினால் கிடைக்கும் என்று நபி அவர்கள் பதிலளித்தனர். அவர்களும் இஸ்லாத்தை தழுவ தயாராகிவிட்டனர்.

இச்செய்தி அரசருக்கு தெரியவந்ததும், நபி அவர்களை நடுசந்தியில் நிறுத்தி சிரச்சேதம் செய்ய முடிவெடுத்தான். ஆனால் மந்திரிகள் பயமுறுத்தியதன் காரணமாக அந்த யோசனையை கைவிட்டான். ஆனால் அவர்களையும் அவர்கள் குடும்பத்தார் அனைவரையும் அந்த ஊரைவிட்டே விரட்டி விட்டான். அதன்பிறகு சிலகாலம் வரை பற்பல இடங்களில் சுற்றிக் கொண்டேயிருந்தார்கள். மீண்டும் அல்லாஹ் அவர்களை நைனுவா நகருக்கே செல்லுமாறு வஹீ மூலம் அறிவித்தான். இத்தடவை நைனுவா மக்கள் முன்பை விட அதிகமாக எதிர்க்க ஆரம்பித்தார்கள். கல்லால் அவர்களை அடிக்க ஆரம்பித்தார்கள். அவர்கள் உடல் முழுவதும் இரணகளமாகிவிட்டது.

இவ்வளவு எதிர்ப்பிக்கிடையிலும் சுமார் 30ஆண்டுகள் அவர்கள் உபதேசித்தார்கள். ஆனால் அதில் இருவர் மட்டுமே அவர்களைப் பின்பற்றியதாக ஒரு குறிப்பு தெரிவிக்கிறது.

மனம் சலித்துப் போன யூனூஸ் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் நைனுவா மக்களை நோக்கி ‘நீங்கள் இவ்வாறு என் வேண்டுகோளுக்கு செவி சாய்க்காது போனால் அல்லாஹ்வின் கோபப்பார்வை உங்கள் மீது இறங்கி விடும். ஜாக்கிரதை’ என்று எச்சரித்தார்கள்.

அதற்கு அந்த நைனுவான மக்கள், உங்களுடைய அல்லாஹ்வின் கோபப்பார்வை எங்களை என்ன செய்துவிடும் என்று கேலி செய்து கைகொட்டி சிரித்தார்கள்.

நெருப்பு மழையை பொழியச் செய்து உங்களையெல்லாம் அழித்து விடுவான் என்றார்கள்.

அப்படியா! அவ்வளவு சக்தி உண்டா அல்லாஹ்வுக்கு? என்று கேலியும் கிண்டலும் செய்தார்கள்.

அதற்கு யூனூஸ் நபி அவர்கள் ‘ அல்லாஹ்வின் சக்தியைப் பற்றி நீங்கள் இவ்வாறு கிண்டலும்> கேலியும் பேசுவது நல்லதல்ல. மீண்டும் நான் உங்களை எச்சரிக்கிறேன். இந்த விக்கிரகவணக்கத்தை விட்டொழித்து அல்லாஹ்வுக்கு மட்டும் சிரம்பணிந்து வாருங்கள். இல்லாவிட்டால் இன்னும் 40நாளில் நெருப்புமழை பொழிந்து நீங்கள் அனைவருமே அழிந்து போவீர்கள் ‘ என்று கடும் கோபத்துடன் சொன்னார்கள்.

அதன்பிறகு அவர்கள் அந்நகரை விட்டுப் புறப்பட்டு ஒரு மலை உச்சி மீது அமர்ந்து கொண்டார்கள். அங்கிருந்தவாறே அவர்கள் ‘யாஅல்லாஹ் நான் அந்த நைனுவா மக்களை திருத்த எவ்வளவோ பாடுபட்டேன். அவர்கள் கடைசிவரை திருந்தவே இல்லை. என்னை கொடுமைப்படுத்தினதைப் பற்றி கூட நான் பொருட்டாக நினைக்கவில்லை. ஆனால் உன்னுடைய சக்தியை பற்றி இழிவாக பேசியது பற்றிதான் என்னால் பொறுக்க முடியாமல் போய்விட்டது. அதனால் தான் நாற்பது நாட்களில் நெருப்பு மழை பொழிந்து அவர்கள் எல்லோரும் அழிந்து போவார்கள் என்று சாபமிட்டு விட்டேன்’  என்று சொன்னார்கள். மேலும்> யா அல்லாஹ் நான் கூறிய தவணைப்படி நாற்பது நாட்களானதும் அவர்கள் மீது நெருப்பு மழை பொழிந்து> நான் கொடுத்த வாக்கை நிறைவேற்றுவாயாக! என்ற பிரார்த்தித்தவண்ணம் இருந்தார்கள்.

யூனூஸ் நபி சொன்ன நாற்பது நாட்களில் 39நாட்கள் கழிந்தன. அம்மக்களில் ஒருசிலருக்கு ஒருவித அச்சம் பிடித்துக்கொண்டது. நாற்பதாவது நாள் அரசன் உட்பட மக்கள் அனைவரும் வானத்தைப் பார்த்தவண்ணம் குலை நடுங்கிப் போய் இருந்தனர். பொழுது புலர்ந்து தென்றல் காற்று ஜிலு ஜிலு என்று வீசவாரம்பித்ததுமே எல்லோருக்கும் ஒரே ஆச்சரியமாக போய் யூனூஸ் எவ்வளவு பெரிய பொய் சொல்லி நம்மை ஏமாற்றிவிட்டார். நல்லவேளையாக அவர் சொல்லைக் கேட்காமல் நமது தெய்வங்களை பூஜிப்பதை நிறுத்தவில்லை என்று பேசவாரம்பித்தார்கள்.

இதனைக் கண்ட அரசனுக்கு கோபம் வந்து யூனூஸை பிடித்து தண்டனை கொடுக்க விரும்பி ஊரெல்லாம் அறிவிக்கச் செய்துவிட்டார். சிறிது நேரத்திற்குள் திடீரென சூழ்நிலை மாறத் துவங்கியது. தென்றல் காற்று ஓயத் தொடங்கி, இலேசான உஷ்ணக் காற்று வீசவாரம்பித்தது. போகப் போக அதன் வேகமும் உஷ்ணமும் கூடிக் கொண்டே சென்றது. அடுத்து யாருமே எதிர்பாராவண்ணம் சிவப்பு மேகங்கள் தீப்பிழம்புகள் பொழியத் தொடங்கின.

இத்தகைய பயங்கர நிலை ஏற்பட்ட பிறகுதான் அந்த மக்களுக்கு ஹழ்ரத் யூனூஸ் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் கூற்றில் நம்பிக்கை பிறந்தது. அவர்களைக் கண்டுபிடித்து அல்லாஹ்வின் கோபத்தை தணிக்க அவர்கள் மூலம் உபாயத்தை தேடலாம் என்று சிலர்> அவர்களைத் தேடத் துவங்கினர். அரசனும் தன்னுடைய முந்தைய உத்திரவை மாற்றி யார் ஹழ்ரத் யூனுஸ் அலைஹிஸ்ஸலாம் அவர்களைத் தேடி என்னிடம் அழைத்து வருவார்களோ அவர்களுக்கு பொற்காசுகள் தருவதாக அறிவித்து விட்;டான். நகர மக்கள் அனைவரையும் நெருப்பு மழை நிற்கும்வரை ஸஜ்தாவில் விழுந்து அல்லாஹ்விடம் அழுதுபுலம்பி பாவமன்னிப்புக் கேட்டு கொண்டே இருங்கள் என்று உத்திரவு போட்டதோடு> தானும் ஸஜ்தாவில் சிரம் வைத்து அழுது புலம்பிப் பாவமன்னிப்பு கேட்க ஆரம்பித்துவிட்டான்.

நைனுவா மக்களின் நிலை இவ்வாறு மாறிவிட அல்லாஹ் நைனுவா மக்களையும்> அரசரையும் மன்னித்து> நெருப்பு மழையை நிறுத்திவிட்டு> மீண்டும் தென்றல் காற்றை வீசச் செய்து விட்டான். நைனுவா நகர மக்களும் தாங்கள் வணங்கி வந்த விக்கிரகங்களையெல்லாம் அடித்து நொறுக்கிவிட்டு ஏகவல்லவனாம் அல்லாஹ்வை வணங்க ஆரம்பித்து விட்டார்கள்.

இதைத்தான் அல்குர்ஆன் 10:98ல் விபரமாக கூறுகிறது.

فَلَوْلَا كَانَتْ قَرْيَةٌ آمَنَتْ فَنَفَعَهَا إِيمَانُهَا إِلَّا قَوْمَ يُونُسَ لَمَّا آمَنُوا كَشَفْنَا عَنْهُمْ عَذَابَ الْخِزْيِ فِي الْحَيَاةِ الدُّنْيَا وَمَتَّعْنَاهُمْ إِلَىٰ حِينٍ

தங்களுடைய ஈமான் பலனளிக்குமாறு (நம்பிக்கை கொண்டு வேதனையிலிருந்து தப்பித்துக் கொண்ட) யூனுஸுடைய சமூகத்தாரைப்போல்   மற்றோர் ஊரார் ஏன் ஈமான் கொள்ளாமல் இருக்கவில்லை? அவர்கள் (யூனுஸுடைய சமூகத்தார்) ஈமான் கொண்டதும் இம்மையில் இழிவுபடுத்தும் வேதனையை அவர்களை விட்டும் நாம் அகற்றினோம்; அன்றி     சிறிது காலம் சுகம் அனுபவிக்கும் படியும் வைத்தோம். – அல்குர்ஆன் 10:98

நைனுவா நகரில் ஏற்பட்ட இந்த மாறுதல் ஹழ்ரத் யூனூஸ் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு அறிவிக்கப்படவில்லை. சுமார் நாற்பது நாட்கள் கழித்து அவர்கள் மலை உச்சியிலிருந்து இறங்கி அந்நகரை பார்த்து வர எண்ணி அந்நகரை நோக்கி நடக்கவாரம்பித்தார்கள். நகரை நெருங்கியதும்அங்குள்ள மக்கள் சந்தோஷமாக இருப்பதைக் கண்டு நான் இட்ட சாபப்படி, அல்லாஹ்விடம் நாம் கேட்ட துஆ ஏற்றுக்கொள்ளப்படவில்லையா? திரும்பவும் அந்த ஊருக்குள் நுழைந்தால் நான் பொய்யன் என்று அந்த மக்கள் என்னை தூற்றமாட்டார்களா? என்று அவர்கள் கலங்கி விட்டார்கள். அதனால் மனைவி, மக்கள் குடும்பத்தோடு நெடுதூரத்திற்கு சென்றுவிட எண்ணி புறப்பட்டு விட்டார்கள்.

போகும்வழியில் இடையில் தஜ்லா நதி குறுக்கிடவே, அதைத் தாண்டுவதற்கு படகைத் தேடவாரம்பித்தார்கள். அங்கு படகு தென்படாமல் போகவே மூத்த மகனை தூக்கிக் கொண்டு நீந்தி அக்கரையில் விட்டு வந்தார்கள். பிறகு இளையமகனை தூக்கி நீந்திக் கொண்டு வரவே தண்ணீரின் வரத்து அதிகரிக்கவே> அந்த மகன் கைதவறி ஆற்றினுள் விழுந்துவிட்டான். நீர் அதை அடித்துக் கொண்டு போய்விட்டது. அக்கரையில் விட்ட மூத்த மகனை ஓநாய் ஒன்று தூக்கிக் கொண்டு ஓட ஆரம்பித்து. அதை துரத்திக் கொண்டே சென்றார்கள். பிடிக்கமுடியவில்லை. திரும்பவந்து அக்கரையில் உள்ள மனைவியையாவது காப்பாற்றலாம் என்று எண்ணி வந்த அவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. அவர்கள் மனைவியை அவ்வழியே வந்த அடுத்த ஊர் அரசன் பலவந்தமாக வாகனத்திலமர்த்திக் கொண்டு பறந்து ஓடிவிட்டான்.

மறுகரை வந்து பார்த்ததும் மனைவி இல்லாததால் மிகவும் கலங்கி போய்விட்டார்கள். என்னசெய்வது என்றே தெரியவில்லை. எல்லாம் அல்லாஹ்வின் நாட்டப்படியே நடக்கும் என்ற எகீன் கொண்டு கால்போன போக்கில் நடக்கவாரம்பித்தார்கள். இவ்வாறு சென்றுகொண்டு இருக்கும்போது கடல் தெரிந்தது. அங்கு புறப்படுவதற்கு கப்பல் ஒன்று தயாராக இருப்பதும் தெரிந்தது. அந்த கப்பலில் ஏறி வேறு எந்த நாட்டிற்காகவது சென்று நிம்மதியாக வாழலாம் என்று எண்ணிய அவர்கள், மாலுமியிடம் அனுமதி கேட்டு அதில் ஏறிக் கொண்டார்கள்.

அவர்களின் கள்ளங்கபடமற்ற தோற்றமும், அருள் சுரக்கும் முகமும் அங்குள்ள எல்லோரது உள்ளங்களையும் கவர்ந்து விட்டது. அவர்களது தேவைகளை பூர்த்தி செய்வதிலும் மிகவும் அக்கறைக் காட்ட ஆரம்பித்து விட்டார்கள். கப்பல் நடுக்கடலில் நின்றுவிட்டது. கப்பலின் மாலுமி கப்பலை முழுமையாக சோதித்துப் பார்த்தான். அதில் எவ்விதக் கோளாறும் இல்லை என்று தெரிந்தது.

அக்காலத்தில் ஒரு எஜமானுக்கு கட்டுப்படாதவர் தெரியாமல் ஓடிவந்து கப்பலில் ஏறிக் கொண்டாலும் அந்த கப்பல் நடுக்கடலில் நின்றுவிடும். அதன்அடிப்படையில் மாலுமி ‘உங்களில் யாராவது ஒருவர் உங்கள் எஜமானுக்கு கட்டுப்படாமல் இங்கு வந்து ஏறிக் கொண்டிருக்கிறீர்களா? அவர் இந்த கப்பலை விட்டும் அப்புறப்பட்டு விடுங்கள். அந்த ஒருவருக்கா இக்கப்பலிலுள்ள அனைவருக்கும் ஆபத்து வந்துவிடும் என்றான்.

சிறிது நேரம் வரை கப்பலில் ஒரே அமைதியாக இருந்தது. இறுதியி;ல ஓர் ஓரத்தில் அமர்ந்திருந்த யூனூஸ் அலைஹிஸ்ஸலாம்அவர்கள் நான் தான் அந்தக் குற்றவாளி. என் எஜமான் இட்ட கட்டளையை நிறைவேற்றாது அவனது அனுமதியின்றி ஓடோடி வந்து இக்கப்பலில் ஏறிக் கொண்டேன். தயவு செய்து என்னைத் தூக்கி கடலில் எறிந்து விடு’ என்று சொன்னார்கள்.

கப்பலில் உள்ள அனைவரும் ஆச்சரியப்பட்டு நின்றார்கள். அவர்கள் யூனூஸ் நபியின் கூற்றை நம்பவில்லை. என்னுடைய கூற்றில் நம்பிக்கை ஏற்படவில்லையா? நான் சொல்வது பொய் என்று நினைக்கிறீர்களா? என் எஜமானின் உத்தரவின்றி நான் ஓடிவந்தது உண்மைதான் என் ஒருவனுக்காக உங்கள் அத்தனை பேரின் உயிருக்கும் ஆபத்தை ஏற்படுத்திக் கொள்ளாதீர்கள். நான் சொல்வது உண்மையா? பொய்யா? என்பதை சீட்டு எழுதி குலுக்கிப் போட்டு அதன்படி முடிவெடுத்துக் கொள்ளுங்கள் என்று சொன்னார்கள்.

அவர்கள் சொன்னபடி சீட்டை எழுதிப் போட்டு குலுக்கிப் பார்த்து எடுத்ததில் உண்மை என்றே வந்தது. பலதடவை போட்டும் அப்படியே வந்தது. இறுதியாக மாலுமியே போட்டு பார்த்தான். அப்பவும் அப்படியே வந்தது. ஒரு மனிதப் புனிதர் மீது இவ்வாறு பழியை சுமத்தி அவரை கப்பலை விட்டு எப்படி அப்புறப்படுத்துவது என்று தயங்கிக் கொண்டிருந்தனர்.

இதைப் பார்த்த யூனூஸ் நபி அவர்கள் ‘உங்கள் அனைவரின் தயக்கத்தையும் நான் புரிந்து கொண்டேன். இத்தகைய குற்றத்தை நான் செய்திருக்க மாட்டேன் என்றுதானே நீங்கள் சந்தேகப்படுகிறீர்கள். ஆனால் அப்படியில்லை. நான் என் எஜமானிடம் சொல்லிக் கொள்ளாமல் ஓடிவந்தது உண்மைதான். என் ஒருவனுக்காக நீங்கள் ஆபத்தில் சிக்குவதை நான் விரும்பவில்லை. எனவே நான் இக்கப்பலை விட்டு ஒழிந்து போகிறேன்’ என்று சொல்லியவாறே யாரும் எதிர்பாராத வண்ணம் கப்பலிலிருந்து கடலில் குதித்து விட்டார்கள்.

அவர்கள் கடலில் விழுவதற்கும்> அங்கு ஒரு பெரிய மீன் தனது வாயை அகலமாக திறந்து கொண்டு அவர்களை விழுங்குவதற்கும் மிகவும் பொருத்தமாக இருந்தது. கப்பலில் இருந்தவர்கள் அதனைப் பார்த்து அலறினார்கள். ஆனால் அல்லாஹ் விதித்தபடி அனைத்தும் நடந்து முடிந்து விட்டது.

யூனூஸ் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அந்த மீன் வயிற்றில் ஏழு மாதங்கள்> அல்லது ஏழு வருடங்கள் அல்லது ஏழு நாட்கள் அல்லது நாற்பது நாட்கள் இருந்தார்கள் என்றும் பலவாறாக கூறப்படுகிறது. ஆனால் நாற்பது நாட்கள் என்பதையே பெரும்பாலான சரித்திராசிரியர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள்.

யூனூஸ் அலைஹிஸ்ஸலாம் அவர்களை உணவாக்கிக் கொள்ளக் கூடாதென்று அந்த மீனுக்கு அல்லாஹ் உத்திரவு பிறப்பித்து விட்டான். அல்லாஹ் மீனின் வயிற்றை ஒரு சிறைக்கூடம் போல ஆக்கியிருந்தான். அவர்களுக்கு அது ஒரு கண்ணாடி கூடம் போன்றிருந்தது. அங்கிருந்தவாறே கடலுக்குள் அல்லாஹ்வின் படைப்பினங்கள் அனைத்தையும் கண்டு வியந்தவாறு தஸ்பீஹ் ஓதிக் கொண்டிருந்தார்கள்.

இந்த மீனுக்குப் பெயர் தவுராத் வேதத்தில் ‘ரகா’ என்றும்> ஜபூர் வேதத்தில் ‘மாலூயா’ என்றும்> இன்ஜீல் வேதத்தில் ‘மூகினா’ என்றும் திருக்குர்ஆனில் ‘நூன்’ என்றும் காணப்படுகிறது. இந்த மீன் யூனூஸ் நபியை சுமந்து கொண்டு ஏழு கடல்களையும் சுற்றி வந்தது. அந்தளவுக்கு ஆறாயிரம் வருடங்கள் ஒரு மீன் சுற்றித் திரியும் அளவுக்கு ஒரு குறுகிய காலத்தில் சுற்றித் திரிந்ததாக மஆலிமுத் தன்ஜீல் என்ற நூலில் குறிப்பு ஒன்று காணப்படுகிறது.

அல்லாஹ்வின் அனுமதியின்றி நைனுவாவை விட்டு ஓடிவந்ததையும் அதன் காரணமாக மனைவி> மக்களை பறிகொடுத்து விட்டதையும்> பிறகு கப்பலில் ஏறி பின் அதிலிருந்து குதித்து மீன் வயிற்றுக்குள் சென்றுவிட்டதையும் ஆகிய எல்லாச் சம்பவங்களையும் ஒருசேர நினைத்து உருக ஆரம்பித்தார்கள். மீனின் வயிற்றுக்குள்ளேயே அழுது> புலம்பி, ஸஜ்தாவில் விழுந்தார்கள். அல்லாஹ்விடம் உருக்கமாக பிரார்த்தனை செய்து கொண்டே இருந்தார்கள்.

இதன்காரணமாக அல்லாஹ் அவர்களின் வேண்டுதல்களை ஏற்றுக் கொண்டு அவர்களை வெளியே கக்கி விடும்படி மீனுக்கு உத்திரவிட்டான். உடனே அந்த மீன் கடற்கரையோரமாக வந்து அவர்களை வெளியே கக்கியது. இந்த இடம் ஈராக்கின் தலைநகரான பாக்தாதிலிருந்து சுமார் 170கிலோ மீட்டர் தொலைவிலுள்ள கூஃபா நகரிலுள்ள புராத் நதிக் கரையிலுள்ளது. இந்த இடத்தை மக்கள் மகாமே யூனூஸ் என்று அழைக்கிறார்கள்.

இவற்றைஅல்லாஹ் திருக்குர்ஆனில் 21 : 87>88ல் கூறுகிறான்.

وَذَا النُّونِ إِذ ذَّهَبَ مُغَاضِبًا فَظَنَّ أَن لَّن نَّقْدِرَ عَلَيْهِ فَنَادَىٰ فِي الظُّلُمَاتِ أَن لَّا إِلَٰهَ إِلَّا أَنتَ سُبْحَانَكَ إِنِّي كُنتُ مِنَ الظَّالِمِينَ. فَاسْتَجَبْنَا لَهُ وَنَجَّيْنَاهُ مِنَ الْغَمِّ ۚ وَكَذَٰلِكَ نُنجِي الْمُؤْمِنِينَ

இன்னும் (நினைவு கூர்வீராக:) துன்னூன் (யூனுஸ் தம் சமூகத்தவரை விட்டும்) கோபமாக வெளியேறிய போது. (பாவிகள் சமூகத்தை விட்டும் வெளியேறி விட்ட படியால்) அவரை நாம் நெருக்கடியில் ஆக்கமாட்டோம் என்று எண்ணிக் கொண்டார்; எனவே அவர் (மீன் வயிற்றின்) ஆழ்ந்த இருளிலிருந்து “உன்னைத் தவிர வணக்கத்திற்குரிய நாயன் யாருமில்லை; நீ மிகவும் தூய்மையானவன்; நிச்சயமக நான் அநியாயக்காரர்களில் ஒருவனாகி விட்டேன்”என்று பிரார்த்தித்தார்.

எனவே.நாம் அவருடைய பிரார்த்தனையை ஏற்றுக் கொண்டோம்; அவரைத் துக்கத்திலிருந்தும் விடுவித்தோம். இவ்வாறே முஃமின்களையும் விடுவிப்போம்.   –அல்குர்ஆன் 21 : 87-88

மீன் வயிற்றிலிருந்து வெளியேறிய யூனூஸ் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு மீனின் வயிற்றிலிருந்து கொடிய சூட்டின் காரணமாக தலைமுடி, தாடி முடி மற்றும் உடலின் எல்லாப் பாகங்களிலிருந்த முடிகள் அனைத்தும் உதிர்ந்து போயிருந்தன. அவர்களால் எழுந்து உட்காரவோ, நடமாடவோ முடியாத நிலை ஏற்பட்டது. இந்தநிலையைப் போக்க அல்லாஹ் அவர்கள் அருகில் ஒரு சுரைக் கொடியை முளைப்பித்தான் அது அவர்களுக்கு நன்றாக நிழல் கொடுத்தது. காலையிலும்,மாலையிலும் ஆடு ஒன்று மற்ற அறிவிப்பின்படி மான் ஒன்று பால் கொடுத்து வந்தது. இப்படியே நாற்பது நாட்கள் ஓடிவிட்டன.

நாற்பது நாட்களுக்குப் பிறகு யூனூஸ் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு தெம்பு ஏற்பட்டது. எழுந்து உட்காரவும், நடக்கவும் முடிந்தது. முகத்திலும், தலையிலும், உடலிலும் முடி முன்போல் நன்றாக வளர்ந்து காணப்பட்டது.

وَإِنَّ يُونُسَ لَمِنَ الْمُرْسَلِينَ. إِذْ أَبَقَ إِلَى الْفُلْكِ الْمَشْحُونِ . أُولَٰئِكَ لَهُمْ رِزْقٌ مَّعْلُومٌ.   فَوَاكِهُ ۖ وَهُم مُّكْرَمُونَ .  فِي جَنَّاتِ النَّعِيمِ . عَلَىٰ سُرُرٍ مُّتَقَابِلِينَ . يُطَافُ عَلَيْهِم بِكَأْسٍ مِّن مَّعِينٍ . بَيْضَاءَ لَذَّةٍ لِّلشَّارِبِينَ . لَا فِيهَا غَوْلٌ وَلَا هُمْ عَنْهَا يُنزَفُونَ .

மேலும், யூனுஸும் நிச்சயமாக முர்ஸல்களில் – அனுப்பப்பட்டவர்களில் நின்றுமுள்ளவர். நிரப்பப்பட்ட கப்பலின் பால் அவர் ஒளித்தோடிய போது -அ(க்கப்பலிலுள்ள)வர்கள் சீட்டுக்குலுக்கிப் போட்டுப் பார்த்தனர் – இவர் தாம் குற்றமுள்ளவர் (என்று தீர்மானித்தனர்).ஆகவே, அவர்களுடைய) பழிப்புக்கிடமான நிலையில் (கடலில்) எறியப்பட வேண்டியவரானார்; ஒரு மீன் விழுங்கிற்று.ஆனால் அவர் (மீன் வயிற்றினுள்) இறைவனைத் துதிசெய்து – தஸ்பீஹு செய்து – கொண்டிராவிட்டால் – (மறுமையில் அவர்) எழுப்பப்படும் நாள்வரை,அதன் வயிற்றிலேயே தங்கியிருந்திருப்பார். ஆனால்,அவர் நோயுற்றிருந்த நிலையில்நாம் அவரை (மீன் வயிற்றிலிருந்து வெளியேற்றி) வெட்ட வெளியில் போட்டோம்.அன்றியும் நாம் அவருக்கு மேல் ஒரு சுரைக்கொடியை முளைப்பித்(து நிழலிடுமாறு செய்)தோம்.மேலும்   நாம் அவரை ஒரு நூறாயிரம் அல்லது அதற்கதிகமானவர்களிடம் அனுப்பி வைத்தோம்.

என்று அல்லாஹ் திருக்குர்ஆனில் 37:139-147வரைஅழகாக கூறுகிறான்.

ஒருநாள் பகலில் அவர்கள் சற்றுக் கண்ணயர்ந்து மீண்டும் எழுந்தபோது அவர்களுக்கு நிழல் கொடுத்துக் கொண்டிருந்த சுரைக் கொடி காய்ந்து போய்,அதன் இலைகள் எல்லாம் கொட்டிக் கிடந்தன. திடுக்கிட்டு விட்ட ஹழ்ரத் யூனூஸ் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் மிகவும் மனவேதனைப் பட்டார்கள். உடனே அல்லாஹ் அவர்களுக்குக் கீழ்வருமாறு வஹீ அறிவித்தான்.

‘ஒரு கொடி சாய்ந்து விட்டற்காக நீங்கள் இவ்வளவு மனவேதனைப் படுகிறீர்களே! அதனை நீங்கள் முளைப்பிக்கவும் இல்லை. அதனை வளர்க்கவும் இல்லை. ஆனால் நான் படைத்து, வளர்த்து வந்த ஓரிலட்ச நைனுவா மக்களை அழிந்து போகச் சாபமிட்டு ஓடி வந்து விட்டீரே! உங்களது இச்செயல் எனக்கு எவ்வளவு வேதனையளித்திருக்கும் என்று நீங்கள் எண்ணிப் பார்த்தீரா?’ என்று.

அவர்களுக்கு காலையிலும்> மாலையிலும் பால் கொடுத்து வந்த அந்த ஆடும் தனது வருகையை நிறுத்திக் கொண்டது. இதனால் அவர்களுக்கு கடும்பசியும், தாகமும் வாட்டி வதைத்தது. இந்தச் சமயத்தில் அவர்களை அல்லாஹ் நைனுவா நகருக்குச் சென்று அங்குள்ள மக்களுக்கு நற்போதனை புரிந்து வருமாறு மீண்டும் பணித்தான். அல்லாஹ்வின் உத்திரவிற்கு பணிந்து அவர்கள் நைனுவா நோக்கி நடக்க ஆரம்பித்தார்கள்.

வழியில் அவர்கள் தங்கள் மனைவி, இரு மக்களையும் சந்தித்தார்கள். அவரது மனைவியை ஒரு சிற்றூர் அரசன் பலாத்காரமாக அபகரித்துச் சென்றிருந்தான். ஆனால் கடந்த முப்பது வருடமாக அம்மாதரசியை அவன் தீண்ட முடியவில்லை. அவன் அவ்வாறு நினைக்கும் போதெல்லாம் அவனுக்கு ஆண்மை சக்தி செயல்படாது போய்விடும்.

இதனால் அந்த அம்மையாரை நைனுவா நகருக்கே திருப்பி அனுப்பி வைத்து விட்டான். வழியில் யூனூஸ் நபி அவர்கள் தம் மனைவியை கண்டு தம்மோடு சேர்த்துக் கொண்டார்கள். அதன்பிறகு ஓநாய் கவ்விச் சென்ற மூத்தமகன் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தான். அவனையும் அடையாளம் கண்டு தம்மோடு சேர்த்துக் கொண்டார்கள். மூவரும் சேர்ந்து போய் கொண்டிருக்கும்போது ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட இளைய மகனையும் சந்தித்து அவரையும் தம்மோடு சேர்த்துக் கொண்டார்கள்.

மிகவும் மகிழ்ந்த அவர்கள் அல்லாஹ்வுக்கு மிகவும் நன்றி செலுத்தி புகழ்ந்தார்கள். நைனுவா நகரை நெருங்கியதும் ஹழ்ரத் யூனூஸ் அலைஹிஸ்ஸலாம் முதலில் சந்தித்தது ஒரு இடையனை. அவனிடம் நைனுவா நகர் மக்களின் நிலை என்ன என்று கேட்டார்கள்

தாங்கள் யார் எங்கிருந்து வருகிறீர்கள்? என்று அவன் கேட்டான். அதற்கு யூனூஸ் நபி அவர்கள் விபரங்களை சொன்னதும்,அவன் உடனே ஊருக்குள் ஓடி விரபங்களை தெரிவித்து மக்களையும்> அரசனையும் அழைத்து வந்தான்.

தம்மை நோக்கி வந்த கூட்டத்தைப் பார்த்து யூனூஸ் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் மிகவும் மகிழ்ந்தார்கள். வந்தவர்கள் நபி அவர்களை சுற்றி வளைத்துக் கொண்டு அன்னாரை புகழ்ந்து பாடவாரம்பித்தார்கள். நைனுவா அரசர்முல்இப் இப்னுல் இர்ஷா யூனூஸ் நபி அவர்களின் கரத்தை பற்றி முத்தமிட்டவாறு தங்களை மன்னித்து அருளும்படியும், தாங்கள் அனைவரும் முஸ்லிமாக மாற தயாராகவிருப்பதாகவும் தெரிவித்தான்.

ஹழ்ரத் யூனூஸ் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அல்லாஹ்விற்கு நன்றி செலுத்தினார்கள். ஓர் இலட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் அன்று இஸ்லாத்தை தழுவினார்கள் என்று ஓரு குறிப்பு காணப்படுகிறது.

ஹழ்ரத் யூனூஸ்அலைஹிஸ்ஸலாம் அவர்கள் மீனின் வயிற்றிலிருந்து வெளிப்பட்டு சுமார் 31 ஆண்டுகள் இப்பூவுலகில் வாழ்ந்து தமது 60 ஆவது வயதில் இப்பூவுலகை நீத்து கூஃபாவில் நல்லடக்கம் செய்யப்பட்டார்கள்.

Add Comment

Your email address will not be published.