அன்னை ஸவ்தா ரழியல்லாஹு அன்ஹா

அன்னை ஸவ்தா ரழியல்லாஹு அன்ஹா

By Sufi Manzil 0 Comment December 21, 2014

Print Friendly, PDF & Email

அன்னை கதீஜா நாயகி ரலியல்லாஹு அன்ஹா அவர்களின் மறைவிற்குப் பின் கண்மணி நாயகம் ஸல்லல்லாஹுஅலைஹி வஸல்லம் அவர்கள் அன்னை ஸவ்தா நாயகியை மணம் முடித்தார்கள்.இவர்கள் ஆமிர் இப்னு லுவை என்னும் வர்க்கத்தைச் சார்ந்த ஜம்ஆ என்பாரின் புதல்வியாவார்கள். அவர்களின் தாயார் பெயர் ஷுமூஸ் என்பதாகும். முதலில் அவரின் சிறிய தந்தையின் மகனாகிய ஸக்ரான் பின் அம்ரு இவ்வம்மையாரை திருமணம் முடித்திருந்தார்கள். அவருக்கு அப்துர் ரஹ்மான் என்ற ஒரு மகனும் பிறந்தார்கள்.

இஸ்லாத்தி்ன் ஆரம்ப கட்டத்திலேயே புனித இஸ்லாத்தைக் கணவரோடு தழுவி, மக்கத்துக் காபிர்களின் தொல்லைகளைத் தாங்காது அபீசீனியாவுக்கு ஹிஜ்ரத் சென்றனர்.திரும்ப மக்கா வந்து சில நாட்களில் அவரது கணவரும் வபாத்தானார்கள். இச்சமயத்தில்அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களும் அன்னையர் திலகம் கதீஜா ரழியல்லாஹு அன்ஹா அவர்களை இழந்து கவலை கொண்டிருந்தார்கள்.

அண்ணலாரின் மனப்பாரம் கண்டு வருந்திய கூபாவின் ஹகீம் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள், அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களை அண்மி, “யா ரஸுலல்லாஹ் தாங்கள் ஸவ்தாவை மணம் முடித்துக் கொள்ளுங்களேன்! அதனால் தங்கள் மனப்பாரம் குறைந்து குடும்ப பொறுப்புகள் இலேசாக அமையும்! ஸவ்தா, அதிசிறந்த அம்மணி; மார்க்கப்பற்று மிக்க மாதரசி; உயர் குலத்துப் பத்தினி; தங்களுக்குப் பணிவிடை புரிய தகுதிபெற்ற பெண்ணரசி“என்று வேண்டினர்.

கூபாவின் வேண்டுகோளை அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் எற்றதும், ஸவ்தா ரழியல்லாஹு அன்ஹா அவர்களின் தந்தையாரைக் கண்டு பேசி முடித்து திருமணமும் நிறைவேறிற்று.400 திர்ஹம் மஹர் நிர்ணயிக்கப்பட்டு நுவுவ்வத்தின் 10 ஆம் ஆண்டு ரமலான் மாதம் இது நடைபெற்றது.

அன்றிலிருந்து, அண்ணலாரின் வாழ்க்கை முழுவதும் ஒன்றாயிருந்து உற்ற துணைவியாக பெருமானாருக்குத் தன்னை முழுமையாக அர்ப்பணித்து தொண்டு செய்து நபியவர்களைத் திருப்திப்படுத்துவதில் அதிக கவனமும், விருப்பமும் கொண்டு செயல்பட்டனர் அன்னையவர்கள்.

இவர்கள் சாதாரண எளிய குழந்தைபோன்ற குணம் படைத்தவர்கள். அழகுமிக்கவராகவும், பிரராட்டியர்களில் எல்லாம் மிக்க உயரமாகவும் அதற்கேற்ற பருமனாகவும் இருந்தார்கள். தர்மசிந்தனையிலும், தாராள குணத்திலும் மேம்பட்டவர்கள். தாயிப் நகரைச் சார்ந்த மக்களுக்கு பல சாமான்களை செய்து அனுப்பி அதிலிருந்து கிடைக்கும் வருமானங்களைதத் தாராளமாக நல்ல காரியங்களில் செலவு செய்து கொண்டிருந்தார்கள்.

நபிபிரான் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களுக்கு அன்னை ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா அவர்கள் மீது அதிக அன்பு இருந்ததைக்கண்ட ஸவ்தா அம்மையார் தனது முறை நாளை அன்னை ஆயிஷாவுக்கு விட்டுக் கொடுத்தார்கள்.

ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா ஒருமுறை சொன்னார்கள் “எப்பெண்ணைப் பார்த்தாலும் அவளைப்போன்று நானுமிருக்க வேண்டும் என்ற பேராசை ஒருபோதும் எனக்கு ஏற்பட்டதில்லை. ஆனால் ஸவ்தா ரழியல்லாஹு அன்ஹா அவர்களின் பேரழகையும், நடத்தையையும், நற்குணத்தையும் பார்த்த பின்னர் யானும் ஸவ்தாவைப் போன்று இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன்!“

அடுத்தவருக்கு உதவுவதிலும், தான தர்மங்கள் வழங்குவதிலும் அன்னை ஸவ்தா ரழியல்லாஹு அன்ஹா அதிக ஆர்வம் கொண்டிருந்தார்கள்.

ஒருமுறை உமர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் தமது ஆட்சியின் போது, ஒரு ஈத்தம்பழக் கூடை நிறைய திர்ஹம்களை அன்னையவர்களுக்கு அனுப்பி வைக்க, “ஓ! ஈத்தம் பழக் கூடையில் திர்ஹம்கள் எங்காவது கொடுப்பதுண்டோ“எனக்கேட்டுக் கொண்டே, மதீனா முனவ்வராவில் வாழும் ஏழைகளுக்கு அனைத்தையும் தர்மம் செய்தனர்.

எனக்குப் பின் நீங்களெல்லாம் வீட்டிலேயே இருங்கள்’ என்று அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள தம் மனைவியரை நோக்கி கூறிச் சென்றதை அணுவத்தனையும் பிசகாது பேணி நடந்ததன் காரணமாக>இவர்கள் அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மறைவிற்குப் பின் வெளியே செல்லவில்லை. ஹஜ்ஜு கூ;ட செய்ய செல்லவில்லை. மறைவிற்குப் பின் உடல்தான் வெளியே சென்றது.

இமாம் புகாரி, தஹபீ ரஹ்மத்துல்லாஹி அலைஹிம் ஆகியோரது கூற்றுப்படி ஹிஜ்ரி 23இல் அன்னையவர்கள் வபாத்தானார்கள். (இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்). ஆனால், வாகிதி, ஸாஹிபுல் இக்மால் ஆகியோர் கணிப்புப்படி அன்னையாரின் வபாத்து ஹிஜ்ரி 54, அல்லாமா இப்னு ஹஜர் அஸ்கலானி ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் ஹிஜ்ரி 55, ஷவ்வால் மாதம் அன்னையவர்கள் வபாத்தானதாகக் குறிப்பிடுகிறார்கள். அவர்களது புனித கப்ர் ஜன்னத்துல் பகீஃ இல் உள்ளது.

ஸர்கானி, பாகம் – 03, பக்கம் – 599

Add Comment

Your email address will not be published.