அன்னை ஜுவைரியா ரலியல்லாஹு அன்ஹா

அன்னை ஜுவைரியா ரலியல்லாஹு அன்ஹா

By Sufi Manzil 0 Comment December 21, 2014

Print Friendly, PDF & Email

பனூ முஸ்தலக் குடும்பத்தில் புகழ் பெற்றிருந்த ஹாரித் இப்னு அபீளர்ரார் என்பவரது மகளார் அன்னை ஜுவைரியா ரலியல்லாஹு அன்ஹா அவர்கள்.

இஸ்லாத்தைத் தழுவ முன்னர் அதே கோத்திரத்தைச் சார்ந்த மஸாபிஃ இப்னு ஸப்வான் என்பவர் அன்னையரை மணம் முடித்திருந்தார்.

ஜுவைரியா அம்மையாரின் தந்தையும், கணவனும் இஸ்லாத்தை முழு மூச்சுடன் எதிர்த்து வந்தனர். ஒருமுறை ஹாரித் முஸ்லிம்கள் மீது போர்தொடுக்கவிருக்கிறார் என்ற செய்தி அண்ணலாருக்கு தெரிவிக்கப்படுகிறது.

எனவே ஹிஜ்ரி 05ஆம் ஆண்டு ஷஃபான் மாதத்தில் இஸ்லாமியப் படையினர் மதீனாவிலிருந்து புறப்பட்டு “முறைசிஃ“எனுமிடத்தில் தங்கினர். இஸ்லாமியப் படை வந்திருக்கிறது என்பதறிந்த ஹாரிதின் கூலிப்பட்டாளம் திசைக்கொன்றாக சிதறி ஓடியது. எனினும் முறைசிஃ நகரத்தார் முஸ்லிம்களோடு போரிட்டு தோற்றோடினர். இப்போரில் முஸ்லிம்கள் 600க்கு மேற்பட்ட எதிரிகளை கைது செய்தனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டு மதீனாவிற்கு கொண்டு வரப்பட்டவர்களில் ஒருவர்தாம் அன்னை ஜுவைரியா ரலியல்லாஹு அன்ஹா அவர்களும்!

இவர்களின் முந்தைய கணவர் முஸாஃபிஹ்> இவரும் இந்தப் போரில் கொல்லப்பட்டார். அன்னை ஜுவைரியா ரலியல்லாஹு அன்ஹா, தாபித் இப்னு கைஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டனர். பின் அண்ணலார் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் அன்னை அவர்களுக்குப் பகரமாக ஒரு தொகையை வழங்கி அன்னாரை விடுவித்து, அம்மையாரின் முழுச்சம்மதத்துடன் அண்ணலார் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் திருமணம் செய்து கொண்டனர்.அப்போது அன்னையாருக்கு வயது 20.அத்தோடு அப்போரில் கைது செய்யப்பட்டோர் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.

அன்னையவர்களுக்கு பெற்றோர் இட்ட பெயரான “பர்ரா“என்பதை மாற்றி ஜுவைரியா எனும் பெயரை அண்ணலார் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் சூட்டினார்கள்.

அன்னை ஜுவைரியா அவர்களைக் குறித்து அன்னை ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் “ஜுவைரியா பேரழகியாகவும், இனிமையான குரலுமுடையோராகவும் இருந்தார்“என்று கூறியுள்ளார்கள்.

தமது 65வது வயதில் ஹிஜ்ரி 50ல் ரபீயுல் அவ்வல் மாதத்தில் இம்மை வாழ்வை முடித்துக் கொண்டார்கள் (இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்)

அப்போது மதீனாவின் ஆளுனராக இருந்த மரவான் ஜனாஸா தொழுகை நடத்தி வைக்க, ஜன்னத்துல் பகீஃல் நல்லடக்கம் செய்யப்பட்டது. (மதாரிஜுன் நுபுவ்வத்)

அன்னை ஜுவைரியா ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் உயர் குலத்துப் பிறந்த மங்கை நல்லவராக இருந்து மிக்க எளிய வாழ்வை மேற்கொண்டிருந்தார்கள். ஒரு துறவிபோன்றே அவர்களது வாழ்வு அமைந்திருந்தது.

ஒருநாள் அண்ணலார் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள், ஜுவைரியா ரலியல்லாஹு அன்ஹா அவர்களைக் காண அதிகாலைப் பொழுதில் வந்தபோது அன்னையவர்கள் துஆச் செய்துகொண்டிருப்பதைக் கண்டார்கள். திரும்பிச் சென்ற நபியவர்கள் உச்சிப் பொழுதில் மீண்டும் வந்தபோது அப்போதும் அன்னை அவர்களை காலையில் கண்ட நிலையிலேயே நபிபெருமான் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கண்டு, மனமகிழ்ந்து அன்னையாருக்காக துஆச் செய்தனர்.

செல்வச் செழிப்பும், அந்தஸ்த்தும் மிகுந்த குடும்பத்தில் பிறந்த அன்னையவர்கள் விரும்பி இருந்தால் சுகபோக வாழ்வு வாழ்ந்திருக்கக் கூடும். ஆனால் அழிந்துபோகும் இம்மை வாழ்வை விரும்பாது மறுஉலகின் அழியாப் பெருவாழ்வைத் தேர்ந்தெடுத்து வாழ்ந்து காட்டியதோடு, அருமைக் கணவர் அவனியின் தூதர் அண்ணல் பெருமானாரின் மனங்கவர்ந்த மனைவியாகவும் வாழ்ந்து சென்றனர்.

எனவே உம்முல் முஃமீனீன் நன் நம்பிக்கையாளர்களின் அன்னை என்ற சிறப்புத்தகுதியோடு இன்றும் அன்னாரது திருநாமம் உச்சரிக்கப்படுகிறது.

Add Comment

Your email address will not be published.