அன்னை உம்மு ஸல்மா ரலியல்லாஹு அன்ஹா

அன்னை உம்மு ஸல்மா ரலியல்லாஹு அன்ஹா

By Sufi Manzil 0 Comment December 21, 2014

Print Friendly, PDF & Email

இவர்களின் இயற்பெயர் ஹிந்து. புனைப்பெயர் உம்முஸல்மா. இப்பெயர் புனைப்பெயராயினும், இப்பெயரிலேயே அவர்கள் அறியப்பட்டார்கள், அழைக்கப்பட்டார்கள். இவர்களது அன்னையரது பெயர் ஹுதைபா அல்லது ஸுஹைல்.பிரபல குறைஷித் தலைவரான அபூஸல்த் ஸகீயின் மகளாவார்கள்.

அன்னையவர்களின் முதற் கணவரின் பெயர்அபூ ஸலமா என்றழைக்கப்படக் கூடிய அப்துல்லா பின் அப்துல் அஸத் மக்சூமி ரழியல்லாஹு அன்ஹு என்பவராவார். இவர் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்களின் தந்தை வழி மாமியான பர்ரா பின்த் அப்துல் முத்தலிப் அவர்களின் மகனுமாவார். இன்னும் இவர் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பால் குடிச் சகோதரரும் ஆவார்.

உம்முஸல்மா இஸ்லாத்தில் இணைந்து அபிசீனியாவிற்கு ஹிஜ்ரத் சென்றனர். அங்கு ஜைனப் என்ற பெண் குழந்தையைப் பெற்றெடுத்தார்கள். இதனை அடுத்து உமர் என்ற மகவையும் பெற்றெடுத்தார்கள். இறுதியாக இன்னொரு பெண் குழந்தையையும் பெற்றெடுத்தார்கள், அதன் பெயர் துர்ரா.

பின்னர் அபிசீனியாவிலிருந்து மக்காவுக்குத் திரும்பிவந்து கணவரும், மனைவியும், பச்சிளம் குழந்தையுமாக மதீனாவிற்கு ஹிஜ்ரத் செய்ய எண்ணியஒட்டு மொத்த குடும்பமும் இப்பொழுது,தனித்தனியாக மூன்று பிரிவாகப் பிரிக்கப்பட்டு விட்டது. இவையெல்லாம் நடந்து கொண்டிருந்த பொழுது, அபூ ஸலமா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் தனது மனைவியை விட்டு விட்டு தன்னந்தனியாக மதீனாவை நோக்கிய தனது பயணத்தைத் தொடர்ந்தார்.

உம்மு ஸல்மா ரலியல்லாஹு அன்ஹா அவர்களை அவர்களது உறவுக்காரர்கள் அழைத்துச் சென்று விட்டார்கள், உம்மு ஸலமாவின் பிள்ளைகளை அபூ ஸலமா ரழியல்லாஹு அன்ஹு அவர்களின் குடும்பத்தவர்கள் அழைத்துச் சென்று விட்டார்கள்.

உம்மு ஸலமா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் தன்னந்தனியாக மதீனா சென்று தனது கணவருடன் சேர்ந்து கொண்டார்கள்.அளவில்லா சந்தோஷமடைந்தார்கள். இப்பொழுது உடைந்து சிதறிப் போன அபூ ஸலமா ரழியல்லாஹு அன்ஹு அவர்களின் குடும்பத்தவர்கள் மீண்டும் ஒன்றிணைந்தார்கள்.குழந்தைகளும் தங்களது பெற்றோர்களின் கண்காணிப்பில் சந்தோஷமடைந்தார்கள்.

கணவரை சென்றடைந்த அன்னையார் மதீனாவில் தங்கி இருந்தார்கள். சில குழந்தைகளும் பிறந்தன. இந்நிலையில் ஹிஜ்ரி 04இல் அப்துல்லாஹ் இம்மை வாழ்வை முடித்துக் கொண்டார்கள். (இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி ராஜிஊன்)

அன்புத்துணைவரின் பிரிவாற்றாமையால் சோர்ந்து போன உம்மு ஸல்மா, தன் சின்னக் குழந்தைகளை பராமரிக்க முடியாமல் பரிதவித்தார்கள். உம்மு ஸல்மாபடும் அவஸ்தைகளை அறிந்த அண்ணலார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள். ஹிஜ்ரி 4 ஆம் ஆண்டு, ஷவ்வால் மாதம் தமது வாழ்க்கைத் துணைவியாக வரித்துக்கொண்டார்கள். குழந்தைகளை தனது பராமரிப்புக்கு உட்படுத்தினார்கள்.

அன்னையவர்கள் புத்திக்கூர்மை, விவேகம், நல்லமல், பத்தினித்தனம், தெளிந்த ஞானம் ஆகியவற்றில் முன்னோடியாகத் திகழ்ந்தார்கள். ஹதீஸிலும், சட்டத்துறையிலும் ஆழ்ந்தஞானம் பெற்றிருந்தார்கள். தாபிஈன்களளுக்கு பெரிய ஆசானாக திகழ்ந்திருக்கிறார்கள். அகழ் யுத்தத்தின் போதும் கைபர் யுத்தத்தின போதும் இவர்கள் பிரசன்னமாயிருந்தார்கள். ஹுதைபிய்யா உடன்படிக்கையின் போது தோழர்களின் மனநிலையை அறிந்து சில சற்புத்திகளும் கூறி நிலைமையை ஒழுங்கு பண்ணினார்கள். 388 நபி மொழிகளை அறிவிப்பும் செய்துள்ளனர்.

அன்னை உம்மு ஸலமா ரழியல்லாஹு அன்ஹு அவர்களின் வீட்டில் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்கள் இருந்த காலங்களில் பல முறை திருமறையின் வசனங்கள் அருள் செய்யப்பட்டிருக்கின்றன. சூரா அஹ்ஸாப்ன் இந்த வசனங்கள் அன்னை உம்மு ஸலமா ரழியல்லாஹு அன்ஹு அவர்களின் வீட்டில் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இருந்த காலத்தில் தான் அருள் செய்யப்பட்டது.

وَقَرْنَ فِي بُيُوتِكُنَّ وَلَا تَبَرَّجْنَ تَبَرُّجَ الْجَاهِلِيَّةِ الْأُولَىٰ ۖ وَأَقِمْنَ الصَّلَاةَ وَآتِينَ الزَّكَاةَ وَأَطِعْنَ اللَّهَ وَرَسُولَهُ ۚ إِنَّمَا يُرِيدُ اللَّهُ لِيُذْهِبَ عَنكُمُ الرِّجْسَ أَهْلَ الْبَيْتِ وَيُطَهِّرَكُمْ تَطْهِيرًا

(நபியின் மனைவிகளே!) நீங்கள் உங்கள் வீடுகளிலேயே தங்கியிருங்கள்;. முன்னர் அஞ்ஞான காலத்தில் (பெண்கள்) திரிந்து கொண்டிருந்ததைப் போல் நீங்கள் திரியாதீர்கள்; தொழுகையை முறைப்படி உறுதியுடன் கடைப்பிடித்து தொழுங்கள்; ஜகாத்தும் கொடுத்து வாருங்கள். அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் கீழ்படியுங்கள்; (நபியின்) வீட்டையுடையவர்களே! உங்களை விட்டும் அசுத்தங்களை நீக்கி, உங்களை முற்றிலும் பரிசுத்தமாக்கிவிடவே அல்லாஹ் நாடுகிறான்.’ (33:33)

கஅப் இப்னு மாலிக் ரழியல்லாஹு அன்ஹு, ஹிலால் பின் உமைய்யா ரழியல்லாஹு அன்ஹு, மராரா பின் அர்ராபிஆ ரழியல்லாஹு அன்ஹு ஆகியோர்கள் எந்தவித நியாயமான காரணமுமின்றி தபூக் யுத்தத்திற்குச் செல்லாமல் மதினாவிலேயே தங்கி விட்டார்கள். எனவே, இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் உத்தரவுப்படி, இந்த மூன்று நபர்களுடன் யாரும் எந்தவித உறவும், கொடுக்கல் வாங்கல், பேச்சு வார்த்தை எதுவும் வைத்துக் கொள்ளக் கூடாது என்று மதீனத்து முஸ்லிம்களுக்கு உத்தரவிட்டார்கள். இந்த உத்தரவால் மிகவும் பாதிக்கப்பட்ட இந்த மூன்று பேரும், இறைவனிடம் மன்றாடி முறையிட்டு பாவ மன்னிப்புத் தேடியதன் பின்பு, அன்னை உம்மு ஸலமா ரழியல்லாஹு அன்ஹு அவர்களது இல்லத்தில் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தூங்கிக் கொண்டிருந்த பொழுது,

وَعَلَى الثَّلَاثَةِ الَّذِينَ خُلِّفُوا حَتَّىٰ إِذَا ضَاقَتْ عَلَيْهِمُ الْأَرْضُ بِمَا رَحُبَتْ وَضَاقَتْ عَلَيْهِمْ أَنفُسُهُمْ وَظَنُّوا أَن لَّا مَلْجَأَ مِنَ اللَّهِ إِلَّا إِلَيْهِ ثُمَّ تَابَ عَلَيْهِمْ لِيَتُوبُوا ۚ إِنَّ اللَّهَ هُوَ التَّوَّابُ الرَّحِيمُ

இந்த மூன்று பேர்களையும் மன்னித்து அல்-குர்ஆனின் 9:118 அல்லாஹ் வசனத்தை இறக்கியருளினான்.

அன்னையார் வாரத்திற்கு மூன்று நோன்புகள் நோற்று வந்தனர். தவறாது தஹஜ்ஜுத் தொழுது வந்தார்கள். அழகுடன் இனிய குரல் வாய்க்கப்பெற்றிருந்த இவரை அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் குர்ஆனை ஓதுமாறு கூறிச் சில பொழுது கேட்டுக் கொண்டிருப்பார்கள்.

அண்ணலார் இறுதியாக நோயுற்றபோது ‘அல்லாஹ்வின் தூதர் அவர்களே! நானும் என் குடும்பத்தினர் அனைவரும் இறந்து விடுகிறோம். தாங்கள் உயிர் வாழ்ந்தாலே போதும்’ என்று இவர்கள் கூறினர். அவ்விதம் மீண்டும் கூற வேண்டாம் என்றும்,  கூச்சலிட்டு அழ வேண்டாம் என்றும் அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தடுத்து விட்டனர்.

அண்ணல் நபி அவர்களின் திருமுடி ஒன்றைப் பத்திரமாகப் பாதுகாத்து அதனை மக்களுக்குக் காட்டி வந்தனர்.

அன்னையர்களிலேயே இறுதியாக ஹிஜ்ரி 61இல் ;84 ஆவது வயதில் யஸீத் பின் முஆவியா அவர்களது ஆட்சியின் பொழுது மறைந்தனர். அன்னாருக்கு ஹழ்ரத் அபூஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் ஜனாஸா தொழ வைத்தனர். அன்னையாரது புனித அடக்கவிடம் ஜன்னத்துல் பகீஃகில் உள்ளது.

Add Comment

Your email address will not be published.