அன்னை மைமூனா ரலியல்லாஹு அன்ஹா

அன்னை மைமூனா ரலியல்லாஹு அன்ஹா

By Sufi Manzil 0 Comment December 21, 2014

Print Friendly, PDF & Email

ஹாரிது இப்து ஹஸன், ஹிந்து பின்த் அவ்ப் ஆகியோரின் புதல்வியரான அன்னை மைமூனா ரலியல்லாஹு அன்ஹா அவர்களுக்கு பெற்றோர் இட்ட ‘பர்ரா‘. அண்ணலர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் வாழ்க்கைத் துணைவியான பின்னர் நபியவர்களால் மைமூனா – பரக்கத்திற்குரியவர் என பெயர் மாற்றம் செய்யப்பட்டார்கள்.

அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஹுதைபிய்யா உடன்படிக்கை ஏற்பட்ட அடுத்த ஆண்டு உம்ரா செய்ய மக்கா வந்த போது அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் தங்கள் மைத்துனியாகிய இவரை மணமுடித்துக் கொள்ளுமாறு கூற அதற்கு அவர்கள் இணங்கினார்கள்.

ஹிஜ்ரி 07ஆம் ஆண்டு உம்ரத்துல் களாவை முடித்துக்கொண்டு திரும்புகிற வழியில் அன்னையவர்களை மணமுடித்த நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் ‘ஸரப்‘என்னுமிடத்தில் இல்லற வாழ்வைத் துவங்கினார்கள். இதுவே கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் இறுதித் திருமணமாகும்.

கணவன் மனைவிக்கு இடையே பிணக்கு ஏற்படின் அதைத் தீர்த்து வைப்பதில் இவர் பெரும் பங்கெடுத்துக் கொள்வார்கள். இப்னு அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் தங்கள் மனைவியருடன் மாதவிடாய் காரணமாக படுக்கையை பிரித்து வைத்ததையும்> வேறு காரியங்கள் செய்யாமலிருந்ததையும் அறிந்து, அல்லாஹ்வின் தூதர் அவர்கள் தங்களிடம் நடந்த முறைகளை விவரித்து அதை திருத்தினார்கள்.

எழுபத்து ஆறு நபிமொழிகளை அறிவிப்புச் செய்த அன்னை மைமூனா ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் எந்த இடத்தில் அண்ணலரால் மணம் முடிக்கப்பட்டார்களோ அதே ஸரப் எனுமிடத்திலேயே இம்மை வாழ்வையும் முடித்துக்கொண்டனர்.

ஹிஜ்ரி 51இல் வபாத்தானார்கள் எனவும், ஹிஜ்ரி 61இல் வபாத்தானார்கள் எனவும் இரு வேறு கருத்துக்கள் காணப்பட்டாலும், இப்னு இஸ்ஹாக் என்பவர் ஹிஜ்ரி 63இல் ஸரப் எனுமிடத்தில் அன்னார் வபாத்தானார்கள் என்று தெரிவிக்கிறார்.

அன்னையவர்களது ஜனாஸா தூக்கப்பட்டபோது அன்னாரின் சகோதரியின் மகனாரான அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹு  அவர்கள் உரத்த குரலில் “மனிதர்களே! இவர்கள் அண்ணலரின் அருமைத் துணைவி எனவே ஜனாஸாவை மெதுவாக எடுத்துச் செல்லுங்கள். இப்புனித உடலை அசைய விடாதீர்கள்“என்றனர். இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்களே ஜனாஸாத் தொழுகையையும் நடத்தி வைத்தார்கள்.

யஸீத் இப்னு அஸம்மு ரலியல்லாஹு அன்ஹு கூறுகின்றார்கள். “ஸரப் எனுமூரில் எந்த இடத்தில் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் அன்னை மைமூனா ரலியல்லாஹு அன்ஹா அவர்களை மணம் புரிந்தனரோ அதே இடத்தில்தான் அன்னாரது புனித உடலம் நல்லடக்கம் செய்யப்பட்டது.“

ஸர்கானி : பாகம் – 03, பக்கம் – 253, திர்மிதி : பாகம் – 01, பக்கம் – 104

அண்ணலார் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் மீது அளவற்ற அன்பும் நேசமும் பூண்டிருந்த அன்னை மைமூனா ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் தாமாகவே முன்வந்து அண்ணலாரை மணப்பதற்கு சம்மதம் தெரிவித்தனர். “எனது இன்னுயிரை இரஸூல் நபியவர்களுக்கு அர்ப்பணம் செய்து விட்டேன். பெருமானாரிடமிருந்து மஹர்தொகை வாங்க வேண்டுமென்ற ஆசை கூட எனக்கு இல்லை“என அன்னையவர்கள் கூறியுள்ளனர்.

அருட் திருமறை அல்குர்ஆனில் அன்னையவர்களைக் குறித்து வசனமொன்று அருளப்பட்டுள்ளது.

Add Comment

Your email address will not be published.