இறைத்தூதர் அவர்களின் பொருட்களை பேணி பாதுகாத்து வருவதற்கு ஆதாரம் உள்ளதா?

இறைத்தூதர் அவர்களின் பொருட்களை பேணி பாதுகாத்து வருவதற்கு ஆதாரம் உள்ளதா?

By Sufi Manzil 0 Comment March 22, 2011

Print Friendly, PDF & Email

கேள்வி: குர்ஆனிலோ, ஹதீதுகளிலோ இறைத்தூதரின் முடி போன்றவற்றை பேணி பாதுகாத்து வருவது பற்றியும், அப்படி வைப்பது முக்கியத்துவம் வாய்ந்தது என்பது பற்றியும் ஆதாரங்களுடன் விளக்கம் தருக.

பதில்:
நபிமார்களின் பொருட்கள், ஞாபகச் சின்னங்கள் பாதுகாக்கப்பட்டு வந்தன என்பதற்கு ஆதாரம் இல்லை என்று கூறுவது குர்ஆன், ஹதீஸ்களின் சரியான அறிவு இல்லாததே காரணம். முந்தைய நபிமார்கள் உபயோகித்து வந்த பொருட்கள் பாதுகாக்கப்பட்டு வந்தன. அவற்றின் பொருட்டைக் கொண்டு உதவி தேடப்பட்டும் வந்தது என்பதற்கு அல்குர்ஆனில் தெளிவான ஆதாரம் உண்டு.

'……………உங்கள் இறைவனிடமிருந்து மலக்குகள் சுமந்தவண்ணமாக ஒரு பேழை உண்மையாகவே உங்களிடம் வரும். அதில் உங்களுக்கு ஆறுதல் அளிக்கக் கூடியதும் மூஸா ஹாரூன் உடைய சந்ததிகள் விட்டுச் சென்றதில் மீதமுள்ளதும் இருக்கும்.ள மெய்யாகவே நீங்கள் விசுவாசிகளாக இருந்தால் நிச்சயமாக உங்களுக்கு அதில் ஓர் அத்தாட்சி உண்டு'
(அல்-குர்ஆன் 2:248)

இந்த வசனத்தில் குறிப்பிடப்படுகின்ற நபி மூஸா நபி ஹாரூன் அலைஹிமிஸ்ஸலாம் ஆகியோரது ஞாபகச் சின்னங்கள் என்பது குறித்து  திருமறை விரிவுரையாளர்கள் அனைவரும் ஒத்தக் கருத்தையே கொண்டுள்ளனர்.
'மூஸா நபியவர்களுடைய கம்பு, கட்டளைகள் எழுதப்பட்ட பலகைத் துண்டுகள், ஹாரூன் நபி அவர்களுடைய மேலங்கி' (தப்ஸீர் இப்னு அப்பாஸ்)

'பலகைத்துண்டுகள்,  மூஸா நபியின் கம்பு, ஆடைகள், தௌராத் வேதத்தின் ஒரு பகுதி, மூஸா நபியின் செருப்புகள், ஹாரூன் நபியின் தலைப்பாகை'(தப்ஸீர் மதாரி;குத் தன்ஸீல்)

'மூஸா நபியின் கம்பு, செருப்புகள், ஹாரூன் நபியின் கம்பு, தலைப்பாகை, மன்னுஸ்ஸல்லாவின் ஒரு பகுதி' (தப்ஸீர் லுபாபுத் தஃவீல்)

பலகைத் துண்டு, மூஸா நபியின் கம்பு, ஆடைகள், ஹாரூன் நபியின் தலைப்பாகை' (தப்ஸீர் பைளாவி)

தப்ஸீருல் கபீர், தப்ஸீர் ரூஹுல் மஆனி, தப்ஸீர் ஜலாலைன் என்று அனைத்து தப்சீர்களிலும் பனூ இஸ்ரவேலர்களிடம் இருந்த அந்தப் பெட்டியினுள் நபி மூஸா அலைஹிஸ்ஸலாம் நபி ஹாரூன் அலைஹிஸ்ஸலாம் அவர்களும் விட்டுச் சென்ற பொருட்களே இருந்தன என்றும், போர்காலங ;களில் இந்தப்பெட்டியினை முன்னால் வைத்து உதவி தேடுவர் வெற்றியும் பெறுவர் என்று காணக் கிடக்கிறது.

நபிமார்களின் புனிதப் பொருட்கள் பாதுகாக்கப்பட்டு வந்தது என்பதற்கு குர்ஆன் கூறும் அத்தாட்சி இது.

அடுத்து அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் திருமுடி பாதுகாக்கப்பட்டு வந்ததா? சஹாபாக்கள் அதற்கு முக்கியத்துவம் கொடுத்தனரா? என்பது குறித்து ஹதீஸ்களின் வெளிச்சத்தில் ஆராய்வோம்.

'நான் உம்மு ஸல்மா ரலியல்லாஹு அன்ஹா அவர்களிடம் சென்றேன். அப்போது நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் திருமுடிகளில் மருதானி தோய்த்த திருமுடியை எடுத்துக் காட்டினார்கள்.'

அறிவிப்பவர்: உதுமான் இப்னு அப்துல்லாஹ் ரலியல்லாஹு அன்ஹு

நூல்: புகாரி பாகம் 2 பக்கம் 875.

இந்த ஹதீஸிலிருந்து உம்மு ஸல்மாவிடம் அண்ணலாரின் பல முடிகள் இருந்தன என்பது புரிகிறது என புகாரி விரிவுரையாளர் கஸ்தலானி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகின்றார்கள்.

உம்முஸல்மா அவர்களிடம் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் திருமுடியொன்று இருந்தது. மக்கள் அதன் மூலம் நோயிலிருந்து சுகம் பெறுகின்றனர். சில நேரங்களில் தண்ணீர் பாத்திரத்தில் அத்திருமுடியை முக்கி எடுத்து அந்நீரைப் பருகுவர்.'   (புகாரி ஓரக் குறிப்பு பக்கம் 875)

பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் இத்திருமுடி, அன்னாரது மறைவுக்குப் பின்னரே அதிகமாக நரைத்திருக்கிறது. ஏனெனில் அன்னை உம்மு ஸல்மா ரலயில்லாஹு அன்ஹா அவர்கள் அத்திருமுடியை அளவுகடந்து கண்ணியப்படுத்தும் பொருட்டு அம்முடிக்கு அத்தர் பூசுபவர்களாக இருந்ததாக அனஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிப்புச் செய்வதை புகாரியின் ஓரக்குறிப்பிலும் (பக்கம் 875) இமாம் நவவி அவர்கள் முஸ்லிமுக்கு எழுதிய விரிவுரை (பாகம் 2 பக்கம் 254) யிலும் காணலாம்.

'நான் அபீதாவிடம் சொன்னேன், எங்களிடம் அனஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் மூலமாகவோ, அவர்களது குடும்பத்தினர் மூலமாகவோ பெற்ற அண்ணலாரின்  திருமுடி ஒன்று உள்ளது. உலகில் உள்ள அனைத்துப் பொருளையும் விட இத்திருமுடி என்னிடம் இருப்பது மேலானது' என்று இப்னு ஸிரீன் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்.  –நூல்: புகாரி.

ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் (ஹஜ்ஜின் போது) மினாவில் கல்லெறிந்து விட்டு தம் இருப்பிடம் வந்து ஒட்டகை அறுத்த பின்னர், நாவிதரை அழைத்து தமது சிரசின் வலப்பக்கத்து முடியினை சிரைத்தெடுக்கச் கூறினார்கள். அபூதல்ஹா அன்சாரி என்ற தோழரை அழைத்து சிரைத்த அம்முடியைக் கொடுத்தனர். பின் இடது பக்கத்தையும் மழித்து அந்த முடியையும் அபூதல்ஹா அவர்களிடம் கொடுத்து மக்களுக்கு அவற்றைப் பங்கிட்டுக் கொடுக்குமாறு சொன்னார்கள்.'

அறிவிப்பாளர்: அனஸ் ரலியல்லாஹு அன்ஹு

நூல்: புகாரி, முஸ்லிம்.

இதன் மூலமாக அண்ணல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களே தம் திருமுடிகளை பங்கிட்டு கொள்ளுமாறு அறிவுறுத்தியதை அறிந்து கொள்ளலாம். அண்ணலாரின் முடிகள் பாதுகாக்கத் தகுந்ததல்ல என்றிருக்குமானால் நாயகமே தோழரை அழைத்து அதனைக் கொடுப்பார்களா?

உமர் இப்னு அப்துல் அஜீஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்களிடம் அண்ணலாரின் இரு காலுறைகள், ஒரு கம்பு, ஒரு வாளுறை இருந்தன. அவற்றை அவர்கள் மிகக் கண்ணியத்தோடு பாதுகாத்து அவற்றை தினமும் பார்வையிடவும் செய்வார்கள். சிறப்பு விருந்தினர்கள் யாராவது வருகை தரும் போது 'யார் மூலம் உங்களை கண்ணியப்படுத்தினானோ அவரின் அனந்தப் பொருட்கள் இவை'என்று கூறுவார்கள் என றூஹுல் ஈமான் (பக்கம் 2) எனும் நூல் கூறுகிறது.

முஆவியா ரலியல்லாஹு அன்ஹு அவர்களிடம் அண்ணலார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் லுங்கி, சட்டை, மேலாடை, சில திருமுடிகள், நகங்கள் இருந்தன. முஆவியா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் தங்கள் உயிர் பிரியும் நேரத்தில், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களி-ன் சட்டையால் என்னை கபனிடுங்கள், மேலாடையால் என்னை சுற்றி லுங்கியை எனக்கு உடுத்துங்கள். எனது கண்ணிலும், கன்னத்திலும், நெற்றியிலும் அண்ணலாரின் திருமுடியையும் நகங்களையும் வையுங்கள். எனக்கும் அர்ஹமுர்ராஹிமீனுக்குமிடையே நேசத்தை ஏற்படுத்துங்கள் என்று கூறினர்.

நூல்: இக்மால் பக்கம் 617

அண்ணலார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களி;ன் திருமுடி கீழே விழாதவாறு தாங்கி பிடித்து பரக்கத்திற்காக பாதுகாத்து வைக்கும் வழக்கம் சஹாபாக்களிடம் இருந்தது'.
ஷரஹ் முஸ்லிம் பாகம் 2 பக்கம் 256.

அஸ்மா ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் சொல்கிறார்கள்,' அண்ணலாரின் ஜிப்பா ஒன்று ஆயிஷா நாயகி ரலியல்லாஹு அன்ஹா  அவர்களிடம் இருந்தது. ஆயிஷாவின் வபாத்துக்குப் பின்னர் அதனை நான் பெற்றேன். தற்போது அந்த ஜுப்பாவைக் கழுகி நோயுற்றவர்களுக்குக் குடிக்க கொடுக்கிறோம். அவர்கள் அதன் மூலம் சுகமும் பெறுகின்றனர்.'

முஸ்லிம், மிஷ்காத் பக்கம் 374, கிதாபுஷ்ஷிh பாகம் 2 பக்கம் 27.

இந்த ஹதீஸின் மூலம் ஸாலிஹீன்களின் உடைகளைக் கொண்டும், ஞாபகச் சின்னங்களைக் கொண்டும் பரகத் பெற ஆதாரமிருக்கிறது. -ஷரஹ் முஸ்லிம் பாகம் 2 பக்கம் 191

அண்ணலாரின் அன்பு மகளை நாங்கள் குளிப்பாட்டிக் கொண்டிருந்த போது ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எங்களிடம் வந்து, 'நீங்கள் மூன்று தடைவ அல்லது ஐந்து தடைவ அல்லது அதை விட அதிகமாக குளிப்பாட்டுங்கள். நீரையும், சீயக்காயையும் போட்டு நீர் ஊற்றி விட்டு இறுதியில் கற்பூரத்தை வையுங்கள். எல்லாம் முடிந்து விட்டால் எனக்குத் தகவல் கொடுங்கள் என்று கூறினர். அனைத்தும் முடிந்தபோது அண்ணலாரை அழைத்தோம். அண்ணலார் தமது வேட்டியைத் தந்து அதை அன்னாருக்கு ஞாபகச் சின்னமாக அணிவித்து விடுங்கள் என்று சொன்னார்கள்.-அறிவிப்பாளர்: உம்மு அதிய்யா. நூல்: முஸ்லிம் பாகம் 1 பக்கம் 304.

இந்த ஹதீஸில் ஸாலிஹீன்களின் உடைகள், ஞாபகச் சின்னங்களைக் கொண்டு பரக்கத் பெறுவது ஆகும் எனப்தற்கு ஆதாரமிருக்கிறது. -ஷரஹ் முஸ்லிம் பாகம் 1 பக்கம் 305.

நன்றி: வஸீலா 15-2-1987