நூரினில் நூரான…

நூரினில் நூரான…

By Sufi Manzil 0 Comment June 24, 2015

நூரினில் நூரான

       நூரே முஹம்மதிய்யா

நுபுவத்தின் முத்திரையை

       முத்திடுவோம் வாருங்களேன்

கண்ணீரும் கரைந்தோட

       கண்மணி தர்பாரை

களிப்போடு காண்போமே

       அன்பான சகோதரியே!

முதலாம் வசந்தமாம்

       ரபீயுல் அவ்வலிலே

முழுமதியாய் தோன்றிய

       முத்திரை நபி அழகே

ரஹ்மானின் புண்ணிய

       நேசராய் வந்தீரே

ரஹ்மத்துலில் ஆலமீனாய்

       ஆலத்தில் அவதரித்தீர்

அங்கம் குளிர்ந்திட

       பங்கம் மறைந்திட

அலங்காரமாய் பிறந்தீர்

       அன்பார்ந்த ஆன்றலரே!

உங்களை ஆசித்தோர்

       ஆஷிக்காய் மனம் பெற்றோர்

உங்களை வெறுத்தோர்கள்

       வெதும்பியே போனார்கள்

மன்னரே மஹ்மூதே

       முஸ்தஃபா மா நபியே

மலர வைப்பீர் எங்களையும்

       ஆஷிக்கீன் கூட்டத்திலே

தாஜுல் முத்த கீனே

தாஹாவே தவப் பொருளே

என் தலையினில் கிரீடமாய்

       சூடிடுவேன் தங்களையே!

இறை நெருக்கம் கிடைத்திட்ட

       மிஃராஜின் நேரத்திலும்

இறை சமூகம் நம் தனையே

       நினைத் துருகிய நாயகமே

நரகத்தில் பெண்ணில் நிலைக்

       கண்டு மனம் வெதும்பி

நாவதைப் பேணிக் கொள்

       நவின்றீர்கள் நாயகமே!

பெண் மகவே என் மகள்தான்

       காத்தீரே எம் இனத்தை

பெருமானே உங்கள்

       புகழ் பாடி மகிழ்ந்திடுவோம்!

உயிர்ப் பிரியும் உன்னத

       நேரத்திலும் எம்மானே

உம்மத்தை உயிர் மூச்சாய்

       கொண்டீர்கள் கோமானே!

எம் உயிர்ப் பிரியும் முன்

       உம் முகத்தை யாம் காண

மடியினில் பிச்சையாய்

       கேட்கிறோம் கோமானே!

தட்டாமல் தருவீரே

       ஹோஜா முஹம்மதரே

விரட்டாமல் ஏற்பீரே

       ஏகோனின் இரசூலே!

அனலாய் கொதித்திடும்

       மஹ்ஷரின் நேரத்திலும்

அரவணைப்பீர் லிவாவுல்

       ஹம்தினில் அண்ணலரே!

தாகித்தால் நாவரண்டு

       தவித்திடும் தருணத்திலே

தங்க நிகர் ஹவ்ழினில்

       புணல் தருவீர் ஆருயிரே!

மஹ்மூ தெனும் தலத்தில்

       மன்னான் முன் சிரம் பணிந்து

மாண்பான மன்றாட்டம்

       புரிந்திடுவீர் கோமானே!

ஸிராத்துல் பாலமதை

       மின்னலென யாம் கடக்க

சிறப்பான முந்தானையைத்

       தருவீரே முஹம்மதரே!

அர்ஷினை அலங்கரிக்கும்

       அல்லாஹ்வின் ஜோதி தனை

அகம் மலர முகம் மலர

       பார்த்திடணும் பார்த்திபரே!

அல்லாஹ் நீ உவந்திடும்

       எம் உயிரான உத்தமரின்

அருகினில் யாம் இருக்க

       வரம் தருவாய் வல்லவனே!

ஷரீஅத் நெறி முறையைச்

       சரியாமல் நிறுத்திய எம்

ஸாதாத் தாம் குருநாதர்

       முஹ்யித்தீன் ஆண்டகையின்

பெயர்த் துலங்கும் எம்

       எம் ஸபையினர்க் கூடியே

பெருமிதமாய் உழைப்போர்தம்

       வாழ்வெல்லாம் செழித்தோங்க

இகபர வாழ் வெல்லாம்

       இறையன்பும் நபியன்பும்

இறைஞ்சியைக் கேட்கின்றோம்

தந்திடுவாய் ரஹ்மானே!

(நிறைவு)

Add Comment

Your email address will not be published. Required fields are marked *