நவீன உருவில் தப்லீக் ஜமாஅத்! சுன்னத் வல் ஜமாஅத்தினர்களுக்கு எச்சரிக்கை!!

நவீன உருவில் தப்லீக் ஜமாஅத்! சுன்னத் வல் ஜமாஅத்தினர்களுக்கு எச்சரிக்கை!!

By Zainul Abdeen 0 Comment May 22, 2022

Print Friendly, PDF & Email

அல்லாஹ்வின் நல்லருளும் அண்ணலெங்கள் கோமான் முஹம்மத் முஸ்தபா ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் நல்லாசியும் நம் அனைவர் மீதும் என்றென்றும் நின்று நிலவட்டுமாக.. ஆமீன்.

கண்ணியமிகு கனவான்களே!

இஸ்லாமியர்களின் ஒற்றுமையை சீர்குலைத்து நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் மற்றும் சாலிஹீன்கள், இறைநேசர்களின் மீதுள்ள கண்ணியம்- மரியாதையை குறைக்கும் நோக்கோடு ஆங்கிலேயர்களால் உருவாக்கப்பட்ட வஹ்ஹாபிய மதம் மறு உருவம் எடுத்து தப்லீக் என்ற போர்வையில் முஸ்லிம்கள் மத்தியில் உள் நுழைந்தது.

அது தன்னை தொழுகைக்கு அழைக்கிறோம் என்ற பெயரில் நம்முடைய இஸ்லாத்திற்கு விரோதமான தீயக் கருத்துக்களை பரப்பி முஸ்லிம்களின் ஈமானை பாழாக்கிடத் துணிந்தது.

இந்தக் கூட்டத்தின் கபட வேடத்தை அறிந்த சுன்னத் வல் ஜமாஅத் அறிஞர்கள், உலமாக்கள், இறைநேசர்கள் இவர்களைப் பற்றி எச்சரித்தும், பத்வாக்கள் வெளியிட்டும் மக்களிடம் அடையாளப்படுத்திக் கொண்டே இருந்தனர்.

தப்லீகின் மூத்த தலைவர்களான இஸ்மாயீல் திஹ்லவி, காசிம் நானுத்தவி, செய்யித் அஹ்மத் ரேபரேலி, ரஷீத் அஹ்மத் கங்கோஹி, கலீல் அஹ்மத் அம்பேட்டவி, அஷ்ரப் அலி தானவி போன்றோர் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை மிகத் தரக்குறைவாக விமர்சித்து எழுதியதால்- பேசியதால், இன்னும் இதில் சிலர் தம்மை நபி என்று வாதிட்டதால் அவர்களை வழிகேடர்கள் என்றும் காபிர்கள் என்றும் பத்வா வெளியிட்டவர்கள் நம் சுன்னத் வல் ஜமாஅத் உலமாக்களும் இறைநேசர்களும்தான். மேலும் அவர்களிடம் எவ்வித தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது என்றும் அன்னார்களை ஒப்புக் கொள்பவர்களும் அவர்களைச் சார்ந்த வழிகேடர்களே என்றும் அதில் உறுதிபட தெரிவித்திருந்தார்கள்.

இதில் தமிழ் உலகில் அல்லாமா ஸூபி ஹழ்ரத், நாகூர் பாக்கர் ஆலிம், கம்பம் அம்பா நாயகம், அஸ்ஸெய்யித் இஸ்மத் பாஷா சகாப் நாயகம், மௌலவி எப்.எம். இப்றாஹீம் ரப்பானி ஆலிம், மௌலவி முஹம்மதலி ஸைபுத்தீன் ஆலிம், மௌலவி ஊண்டி செய்யிது முஹம்மது ஆலிம், மௌலவி கலந்தர் மஸ்தான் ஆலிம், மௌலவி ஷேக் அப்துல் காதர் ஆலிம் மலேசிய வாப்பா ரழியல்லாஹு அன்ஹும், மௌலவி G.S.T.ஹபீபு முஸ்தபா ஆலிம், செய்யிது வஜீஹுன்னகீ சகாப் ஆலிம், நூஹ் முஹ்யித்தீன் ஆலிம், காஸிம் மஹ்லரி, அஸ்ஸெய்யிது அப்துர் ரஹ்மான் தங்கள் ஆலிம் போன்ற எண்ணற்ற சுன்னத் வல் ஜமாஅத் ஆலிம்கள் அந்தத் தப்லீக் தலைவர்கள் கொண்டிருந்த வழி கெட்ட கொள்கைகளை மக்கள் மத்தியில் பகிரங்கமாக வெளிப்படுத்தி மக்களை எச்சரித்தனர்.

இதனால் வெருண்ட- தங்கள் முகமூடி கிழிவதைக் கண்ட வஹ்ஹாபிய தப்லீக் ஜமாஅத்தினர் முஃமின்கள் மத்தியில் ஊடுருவ புதியதொரு தந்திரத்தைக் கையாண்டனர்.

சுன்னத் வல் ஜமாஅத்தினர் மட்டுமே பின்பற்றி வரும் ஸூபிஸ தரீகாக்களின் பெயரில் தங்கள் கொள்கைககளை உட்புகுத்த ஆரம்பித்தனர். மேலும் இதில் தம்மை ஸாதாத்துமார்கள் என்றும் சொல்லிக் கொள்ளலாயினர்.

அவர்களில் முதன்மையானோர் நூரிஷாஹ் தரீகத்தினர் . இவர்கள் நமது சுன்னத் வல் ஜமாஅத் அறிஞர்கள், இறைநேசர்கள், உலமாக்கள் வழிகேடர்கள் என்று நமக்கு காட்டித் தந்த இஸ்மாயீல் திஹ்லவி, ரஷீத் அஹ்மத் கங்கொஹி, அஷ்ரப் அலி தானவி, செய்யிது அஹ்மது ரேபரேலி போன்றோரை மகான்களாகவும் இறைநேசர்களாகவும் சைகுமார்களாகவும் போற்றத் துவங்கினர்.

அதன்மூலம் வஹ்ஹாபியக் கருத்துக்களை மக்கள் மத்தியில் பரப்பத் துவங்கியிருக்கின்றனர்.

தரீகாத்தானே என்று எண்ணி இதில் நுழைந்தவர்கள் வெளியேற வழித் தெரியாமல் வஹ்ஹாபிகளாகி விழிபிதுங்கி நிற்கின்றனர்.

காமிலான ஷைகுமார்களின் கரத்தைப் பற்றிப் பிடித்தவர்கள் இவர்களின் வழிகேட்டிலிருந்து தப்பிக் கொள்கின்றனர்.

ஆங்காங்கே பிலாலிய்யா, ஆமிரிய்யா, அதாயி, அன்வாரிய்யா, சுஹூதி போன்ற பல்வேறு பெயர்களில் மத்ரஸாக்கள், தரீகத் ஆன்மீக மாநாடுகள் என்ன பெயரில் கூட்டங்கள், விழாக்கள் நடத்தி தாங்களும் சுன்னத் ஜமாஅத் என்று கூறிக் கொண்டு மக்களை வழிகெடுத்துக் கொண்டிருக்கின்றனர்.

இதில் ஸூபி ஹழ்ரத், அம்பா நாயகம் போன்றோர் நூரிஷாஹ் தரீகாவை எதிர்க்கவில்லை என்று பொய்யான பிரச்சாரத்தையும் முன் வைக்கின்றனர். என்னே இவர்களின் தந்திர உபாயம்.

_நூரி ஷாஹ் தரீகத்தினர் தப்லீக் தலைவர்களில் யாரையெல்லாம் மகான்களாக கொண்டாடுகிறார்களோ அவர்கனைவர்களையும் ஸூபி நாயகமும் அம்பா நாயகமும் வழிகேடர்கள் என்றல்லவா சொல்லியிருக்கிறார்கள்._

அவர்கள் காலத்தில் நூரிஷாஹ் தரீகத் என்ற பெயர் அவ்வளவு பிரபலமானதாக இருக்கவில்லை. தப்லீக் ஆரம்பித்த காலத்தில் அதன் வடிவம் எப்படியிருந்ததோ அந்த வழிமுறையிலேயே தங்களின் உண்மை சுயரூபத்தை மறைத்துக் கொண்டனர். ஆனால் அவர்கள் கொண்ட கொள்கை – போற்றும் தலைவர்கள் வழிகேட்டுடையதாக இருந்தது. ஆக கொள்கையின் அடிப்படையில் நூரிஷாஹ் தரீகத் வழிகேடே என்று காட்டிச் சென்று விட்டார்கள்.

இதில் அம்பா நாயகம் அவர்கள் நூரி ஷாஹ் தரீகத் வழிகேடு என்றும், அஷ்ரப் அலி தானவியை யார் ஏற்றுக் கொண்டார்களோ அவர்கள் சுன்னத் வல் ஜமாஅத்தில்லை என்று சொல்லிய பதிவுகளும் இருந்து கொண்டிருக்கிறது.

அவர்கள் தவ்ஹீத் ஜமாஅத்தை, ஸலபியை, ஜாக்கை -இது போன்ற பல்வேறு பெயர்களில் புதிதுபுதிதாக தோன்றிக் கொண்டிருக்கும் இயக்கங்களையும் பெயர் சொல்லி எதிர்க்கவில்லைதான். ஆனால் அவர்கள் கொள்கை சுன்னத் ஜமாஅத்திற்கு மாறுபட்டது. அதேபோல்தான் நூரிஷாஹ் தரீகாவும்.

கொண்ட கொள்கையின் அடிப்படையிலேயே ஒன்றை வழிகேடு என்றழைக்க முடியும். அது எந்த பெயர் கொண்டு வந்தாலும் சரிதான். அதன் அடிப்படையிலேயே நூரிஷாஹ் தரீகத் வழிகேடு. இதைத்தான் நமது உண்மையான ஷைகுமார்களும், சுன்னத் வல் ஜமாஅத் உலமாக்களும், மகான்களும் சொல்கிறார்கள். அதைவிட்டு விலகி நிற்கவும் எச்சரிக்கிறார்கள்.

தம்மை சுன்னத் வல் ஜமாஅத் என்று சொல்லிக் கொண்டு வழிகெட்ட நூரிஷாஹ் தரீகத்தை ஆதரிக்கும்- அவர்களின் கூட்டங்கள், ஆன்மீக மாநாடுகளில் கலந்து கொள்ளும் உலமாக்களும் வழிகேடர்களே! இவர்களை விட்டும் மக்கள் விலகி இருக்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்துகிறார்கள்.

ஆகவே சுன்னத் வல் ஜமாஅத்தினர்களே! தப்லீக் ஜமாஅத்தினர்கள் – நூரிஷாஹ் தரீகத்தினர் என்ற பெயரில் பல்வேறு வடிவங்களில் –( மத்ரஸா, ஹிப்ளு மத்ரஸா, ஆன்மீக மாநாடு போன்ற) வருகிறார்கள். உஷார்! உங்கள் ஈமானை பாதுகாத்துக் கொள்ளுங்கள்.

அல்லாஹ் நம் ஷைகுமார்கள் பொருட்டால் நம்மை வழிகேட்டிலிருந்து காத்தருள்வானாக. ஆமீன்.

இவண்,

ஜம்இய்யத் அஹ்லிஸ் ஸுன்னத் வல் ஜமாஅத்,
சதுக்கைத் தெரு
காயல்பட்டினம்.

Add Comment

Your email address will not be published.