இறந்தவர்களுக்கு தல்கீன் ஓத வேண்டுமா?

இறந்தவர்களுக்கு தல்கீன் ஓத வேண்டுமா?

By Sufi Manzil 0 Comment March 31, 2011

Print Friendly, PDF & Email

கேள்வி: மையித்தை அடக்கியபின் அவருக்கு தல்கீன் ஓத வேண்டுமா? அதனை அவரால் கேட்க முடியுமா?

பதில்: 'நபியே! நீங்கள் நல்லுபதேசம் செய்யுங்கள். ஏனென்றால் நல்லுபதேசம் நிச்சயமாக முஃமின்களுக்கு பயனளிக்கும்.

ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்கள், ஒரு மனிதன் இறந்ததும் மண்ணறைக்குள் அடக்கம் செய்துவிட்டு திரும்புகின்ற மக்களின் பாதணியின் சப்தத்தை அந்த மைய்யித்துக் கேட்கின்றது'என. (நூல்: புகாரி)

இறந்தவரின் உடலை கப்றில் வைத்து நல்லடக்கம் செய்த பின் ஒருவர் அடக்கப்பட்டவரின் தலைமாட்டில் அமர்ந்து, இன்னார் மகனே! அல்லது இன்னார் மகளே! இறைவன் ஒருவன் என்றும் முஹம்மதுர் ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அல்லாஹ்வின் தூதர் என்றும் ஈமான் கொண்டு இவ்வுலகில் வாழ்ந்து மறுஉலகாகிய மறுமைக்கு சென்றுள்ளாய்.

இப்போது உன்னிடம் இரு மலக்குகள் வந்து உனது நாயன் யார்? உனது நபி யார்? உனது சகோதரர்கள் யார்? உனது கிப்லா எது? உனது இமாம் யார்? என்று கேட்பர். அதற்கு நீர் கொஞ்சமும் தயங்காது தைரியமாக எனது றப்பு அல்லாஹ், எனது நபி முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் , எனது சகோதரர்கள் முஸ்லிம்கள், எனது கிப்லா கஃபா, எனது இமாம் குர்ஆன் என்று சொல்வீராக! என்று சொல்லியபின் அவரை விட்டும் விடைபெறுவது என்பதாகும். அதனை அவர் கேட்பார். (நூல் தப்றானி)

தல்கீன் ஓதுவது சுன்னத் என்று உம்மத்துஸ் ஸாலிக், பத்ஹுல் முஈன், மஹல்லி போன்ற நூற்களில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இமாம் அஹ்மது இப்னு ஹன்பல் ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்களிடம் தல்கீன் ஓதுவது பற்றி கேட்டதற்கு, 'ஆம்! அது சுன்னத்தான காரியம்' என்று சொன்னார்கள்.

எல்லாக் காலங்களிலும் அனைத்து நகரங்களிலும் எவ்வித மறுப்பும் இன்றி தல்கீன் ஓதிவரும் நடைமுறை ஒன்றே தல்கீன் ஓதுவதற்கு போதுமான சான்றாகும்.

ஆதாரம்: றூஹ் பக்கம் 20.

இமாம் இப்னு ஹஜர் மக்கி ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள்  கூறுகின்றார்கள், 'புத்தியுள்ள பருவமடைந்த மைய்யித்திற்கு தல்கீன் ஓதுவது சுன்னத்தாகும். ஆதாரம்: துஹ்பா, பாகம் 3, பக்கம் 207.

இமாம் ஷிஹாபுத்தீன் ரமலி ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்களிடம் தல்கீன் ஓதுவது ஸுன்னத்தா, அல்லது மக்ரூஹா? தல்கீன் சொல்லிக் கொடுப்பது அடக்கம் செய்வதற்கு முன்பா? அல்லது அடக்கம் செய்யப்பட்ட பின்பா? என்று கேட்டதற்கு

சிறு குழந்தை தவிர்ந்தவர்களுக்கு மைய்யித் அடக்கம் செய்யப்பட்ட பின் தல்கீன் சொல்லிக் கொடுப்பது சுன்னத் ஆகும். ஆதாரம்: பதாவா றமலி பாகம்2, பக்கம் 38.

ஹாபிழ் இமாம் ஜலாலுத்தீன் சுயூத்தி ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் கூறுகின்றார்கள், நபிமார்களுக்கும் சிறுவர்களுக்கும் கப்று விசாரணையோ கப்றின் வேதனையோ முன்கர் நகீரின் கேள்வி கணக்கோ கிடையாது. அதனால், ஷாபிஈ மத்ஹபின் அஸ்ஹாபுகள் சிறுவர்கள் (பருவம் எய்த முன்) அடக்கம் செய்யப்பட்ட பின் அவர்களுக்கு தல்கீன் கூறப்பட மாட்டாது என்று.

தல்கீன் சொல்லிக் கொடுப்பது பருவம் அடைந்தவர்களுக்கு மட்டும் சொந்தமானதாகும். இமாம் நவவி அவர்கள் ரௌலா என்ற நூலிலும் ஏனைய அவர்களின் நூற்களிலும் இவ்வாறுதான் கூறியுள்ளார்கள்.

ஆதாரம்: ஷரஹுஸ்ஸுதூர் பக்கம் 152.

வழிகெட்ட முஃதஸிலா இயக்கத்தினரே மரணித்தவர்களுக்கு தல்கீன் ஓதக் கூடாது என்று முதன் முதலில் வாதித்தனர். மரணித்தவர் கப்ரில் மீண்டும் உயிர் பெற்று எழுப்பப்படுவதையும், கப்ரில் விசாரணை செய்யப்படுவதனையும் நிராகரித்தனர். ஆனால் அஹ்லுஸ்ஸுன்னத் வல் ஜமாஅத்தினர் மத்தியில் மரணித்தவர்களுக்கு தல்கீன் சொல்லிக் கொடுப்பது சுன்னத்தாகும்.

ஆதாரம்: ரத்துல் முக்தார் பாகம் 1, பக்கம் 571.

தல்கீன் ஓதாதவரும் ஓதமறுப்பவரும் மஃதஸிலா இயக்கத்தைச் சார்ந்தவராகும். இவர்கள் மய்யித்தை உணர்வற்ற சடமாகவும் மரணத்தின் பின் கப்ரில் உயிர் கொடுத்து எழுப்பப்படுவதையும் நிராகரிக்கின்றனர்.

ஆதாரம்: பதாவா ரிஸ்வியா பாகம் 9 பக்கம் 782.