sah waliullah-ஷாஹ் வலியுல்லாஹ் ஸூபி ரலியல்லாஹு அன்ஹு.

sah waliullah-ஷாஹ் வலியுல்லாஹ் ஸூபி ரலியல்லாஹு அன்ஹு.

By Sufi Manzil 0 Comment February 11, 2010

Print Friendly, PDF & Email
 
ஷாஹ் வலியுல்லாஹ் ஸூபி ரலியல்லாஹு அன்ஹு.
 
அமீருல் முஃமினீன் ஹஜ்ரத் உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் வழியில் ஹிஜ்ரி 1114 ஷவ்வால் மாதம் பிறை 4 ல் தோன்றிய ஷெய்கு ஷாஹ் அப்துர் ரஹீம் வலி ரலியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு மகனாக பிறந்தார்கள். தந்தையார் அவர்கள் அவர்களுக்கு வலியுல்லாஹ் என்று பெயரிட்டார்கள். முன்பு ஒரு தடவை குத்புத்தீன் அஹ்மது பக்தியார் காகீ ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் அடக்கவிடத்தை தரிசித்த அப்துர் ரஹீம் வலி அவர்களுக்கு, 'ஒரு நன் மகன் பிறக்கப் போகும் செய்தியையும் அதற்கு தமது பெயரையே சூட்ட வேண்டும் என்றும் அந்த வலி அவர்களின் அறவிப்பு கிடைத்திருந்தது. அதன்படி வலியுல்லாஹ் அவர்களுக்கு குத்புத்தீன் அஹ்மது என்றும் பெயரி;ட்டார்கள். 
 
சிறு வயதிலேயே முழுக் குர்ஆனை ஓதி முடித்துவிட்டு பார்ஸி மொழியிலுள்ள மார்க்க நூல்களை பயிலத் தொடங்கிவிட்டார்கள். ஏழு வயதில் ஷரஹ் முல்லா ஜாமியை ஓதிமுடித்து விட்டனர். பின்னர் மிஷ்காத்தை தம் தந்தையிடம் ஓதினர். பின்னர் தப்ஸீர் பைளாவியை ஓதினார்கள். அதை பிறருக்கு ஓதிக் கொடுக்கவும் தம் தந்தையிடம் அனுமதி வாங்கினர். அதன்பின் தாம் கற்ற மர்க்க,ஆன்மீக நூல்கள் அனைத்தையும் தம் மகனுக்கு ஓதிக் கொடுத்தார்கள்.
 
தந்தையார் தம் துணைவியரின் உடன்பிறந்தார் ஷைகு உபைதுல்லாஹ்வின் அருமை மகளை தம் மகனுக்கு மணம் முடித்து வைத்தார்கள்.
 
தம் இறுதி காலத்தில், தம் மகனுக்கு தீட்சை வழங்கி தன்னுடைய கலீபாவாகவும் நியமித்தார்கள். அதன்பின் அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்களிடமிருந்து தமக்கு கிடைத்த இரு திருமுடிகளில் ஒன்றை தம் மகனுக்கு வழங்கி வாழ்த்தினார்கள். தந்தையின் வபாத்திற்குப்பின் அவர்களின் அடக்கவிடத்திற்கு சென்று தியானத்தில் வீற்றிருப்பார்கள். அதன்காரணமாக அவர்களுக்குப் பல ஆன்மீக ரகசியங்கள் விளங்கலாயின.
 
தந்தைக்குப் பின் ரஹீமிய்யா மதரஸாவின் தலைமைப் பதவி தாங்கி, மாணவர்களுக்கு பாடம் போதித்து வந்தனர்.சுமார் 12 ஆண்டுகாலம் அப்பணியில் ஈடுபட்டிருந்த அவர்கள் தம் நேரத்தை பிரித்து அதில் ஒரு பகுதியை மாணவர்களுக்குப் பாடம் போதிப்பதிலும், நவீன அறிவியல் நூல்களை ஆய்வதிலும் மற்றொரு பகுதியை இறை வணக்கத்திலும்,தியானத்திலும் வேறோரு பகுதியை தம்மைக் காண வருபவர்களிடம் உரையாடுவதிலும் செலவிட்டு வந்தார்கள். இரவை வணக்கத்திலும், ஓய்வு கொள்வதிலும் கழித்து வந்தார்கள்.
 
தம் தந்தையிடம் ஹதீது பாடங்களை கற்ற போதினும் அது பற்றாது என எண்ணி மக்கா, மதீனா சென்று அங்கிருந்த ஹதீது விற்பன்னர்களிடம் ஹதீதுக் கலையைப் பயின்று வந்தனர்.மேலும் ஹதீதை ஆழமாக பயில வேண்டும் என்ற நோக்கம் கொண்டனர். ஹிஜ்ரி 1143 ரஜப் மாதம் ஹஜ் செய்யும் நோக்குடனும், ஹதீது பயிலும் நோக்குடனும் ஹிஜாஸ் பயணம் மேற்கொண்டனர்.
 
மக்காவில் ஷெய்கு முஹம்மது வஃப்துல்லாஹ்விடமும், ஷெய்கு தாஜுத்தீன் கலாயீயிடமும் சென்று இமாம் மாலிக் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் எழுதிய 'முஅத்தாவை'  பயின்று அதனை பிறருக்கு பயிற்றுவிக்கவும் அனுமதி பெற்றனர். அவர்கள் இருவரும் அவர்களுக்கு கிர்க்கா அணிவித்து கௌரவித்தனர். மேலும் ஈஸா ஜஃபரி மஃரிபியடமிருந்தும் ஷெய்கு இப்றாகிம் குர்தியிடமிருந்தும் ஹதீதுகலை போதிக்க அனுமதி பெற்றதுடன் அவர்களிடமிருந்து கிர்காவும் பெற்றனர். நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்கள் காலத்தில் வாழ்ந்த ஜின் இன சஹாபியிடமிருந்து ஒரு ஹதீதை கற்றுக் கொண்டார்கள். இது அவர்களுக்கு கிடைத்த மிகப்பெரும் பாக்கியமாகும்.
 
மக்காவில் தங்கியிருந்தபோது அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஷாஹ் வலியுல்லாஹ் அவர்களுக்கு திருக்காட்சி வழங்கியுள்ளார்கள்.
 
மதீனாவில் ஷெய்கு அபூதாஹிர் அவர்களிடம் ஆறு உண்மையான ஹதீது நூல்களை படித்து முடித்ததோடு மட்டுமில்லாமல், பிறருக்கும் போதிக்க அனுமதி பெற்றனர். மேலும் தலாயிலுல் ஹைராத்தையும், கஸீதத்துல் புர்தாவையும் ஓதிவர அவர்களிடமே அனுமதி பெற்றனர். ஷெய்கு அவர்கள் ஷாஹ் வலியுல்லாஹ் அவர்களுக்கு கிர்க்காவையும் அணிவித்து கௌரவித்தனர். அதன்பின் மக்கா வந்த அவர்கள் ஹரம் ஷரீஃபி;ல் இஃதிகாஃப் இருந்தபோது அவர்களுக்கு கனவின் மூலம் காயிதுஸ் ஸமான் என்ற பட்டம் வழங்கப்பட்டது. பின்னர் இரண்டாவது தடவை ஹஜ் செய்தார்கள். ஹிஜ்ரி 1145 ரஜப் மாதம் 14 அன்று டில்லி வந்து சேர்ந்தார்கள்.
 
திருக் குர்ஆனை பார்ஸியில் மொழியெர்த்து அதற்கு விரிவுரையும் எழுதி 'ஃபத்ஹுர் ரஹ்மான்' என்ற பெயரில் வெளியிட்டார்கள். திருக்குர்ஆனில் காணப்படும் அபூர்வ விஷயங்களுக்கு விளக்கம் கண்டு 'ஃபத்ஹுல் கபீர்' என்ற பெயருடன் ஒரு நூல் எழுதினார்கள்.
 
ஸூபி தத்துவத்தின் வளர்ச்சி பற்றி 'ஹமஆத்' என்ற நூலும் த்துவ ஞானம் பற்றி 'அல் கைருல் கதீர்' என்ற நூலும் முஅத்தா நூலுக்கு 'அல்முஸவ்வா' என்ற பெயரில் அரபியில் விளக்கவுரையும் 'அல்முஸஃப்பா'என்ற பெயரில் பார்ஸயில் விளக்கவுரையும் எழுதியுள்ளார்கள். இறைநேசர்களின் வாழ்க்கை வரலாற்றை தொகுத்து 'இன்திபாஹ் ஃபீ ஸலாஸில் ஒளலியா' என்ற பெயரில் நூல் எழுதியுள்ளர்கள். ஹஜ்ஜத்துல் லாஹுல் பாலிகா' என்ற மாபெரும் நூலையும், தம் தந்தை பற்றி 'அன்ஃபாஸுல் ஆரிஃபீன்' என்ற பெயருடனும், தனது வரலாறை 'அல் ஜுஸ்உல் லதீ.ப்'  என்ற பெயருடனும் நூல் எழுதியுள்ளார்கள். தமக்கு இறைவனிடமிருந்து கிடைக்கப் பெற்ற உதிப்புகளை எல்லாம் ஒன்று சேர்த்து 'அல் தஃப்ஹீமாத்துல் இலாஹிய்யா'என்ற பெயருடன் நூல் எழுதியுள்ளார்கள்.
 
முஸ்லிம்களின் அரசியல் வீழ்ச்சியைத் தடுக்கவும், இஸ்லாமிய மறுமலர்ச்சியைக் கnhணரவும் தம்மால் இயன்ற அனைத்தையும் செய்தார்கள். அவர்கள் ஸூபிகளுக்கும், மார்க்க மேதைகளுக்கும் இடையே பாலம் அமைத்தார்கள்.முஸ்லிம்களிடையே புகுந்துள்ள இஸ்லாத்திற்கு விரோதமான அனாச்சாரங்களை பெரிதும் கண்டித்தார்கள்.
 
இவர்கள் தங்கள் காலத்தின் முஜத்திதாக திகழ்ந்தார்கள். இஸ்லாமியர்களுக்கு எதிராக மராட்டியர்களின் கொடுமை அதிகரித்தபோது ஆப்கன் மன்னர் அஹ்மது ஷா அப்தாலிக்கு நஜபுத் தௌலா மூலம் கடிதம் எழுதினர். மடலைப் பெற்ற மன்னர் ஹிஜ்ரி 1174ல் இந்தியா மீது படை எடுத்து மராட்டியர்களை பானிபட் என்னுமிடத்தில் தோற்கடித்து வெற்ளி வாகை சூடினார். இப்போரில் மராட்டியர் வலு முற்றிலும் அழித்தொழிக்கப்பட்டது.
 
இவர்களின் தரீகா வலியுல்லாஹி தரீகா என்று பெயர் பெற்று விளங்கியது.  மக்களுக்கு தீட்சை வழங்கும்போது காதிரிய்யா, சிஷ்தியா, நக்ஷபந்தியா, சுஹரவர்தியா ஆகியவற்றில் தீட்சை வழற்குவார்கள். இறைவனை அணுகும் வழிகளில் தம்முடைய வழி இறைவனுக்கு மிகவும் அண்மையிலுள்ள வழி என்று தங்களது தரீகாவைப் பற்றி புகழந்;துரைக்கின்றனர்.
 
இவர்கள் ஹிஜ்ரி 1176 ம் ஆண்டு  முஹர்ரம் மாதம் பிறை 29 சனிக் கிழமை நண்பகலில் டில்லியில் வைத்து தமது அறுபத்தி ஓராவது வயதில் மறைந்தார்கள். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.