ஆதம் அலைஹிஸ்ஸலாம்

ஆதம் அலைஹிஸ்ஸலாம்

By Sufi Manzil 0 Comment February 20, 2015

Print Friendly, PDF & Email

இந்த உலகத்தைப் படைத்த இறைவன், அதில் வாழ்வதற்கு ஏற்ற சமுதாயமாக மனிதனைப் படைக்க எண்ணி தனது எண்ணத்தை மலக்குகளிடத்தில் சொல்லிக் காட்டினான். அந் நேரத்தில் அந்த மலக்குகள் இறைவனிடம் கருத்துத் தெரிவித்தார்கள்.

وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً ۖ قَالُوا أَتَجْعَلُ فِيهَا مَن يُفْسِدُ فِيهَا وَيَسْفِكُ الدِّمَاءَ وَنَحْنُ نُسَبِّحُ بِحَمْدِكَ وَنُقَدِّسُ لَكَ ۖ قَالَ إِنِّي أَعْلَمُ مَا لَا تَعْلَمُونَ

(நபியே!) இன்னும் உம் இறைவன் வானவர்களை நோக்கி ‘நிச்சயமாக நான் பூமியில் ஒரு பிரதிநிதியை அமைக்கப் போகிறேன்’ என்று கூறியபோது அவர்கள் ‘(இறைவா!) நீ அதில் குழப்பத்தை உண்டாக்கி, இரத்தம் சிந்துவோரையா அமைக்கப்போகிறாய்? இன்னும் நாங்களோ உன் புகழ் ஓதியவர்களாக உன்னைத் துதித்து, உன் பரிசுத்தத்தைப் போற்றியவர்களாக இருக்கின்றோம் என்று கூறினார்கள். அதற்கு இறைவன் ‘நீங்கள் அறியாதவற்றையெல்லாம் நிச்சயமாக நான் அறிவேன்’ எனக் கூறினான். (திருக்குர்ஆன் 2:30)

وَعَلَّمَ آدَمَ الْأَسْمَاءَ كُلَّهَا ثُمَّ عَرَضَهُمْ عَلَى الْمَلَائِكَةِ فَقَالَ أَنبِئُونِي بِأَسْمَاءِ هَٰؤُلَاءِ إِن كُنتُمْ صَادِقِينَ

இன்னும் (இறைவன்) எல்லாப் (பொருட்களின்) பெயர்களையும் ஆதமுக்கு கற்றுக் கொடுத்தான் பின் அவற்றை வானவர்கள் முன் எடுத்துக்காட்டி, ‘நீங்கள் (உங்கள் கூற்றில்) உண்மையாள்ர்களாயிருப்பின் இவற்றின் பெயர்களை எனக்கு விவரியுங்கள்’ என்றான் (திருக்குர்ஆன் 2:31)

قَالُوا سُبْحَانَكَ لَا عِلْمَ لَنَا إِلَّا مَا عَلَّمْتَنَا ۖ إِنَّكَ أَنتَ الْعَلِيمُ الْحَكِيمُ

அவர்கள் ‘(இறைவா!) நீயே தூயவன். நீ எங்களுக்குக் கற்றுக்கொடுத்தவைத் தவிர எதைப்பற்றியும் எங்களுக்கு அறிவு இல்லை. நிச்சயமாக நீயே பேரறிவாளன் விவேகமிக்கோன்’ எனக் கூறினார்கள். (திருக்குர்ஆன் 2:32)

قَالَ يَا آدَمُ أَنبِئْهُم بِأَسْمَائِهِمْ ۖ فَلَمَّا أَنبَأَهُم بِأَسْمَائِهِمْ قَالَ أَلَمْ أَقُل لَّكُمْ إِنِّي أَعْلَمُ غَيْبَ السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَأَعْلَمُ مَا تُبْدُونَ وَمَا كُنتُمْ تَكْتُمُونَ

‘ஆதமே! அப்பொருட்களின் பெயர்களை அவர்களுக்கு விவரிப்பீராக’ என்று (இறைவன்) சொன்னான் அவர் அப்பெயர்களை அவர்களுக்கு விவரித்தபோது ‘நிச்சயமாக நான் வானங்களிலும், பூமியிலும் மறைந்திருப்பவற்றை அறிவேன் என்றும், நீங்கள் மறைத்துக் கொண்டிருப்பதையும் நான் அறிவேன் என்றும் உங்களிடம் நான் சொல்லவில்லையா! என்று (இறைவன்) கூறினான். (திருக்குர்ஆன் 2:33)

இன்னும், (இறைவன்) எல்லாப் பொருட்களின் பெயர்களையும் ஆதமுக்கு கற்றுக் கொடுத்தான் பின் அவற்றை வானவர்கள் முன் எடுத்துக்காட்டி, கற்றுக்கொடுத்தவற்றை விவரிக்க சொன்னான்.

நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹுதஆலா, ஆதம் (அலைஹிஸ்ஸலாம்)அவர்களைப் படைத்த பொழுது அவர்களுக்குக் கூறினான்: (ஆதமே!) நீர் சென்று, அங்கு அமர்ந்திருக்கும் மலக்குகளின் கூட்டத்தினருக்கு ஸலாம் கூறுவிராக! (அதற்குப் பதிலாக) அவர்கள் உமக்கு வழங்கும் காணிக்கையை செவிமடுப்பீராக! நிச்சயமாக அது உமக்கும், உம் சந்ததியினருக்கும் உரிய காணிக்கையாகும். அதன்படி ஆதம் (அலைஹிஸ்ஸலாம்) (அம்மலக்குகளின் கூட்டத்தினரிடம் சென்று) ‘அஸ்ஸலாமு அலைக்கும்’, உங்களின் மீது அல்லாஹ்வின் சாந்தி உண்டவதாக என்று கூறினார்கள். அதற்கு அம்மலக்குகள், ‘அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி’ உங்களின் மீதும் அல்லாஹ்வின் சாந்தியும் அவனின் கருணையும் உண்டாவதாக என்று கூறினார்கள், ‘வரஹ்மத்துல்லாஹி’ என்ற சொல்லை ஸலாமின் மறுமொழியில் அவர்கள் அதிகப்படுத்தினார்கள். (நூல் – புகாரி, முஸ்லீம் : அபூஹுரைரா (ரலியல்லாஹு அன்ஹு)

இறைவன் மனிதனைப் படைக்க விரும்பி  பூமியிலிருந்து மண் எடுத்து வருமாறு வானவர்களை அனுப்பினான். ஜிப்ரயீல் அலைஹிஸ்ஸலாம் அவர்களும், மீகாயீல் அலைஹிஸ்ஸலாம் அவர்களும் பூமி மண் தர மறுத்துவிட்டது என்று கூறித் திரும்பினர். இஸ்ராயீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் மட்டும் பூமி மண் தர மறுத்த போதும் அதைக் கேளாது மண் எடுத்து வந்தனர். அம்மண் களிமண்ணாக இருந்தது.

وَلَقَدْ خَلَقْنَا الْإِنسَانَ مِن صَلْصَالٍ مِّنْ حَمَإٍ مَّسْنُونٍ

ஓசை தரக்கூடிய கருப்பான களி மண்ணால் மனிதனை நிச்சயமாக நாமே படைத்தோம். (திருக்குர்ஆன் 15:26)

மலக்குகள் நூர் எனும் ஒளியால் படைக்கப்பட்டார்கள். ஜின்கள் நெருப்பின் ஜுவாலையால் படைக்கப்பட்டார்கள். ஆதம் (அலைஹிஸ்ஸலாம்) உங்களுக்கு விளக்கமளிக்கப்பட்டுள்ள பொருளால் (மண்ணால்) படைக்கப்பட்டார்கள். (நூல்: முஸ்லீம் – அறிவிப்பாளர்: ஆயிஷா (ரலியல்லாஹு அன்ஹா))

அல்லாஹ் ஆதமை பூமி முழுவதும் திரட்டப்பட்ட மண்ணின் ஒரு கை அளவிலிருந்து படைத்தான். எனவே ஆதமின் மக்கள் பூமியின் நிறம் மற்றும் தன்மைக்கு ஏற்றவாறு அமைகின்றனர். அவர்களில் சிலர் வெள்ளையாகவும், சிலர் சிவப்பாகவும், சிலர் கறுப்பாகவும், சிலர் இரண்டும் கலந்துமுள்ளனர். அவர்களில் சிலர் கெட்ட குணமுடையோராகவும், சிலர் மென்மையான குணமுடையோராகவும்,  சிலர் கடின சித்தமுடையோராகவும்,  சிலர் நடுநிலையிலும் உள்ளனர். (நூல்: அஹ்மத் – அறிவிப்பாளர்: ஆபூமூஸா (ரலியல்லாஹு அன்ஹு)

சூரியன் உதயமாகும் நாட்களில் மிகச் சிறந்தது, ஜும்ஆ நாளாகும். அன்று தான் ஆதம் (அலைஹிஸ்ஸலாம்)படைக்கப்பட்டார்கள். அன்று தான் அவர்கள் சுவர்க்கத்தில் நுழைந்தார்கள், அன்றுதான் அவர்கள் செர்க்கத்திலிருந்து வெளியேற்றப்பட்டார்கள்.

(நூல்: முஸ்லிம் – அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலியல்லாஹு அன்ஹு)

முஹர்ரம் 10ஆம் நாள் வெள்ளிக் கிழமை அந்த உருவத்திற்குள் தன் ஆன்மாவை ஊதினான் இறைவன். ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் உயிர் பெற்று எழுந்தனர்.

எபிரேய மொழியில், ஆதாமா என்றால் மண் என்றும், ஆதாம் என்றால் மண்ணால் ஆனவன் என்றும் பொருள். எனவே, ஆதாம் என்பது ஒரு காரணப்பெயர் என்பர் சிலர்.

அந்த களிமண்ணை இறைவன் தன் கைகளால் குழைத்து 60 அடியில் ஓர் உருவம் அமைத்து அதனை மக்காவுக்கும், தாயிபிற்கும் இடையே கிடத்தாட்டினான். அவ்வழியே சென்ற வானவர்கள் அதைக் கண்டு வியந்தனர்.

ஒருநாள் இறைவன் அமரர்களை அழைத்து ஆதம் நபிக்கு (ஆதம் நபியின் நெற்றியில் இலங்கிக் கொண்டிருந்த நூரே முஹம்மதிய்யாவிற்கு) சிரம் பணியுமாறு சொன்னான். நூரே முஹம்மதிய்யாவை கண்டு ஆனந்தப்பரவசம் அடைந்த மலக்குமார்கள் அதற்கு சிரம் பணிந்தார்கள்.

وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أَبَىٰ وَاسْتَكْبَرَ وَكَانَ مِنَ الْكَافِرِينَ

பின்னர் நாம் மலக்குகளை (நோக்கி) ‘ஆதமுக்கு நீங்கள் பணி(ந்து ஸுஜூது செய்)யுங்கள்’ எனக் கூறிய போது இப்லீஸைத் தவிர (அனைவரும்) ஸுஜூது செய்தார்கள். அவனோ பெருமை கொண்டு விலகி (நம்முடைய கட்டளையை) நிராகரிப்பவனாகி விட்டான். (அல்குர்ஆன் – 2: 34)

தன்னுடைய வணக்கவழிபாடுகளால் மலக்குகளின் தரஜாவிற்கு உயர்ந்துவிட்ட நெருப்பால் படைக்கப்பட்ட இப்லீஸ் என்ற ஷைத்தான், ‘தான் நெருப்பால் படைக்கப்பட்டவன். மண்ணால் படைக்கப்பட்ட உருவத்திற்கு நான் சிரம் பணிய முடியாது என்று ஆணவத்தோடு மறுத்ததுடன் கியாமத் நாள் வரை அல்லாஹ்விடத்தில் அவகாசமும் வாங்கி வந்தான். இனி என் வேலை ஆதமுடைய மக்களை நேரான வழியில் செல்வதைத் தடுத்து அவர்களுக்கு முன்னும், பின்னும், இடமும், வலமும் சென்று அவர்களை நரகத்தின் பக்கம் இழுத்து வருவேன் எனக் கூறினான்.

அதாவது அவன் நூரே முஹம்மதிய்யாவை மதிக்கவில்லை. அதனால் அவன் இறைவனால் சபிக்கப்பட்டவனாக மாறி காபிராகிப் போனான். அவன் அமல்கள் எல்லாம் வீணாகிப் போயின.

இறைவன் ஆதம் நபியை தம் வலக்கையால் தடவ அவன் கையில் ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் வழித்தோன்றல்களில் வரும் நல்லவர்கள் முகங்கள் தெரிந்தன. இடதுபுறம் தடவ கெட்டவர்கள் முகங்கள் தெரிந்தன. இறைவன் அவர்களுக்கு எல்லாப் பொருட்களின் பெயரையும், எல்லா மொழிகளையும் கற்றுக் கொடுத்தான்.

சுவர்க்கத்தின் வாசலில் லாஇலாஹ இல்லல்லாஹு முஹம்மதுர் ரஸூலுல்லாஹ்’ என்று பெயர் எழுதியிருப்பதைக் கண்டு ஆதம் நபி அவர்கள் இறைவனிடம் கேட்டார்கள்: இறைவனே! உன்னுடைய திருநாமத்துடன் இணைந்திருக்கும் பெயர் உடையவர்கள் யார்? அவர்கள் மகத்துவமிக்கவர்களாக இருப்பதால்தான் உன் பெயருடன் அவர்கள் பெயரை இணைத்திருப்பாய். அதை நான் தெரிந்து கொள்ளலாமா? என்று.

இறைவன், ‘ஏ! ஆதமே! இவர் உம் சந்ததியில் வரக்கூடிய இறுதித்தூதர் ஆவார். அவரை நான் மிகவும் உவக்கிறேன். இவரை படைக்காவிட்டால் நான் உம்மையும், இவ்வுலகையும் படைத்திருக்க மாட்டேன்’ என்று பதில் சொன்னான்.

விண்ணகத்தில் தம்முடன் உறவாட தம்மைப்போன்று ஓருவரில்லையே என்று ஏங்கினார்கள். இதனையறிந்த இறைவன் இவர்கள் உறங்கும்போது இவர்களின் வலப்புறத்தின் விலா எலும்பிலிருந்து எலும்பு ஒன்றை எடுத்து ஹவ்வா அலைஹிஸ்ஸலாம் அவர்களைப் படைத்தான்.

وَقُلْنَا يَا آدَمُ اسْكُنْ أَنتَ وَزَوْجُكَ الْجَنَّةَ وَكُلَا مِنْهَا رَغَدًا حَيْثُ شِئْتُمَا وَلَا تَقْرَبَا هَٰذِهِ الشَّجَرَةَ فَتَكُونَا مِنَ الظَّالِمِينَ

பின்னர் நாம் (ஆதமுக்குத் துணையாக அவர் மனைவியைப் படைத்து ஆதமை நோக்கி)’ஆதமே! நீங்கள் உங்களுடைய மனைவியுடன் இச்சோலையில் வசித்திருங்கள். நீங்கள் இருவரும் இதில் விரும்பும் இடத்தில் (விரும்பியவற்றைத்) தாராளமாகப் புசியுங்கள். ஆனால் இந்த மரத்தை அணுகாதீர்கள். அணுகினால் நீங்கள் இருவரும் (உங்களுக்குத்) தீங்கிழைத்துக் கொண்டவர்களாவீர்கள்’ என்று கூறினோம். (அல்குர்ஆன் 2:35)

ஹவ்வா அவன் மனைவி; ஹவ்வா என்பதற்கு மக்கள் அனைவரின் தாய் என்பது பொருள்.

இருவருக்கும் மணம் செய்து வைத்து சுவர்க்கத்தில் உள்ள ஒரு மரத்தின் கனியை மட்டும் உண்ண வேண்டாம் என்று கட்டளையிட்டான். வேண்டாம் என்று தடுத்ததன் மூலம்  அக்கனியை உண்ணும் ஆசையை இவர்களுக்கு உண்டுபண்ணி மனித உற்பத்திக்கு மறைமுகமாக வழிகோலினான் இறைவன். இதனை உணராத ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களும், ஹவ்வா அலைஹிஸ்ஸலாம் அவர்களும் அவ்விதமே செய்வதாக உறுதி கூறினர்.

ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களை வழிகெடுக்க இப்லீஸ் மயில் ஒன்றின் மூலம் சுவனத்துப் பாம்பின் தயவைப் பெற்று உள்ளே நுழைந்த அவன் ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களையும், ஹவ்வா அலைஹிஸ்ஸலாம் அவர்களையும் கண்டு குறிப்பிட்ட அந்த கனியை உண்டால்தான் அழியாதிருக்க இயலும் என்றும், இல்லையேல் அழிந்து விடுவார்கள் என்றும் கூறினான். ஹவ்வா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் இப்லீஸின் பேச்சை நம்பி ஆதம் நபியை அம்மரத்தின் கனியை உண்ணுமாறு தூண்டினார்கள். அதன்படி இருவரும் அதனைப் பறித்து உண்டனர். அது கோதுமைச் செடி என்று பெரும்பான்மையினரின் கருத்தாக இருக்கிறது.

அதனை உண்ட அடுத்தகணம் இருவரும் நாண உணர்வு பெற்றனர். தங்கள் நிலையை எண்ணி மிகவும் வருத்தமுற்றனர். இறைவனிடம்,

قَالَا رَبَّنَا ظَلَمْنَا أَنفُسَنَا وَإِن لَّمْ تَغْفِرْ لَنَا وَتَرْحَمْنَا لَنَكُونَنَّ مِنَ الْخَاسِرِينَ

அதற்கு அவர்கள் ‘எங்கள் இறைவனே! எங்களுக்கு நாங்களே தீங்கிழைத்துக் கொண்டோம் – நீ எங்களை மன்னித்துக் கிருபை செய்யாவிட்டால், நிச்சயமாக நங்கள் நஷ்டமடைந்தவர்களாகி விடுவோம்’. என்று கூறினார்கள். (திருக்குர்ஆன் 7:23)

قَالَ اهْبِطُوا بَعْضُكُمْ لِبَعْضٍ عَدُوٌّ ۖ وَلَكُمْ فِي الْأَرْضِ مُسْتَقَرٌّ وَمَتَاعٌ إِلَىٰ حِينٍ

 (அதற்கு) இறைவன், ‘இதிலிருந்து நீங்கள் இறங்குங்கள் – உங்களில் ஒருவர் மற்றவருக்குப் பகைவராயிருப்பீர்கள். உங்களுக்கு பூமியில் தங்குமிடம் இருக்கிறது அதில் ஒரு (குறிப்பிட்ட) காலம் வரை நீங்கள் சுகம் அனுபவித்தலும் உண்டு’ (திருக்குர்ஆன் 7:24)

قَالَ فِيهَا تَحْيَوْنَ وَفِيهَا تَمُوتُونَ وَمِنْهَا تُخْرَجُونَ

‘அங்கேயே நீங்கள் வாழ்ந்திருப்பீர்கள் அங்கேயே நீங்கள் மரணமடைவீர்கள் (இறுதியாக) நீங்கள் அங்கிருந்தே எழுப்பப்படுவீர்கள்’. (திருக்குர்ஆன் 7:25)

தங்களின் மானத்தை மறைக்க அங்குமிங்கும் ஓடினர். மரங்களிடம் இலை கேட்டனர். அத்திமரம் மட்டும் இலை கொடுத்தது. அதனைக் கொண்டு அவர்கள் தங்கள் மானத்தை மறைத்துக் கொண்டனர்.

இறைவன் இதற்கு காரணமான இப்லீஸ், பாம்பு, மயிலையும்; பூமியில் தூக்கி எறிந்தான். ஆதம் அலைஹிஸ்ஸலாம் ஆதம் அலைஹிமிஸ்ஸலாம் அவர்களை இந்தியாவில்(இலங்கை-சரந்தீபில்) இறக்கினான். அப்போது அவர்கள் தம்முடன் ஹஜ்ருல் அஸ்வத் கல், அஸா(இதுவே பின்னர் மூஸா நபி அவர்களிடம் வந்தது), இரும்பு  ஆகியவற்றைக் கொண்டு வந்தார்கள்.

ஹழ்ரத் ஹவ்வா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் ஜித்தாவில் இறக்கினான். சரந்தீவின் மலை உச்சியில் 200 ஆண்டுகாலம் தம் பாவம்  நினைத்து அழுதார்கள் ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள். அல்லாஹ்விடம், ஆதம் நபி அவர்கள் இறுதியில் ‘யா அல்லாஹ்! நீ சுவர்க்கத்தின் வாசலில் உன்னுடைய பெயருடன் எழுதி வைத்திருந்தாயே! அந்த நேசர் இறுதியாக வரப்போகின்ற தூதர் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பொருட்டால் என் பாவங்களை மன்னிப்பாயாக! என்று கேட்டார்கள். அல்லாஹ் ஆதம் நபியின் பாவம்பொறுத்;தான். மேலும் மண்ணுலகில் தமக்கு ஒரு ஆலயம் எழுப்பி அதை சுற்றி வந்து இறைஞ்சுமாறு கூறினான். ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் ஜிப்ரயீல் அலைஹிஸ்ஸலாம் அவர்களுடன் மக்கா வந்து கஃபாவை எழுப்பினார்கள். அதன் ஒரு மூலையில் ஹஜ்ருல் அஸ்வத் கல்லையும் பதித்தனர்.

ஹழ்ரத் ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் நாற்பது தடவை பைத்துல் மஃமூர்க்கு கால்நடையாக சென்று ஹஜ்ஜு செய்து வந்தார்கள். ஹழ்ரத் ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களை அல்லாஹ் படைப்பதற்கு இரண்டாயிரம் வருடங்களுக்கு முன், வானவர்கள் பைத்துல் மஃமூரை கட்டி முடித்தனர். 2000 வருடங்கள் வரை, வானவர்களே வலம் வந்து கொண்டிருந்தனர். நூஹ் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் காலத்தில் ஏற்பட்ட பிரளயத்தின் போது இது மூன்றாவது வானத்திற்கு உயர்த்தப்பட்டு விட்டது.  இந்த பைத்துல் மஃமூரை வானவர்கள் ஒரு வினாடி கூட ஓய்வில்லாது வலம் வந்து கொண்டிருப்பதாகவும், இதற்கு நேர் மேலே அல்லாஹ்வுடைய அர்ஷ் இருப்பதாகவும், இதற்கு நேர் கீழே கஃபத்துல்லாஹ் இருப்பதாகவும் ‘தப்ஸீரல் மதாரிக்’கில் குறிப்பிடப்பட்டுள்ளது. உலகில் யாரொருவர் கஃபத்துல்லாஹ்வை வலம் வருகிறாரோ அதே சமயம அவர் அல்லாஹ்வுடைய அர்ஷையும், பைத்துல் மஃமூரையும் வலம் வந்த நன்மையை அடைந்து விடுவதாக கூறப்படுகிறது.

பல்லாண்டுகள் உருண்டோடிய பின்னர் ஆதம் நபியும், ஹவ்வா அலைஹிஸ்ஸலாம் அவர்களும் அரபாவில் ஒன்றாக சந்தித்தனர். இதன்பின்னர் ஒன்று சேர்ந்து வாழ்ந்து ஒரு ஆணும், ஒரு பெண்ணுமாக பல குழந்தைகளைப் பெற்றனர். முதல் சூழில் பிறந்த குழந்தைக்கு காபீல் என்றும், பெண்ணுக்கு இக்லீமா என்றும், இரண்டாம் சூழில் பிறந்த ஆணுக்கு ஹாபீல் என்றும், பெண்ணுக்கு யஹூதா என்றும் பெயரிட்டனர்.

சரந்தீபில் இருந்த ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு கால்நடைகளை மேய்க்கவும், உழவு செய்து தானியங்களை உற்பத்தி செய்யவும் ஹழ்ரத் ஜிப்ரயீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் மூலம் அல்லாஹ் கற்றுக் கொடுத்தான். அதேபோல் ரொட்டி சுடுவதையும் கற்றுக் கொண்டார்கள். நோன்பையும் நோற்றார்கள். பூமியைத் தோண்டி தாகத்திற்கு தண்ணீரும் பெற்றுக் கொண்டார்கள்.

ஹழ்ரத் ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களும்> ஹழ்ரத் ஹவ்வா அலைஹிஸ்ஸலாம் அவர்களும் வெகு சந்தோஷமாக காலம் கழித்து வந்தார்கள். ஹழ்ரத் ஹவ்வா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் 40 முறை கர்ப்பமுற்றார்கள். ஒவ்வொரு தடவையிலும் ஓர் ஆண் குழந்தையும், ஒரு பெண் குழந்தையும் பிறந்து கொண்டிருந்தன. முதன் முதலாக பிறந்த ஆண் குழந்தைக்கு காபீல் என்றும்,பெண் குழந்தைக்கு இக்லீமா என்றும் பெயரிடப்பட்டது. நாற்பதாக பிறந்த ஆண் குழந்தைக்கு அப்துல் முகீத் என்றும்> பெண் குழந்தைக்கு உம்மத்துல் கீத் என்றும் பெயரிடப்பட்டது. சில தப்ஸீர்களில் ஹழ்ரத் ஹவ்வா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் 500 முறை கர்ப்பமுற்றதாகவும் இரண்டாவதாகப் பிறந்த ஆண் குழந்தைக்கு ஹாபீல் என்றும், பெண் குழந்தைக்கு லியூஜா என்றும் பெயரிடப்பட்டது. ஹழ்ரத் ஷீத் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் மட்டும் தனித்துப் பிறந்தார்களென்றும் மற்ற பிரசவங்களிலெல்லாம் ஆண்-பெண் என்று இரட்டை இரட்டையாகவே குழந்தைகள் பிறந்தனனென்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஹழ்ரத் ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களது ஷரீஅத்தில் சகோதர-சகோதரி திருமணங்கள் அனுமதிக்கப்பட்டிருந்தன. அதாவது ஒரு பிரசவத்தில் பிறக்கும் ஆணுக்கு, இன்னொரு பிரசவத்தில் பிறக்கும் பெண்ணுடன் திருமணம் நடந்து கொண்டிருந்தது. இந்த முறைப்படி ஹழ்ரத் ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் காபீலுடைய சகோதரியை ஹாபீலுடனும், ஹாபீலுடைய சகோதரியை காபீலுடனும் திருமணம் செய்து விட முடிவு செய்தார்கள். காபீலுடைய சகோதரி மிகவும் அழகுடையவளாக இருந்தாள். எனவே காபீலுக்கு தனது சகோதரியையே மணம் முடிக்க விருப்பம் இருந்தது. அதுவுமின்றி காபீலும், அவனது சகோதரியும் ஹழ்ரத் ஹவ்வா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் சுவர்க்கத்தில் இருக்கும்போதே கர்ப்பத்தில் தங்கிவிட்டவர்கள். எனவே சுவர்க்கத்திலேயே கர்ப்பத்தில் வந்து விட்ட தங்கள் இருவரையுமே திருமணம் செய்து விடுவதே நல்லது’ என்று காபீல் வாதாடினான்.

காபீலுடைய இந்த வாதத்தை ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. அல்லாஹ்வின் உத்திரவிற்கு மாறு செய்ய இயலாது என்று கண்டிப்புடன் கூறிவிட்டார்கள். ஆனால் காபீல் பிடிவாதம் பிடித்தான். எனவே> காபீலும்> ஹாபீலும் அல்லாஹ்வின் பெயரால் குர்பானி சமர்ப்பிக்க வேண்டுமென்றும்> யாருடைய குர்பானியை அல்லாஹ் ஏற்றுக் கொள்கிறானோ அவன் இக்லீமியாவைத் திருமணம் செய்து கொள்ளலாம் என்று ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் யோசனை சொன்னார்கள்.

அறுக்கப்பட்ட இறைச்சியை ஒரு பாறையின் மீது இருவரும் வைத்தார்கள். வானத்திலிருந்து ஒரு தீச்சுவாலை வந்து ஹாபீலுடைய இறைச்சியை பஸ்பம் செய்து விட்டது. இது ஹாபீலுடைய குர்பானியை அல்லாஹ் ஏற்றுக் கொண்டதற்கு அடையாளம். எனவே ஹாபீலுக்கே இக்லீமாவை திருமணம் முடித்து வைத்தார்கள். தான் நினைத்தது கிடைக்கவில்லை என்ற பொறாமைத் தீ காபீலை வாட்டி வதைத்தது. ஹாபீலை பழிவாங்கிட துடிதுடித்தான்.  சரியான சந்தர்ப்பம் கிடைத்ததும் காபீல் ஹாபீலை கொன்று விட்டான். உலகில் நடந்த முதல் கொலை இது.

ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் இவ்வுலகில் 1000 ஆண்டுகள் வாழந்தனர். இவர்கள் இறக்கும் தஷரவாயில் இவர்களின் வழித்தோன்றல்கள் 40000 பேர் வாழ்ந்து வந்தார்கள். இறக்கும் தருவாயில் தம் விரலில் இருந்த மோதிரத்தை ஷீத் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் விரலில் அணிவித்தார்கள்.இச்சமயத் இவர்களின் உயிரை வாங்க இஸ்ராயீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் வருகை தந்தார்கள். அவர்களிடம் ஜிப்ரயீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் இவர்கள் அல்லாஹ்வின் ஆன்மா ஊதப்பெற்றவர்கள் இவர்கள். எனவே மென்மையாக இவர்களின் உயிரை வாங்குங்கள் என்று கூறினார்கள். அவ்வாறே உயிர் வாங்கப்பட்டது. இது நிஸான் மாதம் 6ஆம் தேதி வெள்ளிக் கிழமை நடைபெற்றது.

இவர்களின் உடல் அபுல் குபைஸ் மலையின் அடிவாரத்தில் உள்ள மகாரத்துல் குன்ஸ் என்ற குகையில் நல்லடக்கம் செய்யப்பட்டது. ஆனால் மற்றொரு வரலாறு இவர்களின் உடல் கஃபாவிற்குள்ளும், கால் கஃபாவிற்கு வெளியிலும் அடக்கப்பட்டதாக கூறுகிறது.

ஹழ்ரத் ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் மறைந்ததும் ஹழ்ரத் ஜிப்ரயீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் காட்டியவாறு அவர்களை குளிப்பாட்டி கபனிட்டு, நான்கு தக்பீர்களுடன் ஜனாஸா தொழுகை நடத்தினார்கள். ஹழ்ரத் நூஹ் அலைஹிஸ்ஸலாம் அவர்களது சடலம் வைத்திருந்த பெட்டி தண்ணீரில் மிதக்க ஆரம்பித்ததென்றும் ஹழ்ரத் நுல}ஹ் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அதனைப் பத்திரமாக எடுத்து இலங்கையிலுள்ள ஸரந்தீப் மலையின் ஒரு பகுதியில் புதைத்தார்கள் என்றும் ஹழ்ரத் கஅப் அஹ்பார் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் தெரிவிக்கிறார்கள்.

ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் மறைந்து ஓராண்டோ அல்லது ஏழாண்டோ கழித்து ஹவ்வா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் மறைந்தார்கள்.

ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் காலம் இன்றைக்கு 8000 ஆண்டுகளுக்கு முன்தான் என்று கணிக்கப்படுகிறது. ஆனால் இவர்களுக்குமுன் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆதம்கள் தோன்றியுள்ளார்கள் என்று இப்னு பாக்கிர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறியுள்ளார்கள்.

இப்னு அரபி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் தம்முடைய புத்துஹாத்துல் மக்கியா என்னும் நூலில் ஆதத்திற்கு முன் ஓரிலட்சம் ஆதம்களும் அவர்களுடைய கூட்டத்தினர்களும் தோன்றி மறைந்துள்ளனர் என்று கூறுகின்றனர்.

Add Comment

Your email address will not be published.