அஸ்மா பின்த் அபூபக்கர் ரழியல்லாஹு அன்ஹா

அஸ்மா பின்த் அபூபக்கர் ரழியல்லாஹு அன்ஹா

By Sufi Manzil 0 Comment December 21, 2014

Print Friendly, PDF & Email

அண்ணல் நபியின் ஆருயிர்த் தோழர் அபூபக்கர் ரழியல்லாஹு அன்ஹுஅவர்களின் மூத்த புதல்வியும் சுவனத்தைக் கொண்டு நற்செய்தி சொல்லப்பட்டவர்களில் ஒருவரான ஜூபைர் இப்னு அவ்வாம் ரழியல்லாஹு அன்ஹுஅவர்களின் மனைவியும்,மாபெரும் வீரத் தியாகியாய்த் திகழ்ந்த அப்துல்லாஹ் இப்னு ஜூபைர் (ரழியல்லாஹு அன்ஹு)யின் அன்பு அன்னையுமான மரியாதைக்குரிய அஸ்மா ரழியல்லாஹு அன்ஹாஅவர்கள்.

இவர்கள் உயரமாகவும்> பருமனாகவும் இருப்பார்கள். இறுதிவரை பற்கள் விழவில்லை. கண்பார்வை மட்டும் சற்று மங்கிப் போயிருந்தது. இவர்கள் நான்கு ஆண்மக்களையும், மூன்று பெண்மக்களையும் ஈன்றெடுத்தனர்.

இவர்களும்> அப்துல்லாஹ் ரலியல்லாஹு அன்ஹு அவர்களும் குதைலா பின்த் அப்துல் உஸ்ஸா என்னும் பெண்ணின் வயிற்றிலிருந்து பிறந்தவர்கள். குதைலா இஸ்லாத்தை தழுவ மறுத்ததால் மற்றொரு அறிவிப்பின்படி அபூபக்கர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் இஸ்லாத்தை தழுவும் முன் அவர்களை விவாக விலக்கு செய்து விட்டார்கள்.இறைவனின் மீது உண்மையான உறுதியான நம்பிக்கை கொண்ட அஸ்மா ரழியல்லாஹு அன்ஹாஅவர்கள் சிறுவயது முதலே இஸ்லாத்தின் வெற்றிக்காக அரும்பெரும் பணிகளை ஆற்றும் நல்வாய்ப்பைப் பெற்றார்கள்!

அண்ணல் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் அழைப்பை 18வது நபராக அஸ்மா ரழியல்லாஹு அன்ஹா அவர்கள் இஸ்லாத்தில் தம்மை இணைத்துக் கொண்டார்கள்.

மக்காவிலிருந்து மதீனாவிற்கு நபிகளார் ஹிஜ்ரத் புறப்படும் போது நபியவர்கள் அந்தப் பயணத்தை மிகமிக இரகசியமாக மேற்கொண்டார்கள்.அலீ ரழியல்லாஹு அன்ஹு,சித்தீகுல் அக்பரின் மூத்த புதல்வி அஸ்மா ரழியல்லாஹு அன்ஹாஅவர்களுக்கும் மட்டுமே அந்தப் பயணத்தின் அனைத்து விபரங்களும் தெரியும். அவர்கள்தான் அதில் நபியவர்களுக்கும் தம் தந்தை அபூபக்கர் ரழியல்லாஹு அன்ஹுஅவர்களுக்கும் மற்றவர்களைக் காட்டிலும் அதிகமாக பொறுப்புமிக்க உதவிகளை அளித்தார்கள்.

அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்கள், தம் தோழர் அபூபக்கர் ரழியல்லாஹு அன்ஹுஅவர்களுடன் மக்காவின் அருகிலிருந்த தௌர் குகையில் இருக்கும்போது எதிரிகளின் நிலைமைகளை அனுசரித்து சில நாட்களாக அங்கே தங்கியிருக்க வேண்டும் என்பதும் அந்நாட்களில் அஸ்மா ரழியல்லாஹு அன்ஹா அவர்கள்தான் அவ்விருவருக்கும் உணவு தயாரித்து மிகமிக இரகசியமாகக் குகைக்குச் சென்று கொடுத்து வரவேண்டும் என்பதும் திட்டம்.

அபூஜஹ்லும் அவனுடைய தோழர்களும் அபூபக்கர் ரழியல்லாஹு அன்ஹுஅவர்களின் இல்லத்திற்கு வந்தார்கள். அபூஜஹ்ல் வேகமாகக் கதவைத்தட்டினான்.உள்ளேயிருந்து வெளியே வந்து கதவைத் திறந்தார்கள் அஸ்மா நாயகி.

உன் தந்தை எங்கே? இது அபூஜஹ்லின் அகங்காரக் கேள்வி.அவர்களைப் பற்றி எனக்கு எதுவும் தெரியாது:

உரிய பதில் வராததைக் கண்டதும் அபூஜஹ்ல் மிரட்டினான் ஆனால் அஸ்மா ரழியல்லாஹு அன்ஹா அவர்கள் எதற்கும் அஞ்சவில்லை: அசைந்து கொடுக்கவில்லை. அப்போது கொடியோன் அபூஜஹ்ல் அஸ்மா ரழியல்லாஹு அன்ஹா அவர்களின் கன்னத்தில் கையை ஓங்கி பளீரென அறைந்தான்!

பொறுமைக் கடலான அஸ்மா ரழியல்லாஹு அன்ஹா அவர்கள் அந்த அடியைத் தாங்கிக்கொண்டு ஆற்ற வேண்டிய பணிகளை முறையோடு கவனித்திடலானார்கள்.

குகையில் மூன்று நாட்கள் தங்கியிருந்த பிறகு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்கள் அஸ்மா ரழியல்லாஹு அன்ஹா அவர்களிடம் சொல்லியனுப்பியப்படி அலீ ரழியல்லாஹு அன்ஹுஅவர்கள் இரு ஒட்டகங்களையும் வழிகாட்டியையும் அழைத்துக் கொண்டு உரிய நேரத்தில் வந்து சேர்ந்தார்கள்.

மறுபுறத்தில் அஸ்மா ரழியல்லாஹு அன்ஹா அவர்கள் பல நாட்களுக்குப் போதுமான உணவையும் தண்ணீரையும் தயார் செய்து கொண்டு வந்தார்கள்.அங்கே உணவு மற்றும் தண்ணீர் நிரம்பிய தோல் பைகளை முறையாகக் கட்டுவதற்கு கயிறு எதுவும் கிடைக்கவில்லை! என்ன செய்வது? சித்தீகின் மகளுக்கு பளிச்சென்று ஒரு யோசனை பட்டது.

உடனே தனது இடுப்பில் கட்டியிருந்த வார்த் துணியை அவிழ்த்து இரண்டாகக் கிழித்து இரு பைகளையும் கட்டினார்கள்.

இந்த புத்திசாலித்தனத்தைக் கண்ட நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்கள் ஷதாதுந் நிதாகைன்– (இரு வாருடையவரே!) என்று அழைத்தார்கள்! அன்றிலிருந்து இன்று வரை அஸ்மா ரழியல்லாஹு அன்ஹா அவர்கள் இதே பெயரில் புகழடைந்துள்ளார்கள்!

ஹிஜ்ரத்தின்போது அபூபக்கர் ரழியல்லாஹு அன்ஹுஅவர்களின் தந்தைஅபூகுஹாஃபா முதியவராகவும் கண்பார்வை இழந்தவராகவும் இருந்தார்.அவர் அதுவரை அவர் இஸ்லாமிய நெறியை ஏற்றிருக்கவில்லை! ஹிஜ்ரத் சென்ற ஹழ்ரத் அபூபக்கர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் தமக்கு செலவிற்கு பணம் வைத்துவிட்டு செல்லாமல் அனைத்தையும் எடுத்துவிட்டு சென்றுவிட்டதாக தம் பேத்தியிடம் முறையிட்டபோது,

முதியவராகவும் கண்பார்வை இழந்தும் உள்ள தம் பாட்டனாரை இந்நேரத்தில் மனம் நோகவைப்பது நல்லதல்ல எனக் கருதி, சிறுசிறு கற்களைக் கொஞ்சம் பொறுக்கி எடுத்துக் பணப்பையில் அவற்றைப் போட்டு அதனைப் பணப் பெட்டியில் வைத்துஅதை குலுக்கி காட்டினார்கள்.அப்போது அபூகுஹாஃபா ரழியல்லாஹு அன்ஹுஅவர்கள் மனம் நிம்மதி அடைந்தார்கள்.

அஸ்மா ரழியல்லாஹு அன்ஹா அவர்கள் இதுவரை ஹிஜ்ரத் செய்து மதீனாவுக்கு வரவில்லை. அவர்களின் மாமி மகன் ஜுபைர் இப்னு அவ்வாம் ரழியல்லாஹு அன்ஹுஅவர்களுடன் மக்காவிலேயே அவர்களுக்குத் திருமணம் நடைபெற்றிருந்தது!

நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் ஏற்பாட்டின்படி, அப்துல்லாஹ் தம் தாயாரையும் சகோதரிகள் அஸ்மா, ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹுஇருவரையும் அழைத்துக் கொண்டு மதீனா நோக்கிப் புறப்பட்டார்!

அஸ்மா ரழியல்லாஹு அன்ஹா அவர்கள் மதீனாவுக்கு வந்ததும் கொஞ்ச நாட்களில் அவர்களுக்கு ஓர் ஆண்குழந்தை பிறந்தது! ஹிஜ்ரத்திற்குப் பிறகு முஹாஜிர்களில் முதன் முதலில் பிறந்த குழந்தை இதுவே! இதனை அறிந்த முஸ்லிம்கள் அளவிலா மகிழ்ச்சி அடைந்தார்கள்.

அஸ்மா ரழியல்லாஹு அன்ஹா அவர்கள் தம் குழந்தைக்கு அப்துல்லாஹ் எனப் பெயர் சூட்டி, அதனைத் தூக்கிக் கொண்டு அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்களின் திருச்சமூகம் வந்தார்கள். மாநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்கள் மகிழ்வோடு குழந்தையை வாங்கி, மடியில் வைத்துக் கொண்டு ஒரு பேரீச்சம் பழத்தைத் தம் திருவாயில் இட்டு மென்று அதனைக் குழந்தைக்கு ஊட்டினார்கள்.

இஸ்லாத்தை ஏற்றதற்காக தம்முடைய சொத்து சுகங்களை இழந்தும், குறைஷிகளின் கொடுமைக்கு ஆளாகிக் கொண்டும் இருந்தார் ஜூபைர் ரழியல்லாஹு அன்ஹுஅவர்கள் . இறுதியில் அபிசீனியா நோக்கி ஹிஜ்ரத் மேற்கொள்ள வேண்டியதாயிற்று!

செல்வம் கொழித்த குடும்பத்தின் இந்த ஏழை மணாளருக்குத்தான் அஸ்மா ரழியல்லாஹு அன்ஹா அவர்கள் மணம் முடிக்கப்பட்டார்கள்.

கொஞ்ச நாட்களுக்குப் பிறகு இருவரும் ஒருவர் பின் ஒருவராக ஹிஜ்ரத் மேற்கொண்டு மதீனாவுக்கு வந்தபோது கொஞ்சநஞ்சம் இருந்த பொருள்களும் மக்காவில் மாட்டிக் கொண்டன! இப்போது மதீனாவில் அவ்விருவருக்கும் அல்லாஹ்வின் பெயரைத் தவிர வேறு எந்தச் சொத்தும் இல்லை! ஒருசில நாட்களுக்குப் பிறகு அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்கள் ஒரு சிறிய பேரீச்சந் தோட்டத்தை வழங்கினார்கள்!

சில நாட்களுக்குப் பிறகு என் தந்தையார் அபூபக்கர் ரழியல்லாஹு அன்ஹுஅவர்கள் எனக்கு ஒரு பணியாளைக் கொடுத்து உதவினார்கள். அதனால் சிரமம் பெருமளவு குறைந்து விட்டது.

இத்தகைய ஏழ்மையின் காரணத்தால்தான் அஸ்மா ரழியல்லாஹு அன்ஹா அவர்கள் வீட்டின் தேவைகளுக்காக மிகவும் இறுக்கிப் பிடித்துச் சிக்கனமாகச் செலவு செய்து கொண்டிருந்தார்கள். மிதமிஞசிய கடும் சிக்கனப் போக்கினை ஒருநாள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்கள் கண்டித்தார்கள். ‘இவ்வாறு ஒவ்வொன்றையும் அளந்து நிறுத்திப் பார்த்து கஞ்சத்தனம் செய்து கொண்டு இருக்காதீர்கள். அப்படிச் செய்தால் அல்லாஹ்வும் அந்த அளவுக்கே வழங்குவான்’ என்று அறிவுரை பகர்ந்தார்கள்.

அஸ்மா ரழியல்லாஹு அன்ஹா அவர்களின் குடும்பம் நீதி நேர்மையையும் கடினமான உழைப்பையும் அஸ்திவாரமாகக் கொண்ட வாணிபத்தின் வாயிலாக செல்வம் ஈட்டினார்கள்.

அவர்களின் மகனார் அப்துல்லாஹ் இப்னு ஜூபைர் ரழியல்லாஹு அன்ஹுஅவர்கள் அறிவிக்கின்றார்கள். ‘என் தாயார் மற்றும் சிறிய தாயார் ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹுஅவர்கள் இருவரை விடவும் அதிகமாக கொடை வழங்குபவர் எவரையும் நான் கண்டதில்லை. கொடை வழங்கும் முறை அவ்விருவரிடமும் மாறுபட்டிருந்தது. ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹுஅவர்களின் முறை என்னவெனில், அவர்கள் தமது வருவாயைக் கொஞ்சம் கொஞ்சமாகச் சேர்த்து வைப்பார்கள். கடைசியில் கணிசமான அளவு சேர்ந்ததும் தேவைப்பட்டோருக்கு பங்கிட்டு அளித்து விடுவார்கள். ஆனால் அஸ்மா ரழியல்லாஹு அன்ஹா அவர்களின் முறை இதற்கு மாற்றமாக இருந்தது. அவர்கள் நாளொன்றுக்கு எதையும் சேமித்து வைப்பதில்லை. எது மிஞ்சினாலும் அதே நேரத்தில் பங்கிட்டு கொடுத்து விடுவார்கள்.’

பிற்காலத்தில் அவர்களின் சகோதரி ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹுஅவர்கள் மரணம் அடைந்தபோது ஒரு நிலத்தைத் தமது சொத்தாக விட்டுச் சென்றார்கள். அதற்கு அஸ்மா ரழியல்லாஹு அன்ஹா அவர்களைத் தவிர வேறு வாரிசுகள் யாரும் இல்லை. ஆகையால் அந்த பூமி அவர்களுக்கே கிடைத்தது! அதனை விற்றுக் கிடைத்த சுமார் ஒரு இலட்சம் திர்ஹம் முழுவதையும் தம்முடைய உறவினர்களில் தேவைப்பட்டோருக்குப் பங்கிட்டு கொடுத்து விட்டார்கள்!

ஒருமுறை அஸ்மா ரழியல்லாஹு அன்ஹா அவர்களின் தாயார் கதீலா பின்த் அப்துல் உஸ்ஸா என்பவர் தம் மகளைப் பார்ப்பதற்காக மதீனா வருகின்றார். அவர் இணைவைப்புக் கொள்கையிலேயே இருந்தார். இஸ்லாத்தை பிடிவாதமாய் ஏற்றுக் கொள்ள மறுத்தார்.

உடனே கட்டித் தழுவத் துடித்த அவர்களின் கரங்கள் சோர்ந்து விடுகின்றன. கண்கள் பார்வையை தாழ்த்தி விடுகின்றன. அன்புடன் வரவேற்பதற்காக எழுந்த நாவு.. வாருங்கள் என்று கூற மறுத்துவிட்டது!

என்னுடைய தாயார் நீண்ட நாட்களுக்கப் பிறகு என்னைக் காண வந்திருக்கின்றார். இறைவனை நிராகரித்துக் கொண்டுதான் இருக்கின்றார். அவரை நான் வரவேற்று உபசரிக்கலாமா? என்பதை இறைத்தூதரிடம் கேட்டுச்சொல்’ என்று தன் சகோதரி ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹுஅவர்களிடம் தூது அனுப்பினார்கள்.

ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அனுமதி கொடுத்தபிறகுதான், அவர்கள் தம்முடைய தாயாரை நல்ல முறையில் வரவேற்று அன்பளிப்புகளை ஏற்று உபசரித்தார்கள்!

மதீனாவில் ஸயீத் இப்னு ஆஸ் ரழியல்லாஹு அன்ஹுஅவர்கள் ஆளுநராக இருந்தபோது இரவு நேரங்களில் திருட்டும், கொள்ளையும் வழிப்பறியும் பரவலாக நடைபெற்று வந்தன. மக்களை பெரும் பீதியும் அச்சமும் ஆட்கொண்டிருந்தன. அப்போது அஸ்மா ரழியல்லாஹு அன்ஹா அவர்கள் தம்முடைய தலைக்கருகில் பட்டாக்கத்தியை வைத்துக் கொண்டுதான் இரவில் தூங்குவார்களாம்.

ஜூபைர் ரழியல்லாஹு அன்ஹுஅவர்களின் குடும்பம் துணிவிலும் வீரத்திலும் தன்னிகரற்றுச் சிறந்து விளங்கும் குடும்பமாகும். புகழுக்குரிய இந்த வீரதீரப் பண்பு அக்குடும்பத்தின் முன்னோர்கள் உறவினர்களிடமிருந்து பரம்பரை பரம்பரையாக தொடர்ந்து வரும் சிறப்பம்சமாகும்.

ஜூபைர் ரழியல்லாஹு அன்ஹுஅவர்களுடைய ஆண் மக்களில் மிகச் சிறந்த வீரராகவும் துணிவுமிக்கவராகவும் விளங்கியவர் அப்துல்லாஹ் ரழியல்லாஹு அன்ஹுஅவர்களாவர்.

அமீர் முஆவியா ரழியல்லாஹு அன்ஹுஅவர்களுக்குப் பிறகு அவருடைய மகன் யஜீத் ஆட்சிக்கு வந்தார். கிலாஃபத் எனும் இறையாட்சித் தத்துவத்திற்கு எதிராக அவர் கலீஃபாவாக நியமிக்ப்பட்டதை முஸ்லிம் சமுதாயத்தினரில் எந்தத் தலைவரும் ஏற்றுக் கொள்ளவில்லை. யஜீதுக்கு எதிராக எவ்வித நடவடிக்கைகளையும் அவர்களில் எவரும் மேற்கொள்ளத் துணிந்தார்களில்லை.

ஆனால் இரு தலைவர்கள் மட்டுமே யஜீதுக்கு எதிராகக் குரல் எழுப்பினார்கள். செயல் ரீதியில் அவனுடன் மோதவும் செய்தார்கள். அவர்களில் ஒருவர் கலீஃபா அலீ ரழியல்லாஹு அன்ஹுஃபாத்திமா ரழியல்லாஹு அன்ஹுதம்பதியினரின் மகனார் ஹூசைன் ரழியல்லாஹு அன்ஹுஅவர்கள். மற்றொருவர்தான் ஜூபைர் ரழியல்லாஹு அன்ஹு- அஸ்மா ரழியல்லாஹு அன்ஹா தம்பதியினரின் வீரத்திருமகனாகிய அப்துல்லாஹ் ரழியல்லாஹு அன்ஹுஅவர்கள்!

யஜீதின் படையினர் ஹுசைன் ரழியல்லாஹு அன்ஹுஅவர்களின் எதிர்ப்பை சிலமணி நேரங்களில் முறியடித்து விட்டார்கள். ஆனால் அப்துல்லாஹ் இப்னு ஜூபைர் ரழியல்லாஹு அன்ஹுஅவர்களை எளிதில் முறியடிக்க முடியவில்லை! உண்மை யாதெனில் பனூ உமையாக்கள், அப்துல்லாஹ் இப்னு ஜூபைர் ரழியல்லாஹு அன்ஹுஅவர்களின் எதிர்ப்பைச் சமாளித்து தங்களுடைய ஆட்சியதிகாரத்தை தக்கவைத்துக் கொள்ளப் பெரும் சிரத்தை எடுக்க வேண்டியதாயிருந்தது! ஆகையால் யுத்தங்களின் ஒரு நீண்ட தொடர் ஆரம்பமாகி, அப்துல்லாஹ் ரழியல்லாஹு அன்ஹுஅவர்களின் வீரமரணத்துடன் முடிவுற்றது.

அப்துல்லாஹ் இப்னு ஜூபைர் ரழியல்லாஹு அன்ஹுஅவர்கள் தொடர்ந்து யஜீதுக்குப் பிறகு மர்வான், பிறகு அப்துல் மலிக் ஆட்சிக்கு வந்தார். இவருக்கு மிகவும் அறிவுத்திறன் கொண்ட, திட்டமிட்டு செயல்படுத் சூட்சுமம் தெறிந்த ஓர் ஆளுநர் கிடைத்தார். ஹஜ்ஜாஜ் இப்னு யுசுஃப் என்று வரலாற்றில் பிரபலமாக அறியப்படும் ஆளுநர்தான். அப்துல்லாஹ் இப்னு ஜுபைர் ரழியல்லாஹு அன்ஹுஅவர்கள் பெற்று வந்து செல்வாக்கையும் ஈட்டிவந்த ஆதரவுகளையும் குலைத்தார்!

இந்நிலையில் அவர்கள் போர்க்கவசம் அணிந்து ஆயுதம் ஏந்திய வண்ணம் தம் தாயாரின் சமூகத்திற்கு வந்தார்கள். அவர்களைச் சந்தித்து விடைபெற்றுச் செல்வதற்காக! அது அவர்களது இறுதிச் சந்திப்பாகவும் இருந்தது.

அஸ்மா ரழியல்லாஹு அன்ஹா அவர்களுக்கு அப்போது 100வது வயது நெருங்கிக் கொண்டிருந்தது. அவர்கள் பார்வை மங்கிப்போய் விட்டிருந்தது. அவர்களின் மகனார் வந்து நின்று ஆலோசனை கோரினார் தாயாரிடம்!

மகனாரின் இந்தக் கேள்விக்கு சித்தீகுல் அக்பரின் மூத்த புதல்வி அளித்த பதில் வார்த்தைகளை வரலாறு பொன் எழுத்துக்களால் பதிவு செய்து வைத்துள்ளது. அவை இதோ:-

அன்பு மகனே! எது உனக்கு நன்மை அளிக்கக் கூடியது என்பதை நீயே நன்கு அறிவாய். நீ சத்தியத்தின் பக்கம்தான் இருக்கின்றாய் என்பதில் உனக்கு உறுதி இருந்தால், நீ நிலைகுலையாதிருக்க வேண்டும். நீ ஆண்மகனைப் போன்று போரிடு! உயிருக்கு அஞ்சி எவ்வித இழிவையும் சுமந்து கொள்ளாதே! வாளேந்திப் போரிட்டு கண்ணியமாக மரணிப்பது, இழிவுடன் இன்பமாய் வாழ்வதை விடச் சிறந்ததாகும். நீ வீரனாக மரணம் அடைந்தால் அப்போது நான் மகிழ்வேன். ஆனால் அழிந்து போகும் இந்த உலகை வணங்கி வழிபடுவாயானால் உன்னை விடவும் கெட்டவன் வேறு யார் இருக்கமுடியும்? அதாவது, தானும் அழிந்து அல்லாஹ்வின் அடியார்களையும் அழிவில் சேர்க்கக் கூடிய அளவுக்கு கேடுகெட்டவன் அப்போது நீயாகத்தான் இருக்கமுடியும்! எனவே, நாம் மட்டும்தானே தன்னந்தனியாக எதிர்க்கின்றோம், ஆகவே இப்பொழுது கீழ்படிந்து செல்வதைத் தவிர வேறு வழி இல்லை என்று நீ கருதுவாயானால் இவ்வாறு கருதுவது உன் சான்றோரின் போக்கு அல்ல! நீ எது வரையில் உயிர் வாழ்ந்திடுவாய்? என்றாவது ஒருநாள் மரணம் அடையத்தானே போகிறோம்! எனவே நற்பெயருடன் மரணமாகு, அப்பொழுதான் பெருமைப்படுவேன்!’

அவருடைய கல்வி ஞானத்தையும் சிறப்பையும் அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹுமற்றும் இப்னு உமர் ரழியல்லாஹு அன்ஹுபோன்றோர்களே புகழ்ந்துள்ளார்கள்! அன்று வீரத்திற்கும் விவேகத்திற்கும் அவருக்கு நிகர் அவராகவே திகழ்ந்தார்! அப்படிப்பட்ட உயர் சிறப்புக்குரிய மகனார்…! ஆகா! தாயார் என்றால் இப்படி அன்றோ திகழ்ந்திட வேண்டும்!

அப்துல்லாஹ் இப்னு ஜூபைர் ரழியல்லாஹு அன்ஹுஅவர்கள் தாயாரின் இத்தகைய துணிவான சொற்களைக் கேட்டதும் மனம் நெகிழ்ந்து பணிவுடன் வேண்டினார்கள்.

என் அன்புத் தாயே, ஷாம் தேசத்து மக்கள் என்னைக் கொன்று எனது உடலைப் பலவிதமாகக் கோரப்படுத்தி விடுவார்களோ எனும் அச்சம் எனக்கு உள்ளதே!||

மகனே, உன்னுடைய எண்ணம் சரிதான்! ஆனால் ஆட்டை அறுத்த பிறகு அதனுடைய தோலை உரிப்பதனாலோ அதன் சதைகளைக் கைமாவாகக் கொத்துவதனாலோ அதற்கு எந்த வேதனையும் ஏற்படாதே!||

அப்துல்லாஹ் இப்னு ஜூபைர் ரழியல்லாஹு அன்ஹுஅவர்கள் தம் தாயார் திருப்தியுடன் இருப்பதை அறிந்ததும் உடனே அவரின் கரங்களைப் பிடித்து முத்தமிட்டவாறு –

என் அன்புத் தாயே! நானும் இவ்வாறுதான் சிந்தித்துக் கொண்டிருக்கின்றேன். அதாவது சத்தியத்திற்கு எதிரில் இந்த உலகம் சாதாரணமானதுதான். மேலும் இஸ்லாத்திற்கும் அதன் கொள்கை கோட்பாடுகளுக்கும் உறுதியும் வலிமையும் சேர்ப்பதற்காகத்தான் இப்பணிகளையெல்லாம் நான் ஆற்றியுள்ளேன்!

இதனைக் கேட்டதும் அப்துல்லாஹ் ரழியல்லாஹு அன்ஹுஅவர்கள் தம் தாயை கட்டித் தழுவினார்கள். அஸ்மா ரழியல்லாஹு அன்ஹா அவர்கள் பார்வை இழந்திருந்திருந்தார்கள். தம் அன்பு மகனை ஆரத் தழுவியபோது அவருடைய உடலின் மீது உருக்குக் கவசம் இருப்பதை கரங்கள் உணர்த்தின.

மகனே, யார் சத்தியத்திற்காக உயிரை தியாகம் செய்ய விரும்புகின்றார்களோ அவர்கள் கவசம் அணிந்து கொள்வதில்லை. எனவே அதனைக் கழற்றிவிடு. உடுப்பை வரிந்து கட்டிக்கொண்டு எதிரிகள் மீது தாக்குதல் தொடு! என்று அறிவுறுத்தினார்கள்!

அப்துல்லாஹ் இப்னு ஜூபைர் ரழியல்லாஹு அன்ஹுஅவர்கள் அவ்விதமே செய்தார்கள். வீரத்துடன் போரில் குதித்து தியாக மரணத்தை மகிழ்வுடன் ஏற்றுக் கொண்டார்கள்!

பிறகு ஹஜ்ஜாஜ் என்ன செய்தார் தெரியுமா? அண்ணல் நபிகளாரின் அன்புத் தோழர் ஒருவரின் உடலை அவருடைய தாயாரிடம் ஒப்படைக்காமலும் முறையாக அடக்கம் செய்ய விடாமலும் கழுமரத்தில் கட்டித் தொங்கவிட உத்தரவிட்டு தான் புரிந்து வந்த கொடுமைகளின் பட்டியலில் இந்தக் கொடூரச் செயலையும் சேர்த்துக் கொண்டார்!

ஒரு கொடுங்கோலன் இனங்காட்டப்பட்டான்!

மறுநாள் அன்னை அஸ்மா ரழியல்லாஹு அன்ஹா அவர்கள் வேலைக்காரப் பெண்மணி ஒருவரின் துணையுடன் தம்முடைய அருமை மகனாரின் உடலைத் தேடி வந்தார்கள். உடல் கழுமரத்தில் கட்டித் தொங்கவிடப்பட்டிருந்தது. அப்பொழுது அவருடைய நாவு உச்சரித்த வார்த்தைகள் என்ன தெரியுமா?

இஸ்லாத்தின் இந்த மாவீரன் தியாக மறவன் இன்னும் குதிரையை விட்டு இறங்கவில்லையே!

உம்முடைய மகன் அப்துல்லாஹ் கஅபா ஆலயத்தினுள் உட்கார்ந்து கொண்டு இறைச் சட்டங்களுக்கு எதிரான நடவடிக்கைகளில் இறங்கினாறெனில் அவருக்கு எவ்வளவு துணிச்சல்! ஆகையால்தான் அல்லாஹ் அவர் மீது இந்த வேதனையை இறக்கியுள்ளான்என்றான் ஹஜ்ஜாஜ்.

நீ பொய் சொல்கின்றாய்! என்னுடைய மகன் இறைச் சட்டங்களுக்கு எதிராக செயல்படுபவன் அல்லன். அவன் நோன்பாளியாகவும், தஹஜ்ஜூத் இரவுத் தொழுகை தொழுபவனாகவும், பரிசுத்தவானாகவும், பக்திமானாகவும் திகழ்ந்தான்! தாய் தந்தையரின் சொல்லை மதித்து நடந்தான். ஆனால் கேள்! அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்கள் ஒருபோது இவ்வாறு கூறியதை நான் கேட்டுள்ளேன். அதாவது ஸகீஃப் கோத்திரத்திலிருந்து இரண்டு மடையர்கள் தோன்றுவார்கள். முதலாமவன் பொய்யனாகவும், இரண்டாமவன் கொடுங்கோலனாகவும் இருப்பார்கள் அதன்படி ஸகீஃப் குலத்தைச் சார்ந்த முக்தார் எனும் பொய்யனை நான் பார்த்துவிட்டேன். மற்றொருவனாகிய கொடுங்கோலன் இப்பொழுது என் முன்னிலையில் நின்று கொண்டிருக்கிறான்.

பளீரென சாட்டை கொண்டு தாக்குவது போன்று இந்தப் பதிலைக் கேட்டதும் அவருடைய முகத்தில் இழிவும், கேவலமும் கூத்தாட தலையைத் தாழ்த்தியவாறு கொஞ்ச நேரம் மௌனமானார். நிலவிய நிசப்தத்தை சீக்கரமாகக் கலைத்துக் கொண்டு, உம்முடைய மகனுக்கு நான் நல்ல பாடம் புகட்டியிருக்கிறேன், என்று பிதற்றினார்!

நீ என்னுடைய மகனின் உலக வாழ்க்கையைத்தான் பாழ்படுத்தினாய், பரவாயில்லை! ஆனால் என் மகனோ உனது மறுமை வாழ்வை பாழ்படுத்திவிட்டானே!

இந்த அழுத்தமான பதிலைக் கேட்டதும் ஹஜ்ஜாஜ் நிதானம் இழந்தார். உணர்ச்சி வசப்பட்ட நிலையில் அவருடைய நா உளறிக்கொட்டியது.

இரண்டு வார்களுடைய இந்தக் கிழவி மதியிழந்து போய்விட்டாள்

இந்தக் குத்தல் பேச்சைக் கேட்டதும் அஸ்மா ரழியல்லாஹு அன்ஹா அவர்கள் ஹஜ்ஜாஜை அதட்டியவாறு கூறினார்கள்.

அல்லாஹ்வின் நபியவர்கள் உண்மையைத்தான் உரைத்தார்கள். உண்மையில் எந்தக் கொடுங்கோலனைப் பற்றி நபியவர்கள் முன்னறிவிப்புச் செய்தார்களோ அந்தக் கொடுங்கோலன் நீதான். கொடுங்கோலனே, உனது ஆணவப் பேச்சுக்கு இதோ எனது பதில். ஆம், நான் இரண்டு வார்களை உடையவள்தான்! அல்லாஹ்வின் நபிதான் அவ்வாறு பெருமையாகக் கூறி என்னை அழைத்தார்கள். ஆனால் நீயோ நபியவர்கள் சூட்டிய அதே வார்த்தையைக் கூறி என்னை இழிவுபடுத்துகின்றாய்!

ஹஜ்ஜாஜ் இதற்குப் பதில் ஏதும் கூறாமல் முகத்தைத் திருப்பிருக் கொண்டு போய்விட்டார்!

பிறகு கலீஃபா அப்துல் மலிகிடமிருந்து, அப்துல்லாஹ்வின் உடலை அவருடைய தாயாரிடம் ஒப்படைத்து விடவும்எனும் கட்டளை வந்தது. அன்னாரது உடலின் ஒவ்வொரு பகுதியும் சிதைத்துக் கோரப்படுத்தப்பட்டிருந்தது!

வாழ்க்கையின் இறுதி நிலையை அடைந்து விட்டிருந்து அஸ்மா ரழியல்லாஹு அன்ஹா அவர்கள், நான் என்னுடைய வீரத்திருமகனின் உடலைப் பெற்று முறையாகக் குளிப்பாட்டி துணிபொதிந்து அடக்கம் செய்யாதவரை எனக்கு மரணம் வரக்கூடாது என்று பிரார்த்தனை செய்து கொண்டிருந்தார்கள்!

அவ்வாறே அவர்களின் பிரார்த்தனை இறைவனால் ஏற்றுக் கொள்ளப்பட்டது! சிதைக்கப்பட்டும் சிதைந்த நிலையிலும் இருந்த மகனாரின் உடலை அதன் துயரமான காட்சியைக் கண்டபோதும் அஸ்மா ரழியல்லாஹு அன்ஹா அவர்களின் நாவு அல்லாஹ்வைப் புகழ்ந்து கொண்டிருந்ததெனில்.. அவர்களின் நெஞ்சுரத்தையும் நிதானமிழக்காத பொறுமையையும் வார்த்தைகளால் எப்படி வர்ணிக்க முடியும்!

உடல் மிகவும் சிதைந்த நிலையில்இருந்தபடியால் மிகவும் பேணுதலுடன் குளிப்பாட்டப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டது!

மகனார் அடக்கப்பட்டு ஒரு வாரத்திற்குள் தாயாரும் ஏறக்குறைய 100வது வயதில் மக்கத்து திருநகரில் மரணமடைந்தார்கள்!

Add Comment

Your email address will not be published.