அன்னை ஸபிய்யா ரலியல்லாஹு அன்ஹா

அன்னை ஸபிய்யா ரலியல்லாஹு அன்ஹா

By Sufi Manzil 0 Comment December 21, 2014

Print Friendly, PDF & Email

பனூ நுழைர் கோத்திரத் தலைவரான ஹை இப்னு அக்தப் இவர் ஹாரூன் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் வழி வந்தவர். பனூ குறைழா வம்சத் தலைவரான ஸம்வால் அவர்களின் புதல்வி லரு ஆகியோரின் புதல்வி. ஸபிய்யா ரலியல்லாஹு அன்ஹா அவர்களை முதலில் ஸலாம் இப்னு மஷ்கம் குறைஷீ என்பவர் மணமுடித்து பின்னர் விவாகரத்து செய்தார். தொடர்ந்து அன்னை ஸபிய்யா அவர்களை கினானா இப்னு அபில் ஹக்கீக் என்பவர் வாழ்க்கைத் துணைவியாக ஏற்றுக்கொண்டார்.

சரித்திர பிரசித்தி பெற்ற வீரத்தின் விளை நிலமாம் அலீ ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் பேராற்றல் வெளிப்பட்ட கைபர் போர்முனையில் ஸபிய்யா அம்மையாரின் கணவரும், தந்தையும் மாண்டு போயினர்.

போரில் கைப்பற்றிய மனிதர்களில் ஸபிய்யாவும் இருந்தார். அண்ணலர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களுக்கு முன்னே, கைது செய்யப்பட்டவர்களும், கிடைத்த பொருட்களும் நிறைக்கப்பட்டன. அண்ணலார் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் அவற்றை தன் வீரத் தோழர்களுக்குப் பங்கிட்டுக் கொண்டிருக்கின்ற போது,

நாயகத் தோழர் திஹ்யத்துல் கல்பீ ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் “நாயகமே எனக்கொரு அடிமைப் பெண் வேண்டும்.!“ என வேண்டுதல் விடுத்தார்.

“தாங்களே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்“ என கைது செய்யப்பட்ட பெண்டிர் நோக்கி அண்ணல் சுட்டிக்காட்ட, அவர் ஸபிய்யா அம்மையாரைத் தெரிவு செய்தார்.

அப்போது தோழரொருவர் குறுக்கிட்டு, “யா ரஸுலல்லாஹ்! பனூ நுழைர், பனூ குறைழா கோத்திரத்தின் தலைவரது புதல்வியினை அவருக்கு கொடுப்பது சரியன்று. தாங்களே ஸபிய்யாவை வைத்துக் கொள்வதே சரியானது“ எனக்கூற தோழர்களும் ஆமோதிக்க,

அண்ணலார் வேண்டுகோளை ஏற்றனர். ஸபிய்யா அம்மையார் விடுவிக்கப்பட்டார்கள்.  அண்ணலரின் அருந்துணைவியர் பட்டியலில் தம்மை இணைத்துக் கொண்டார்கள்.

இவர்கள் குள்ளமானவர்கள். அழகானவர்கள்;. அன்னை ஸபிய்யா ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் பல நபிமொழிகளை அறிவிப்புச் செய்துள்ளனர். அத்தோடு மார்க்கத் துறையில் மேலான ஞானமும் பெற்றிருந்தனர். அவர்களைச் சூழ பெண்கள் அமர்ந்து மார்க்க விஷயங்களில் ஏற்படும் ஐயங்களை அகற்றிச் செல்வது வழக்கம்.

அன்னையவர்கள் நற்குணங்கள் கைவரப்பெற்ற நங்கை நல்லாராக வாழ்ந்தார்கள். “ஆழ்ந்த ஞானமும், அறிவும் பெற்றவர் ஸபிய்யா“ என்று புகழப்படுகிறார்கள்.

அன்னையவர்களின் அடக்கம் தாராள குணம், திடமனம் ஆகியன பலராலும் போற்றப் பெற்றது. கைபர் போரில் தமது முந்தைய கணவர் மாண்டு போனதைக் கண்டு அவர்கள் கொஞ்சமும் கலங்கவில்லை.

அத்தோடு அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் மீது அளவற்ற எல்லையற்ற பேரன்பு பூண்டிருந்தனர். ஒருமுறை நபியவர்களுக்கு சற்று உடல்நலக் குறைவு ஏற்பட்டபோது அதைப் பொறுக்காத ஸபிய்யா “இந்நோய் எனக்கு ஏற்பட்டிருக்கக் கூடாதா?“ எனக் கவலையோடு கூற அருகிலிருந்த மற்ற துணைவியர்கள், அன்னை ஸபிய்யாவை உற்றுப்பார்த்தனர்.

இவற்றைக் கவனித்த நாயகமவர்கள் சொன்னார்கள். ஸபிய்யா கூறியவை எதார்த்தமான வார்த்தைகள்.

நூல் : ஸர்கானி

ஸபிய்யா அம்மையார் இரக்க சிந்தையும், தயாள குணமும் கொண்டவர்கள். அண்ணலரின் வாழ்க்கைத் துணைவியாகி முதன் முறை மதீனா வந்ததும் பெருமானாரின் பிரிய மகளார் பாத்திமா ரலியல்லாஹுஅன்ஹா அவர்களுக்கும், நபியவர்களின் ஏனைய துணைவியருக்கும் பல பொருட்களை அன்பளிப்புச் செய்தார்கள்.

அத்தோடு சுவைமிகு உணவுகளை நேர்த்தியாக சமைக்கவும் அன்னாருக்குத் தெரியும். அடிக்கடி தம்மரும் துணைவராம் அண்ணல் நபியவர்களுக்கு விருந்துகள் கொடுப்பதோடு, அன்னை ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்களின் இல்லத்தில் அண்ணலர் தங்கி இருக்கின்ற தினங்களில் கூட சிலபோது அறுசுவை உணவுகளை அனுப்பி வைப்பதுண்டு.

பெருமான் நபியவர்களும் அன்னை ஸபிய்யா மீது அளவற்ற நேசம் கொண்டிருந்தனர். ஒரு நாள் பொழுதில் ஸபிய்யா அவர்கள் கவலைப்பட்டு கண்ணீர் சிந்துவதைக் கண்டு காரணம் கேட்க, ஆயிஷாவும், ஜெய்னபும் என்னை குறை கூறுகின்றனர். தாங்களே மற்ற மனைவியரை விட உயர்ந்தவர்கள் என பெருமை கூறுகின்றனர் எனச் சொன்னார்கள்.

நபியவர்கள் சொன்னார்கள், இதற்காகவா அழுகிறாய் “நபி ஹாரூன் எனது தந்தை, நபி மூஸா எனது பெரிய தந்தை முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் எனது கணவர் எனவே நானே உயர்ந்தவள் என்று அவர்களுக்குச் சொல்!“

இத்துணை சிறப்பு வாய்ந்த அன்னை ஸபிய்யா ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் ஹிஜ்ரி 50ஆது ஆண்டில் ரமழான் மாதத்தில் மண்ணக வாழ்வை முடித்துக் கொண்டார்கள். (இன்னாலில்லாஹி………) ஜன்னத்துல் பகீஃஇல் நல்லடக்கம் செய்யப்பட்டார்கள். ஹிஜ்ரி 52இல் அன்னார் மறைந்தனர் என்ற கருத்தும் உண்டு.

நூல் : ஸர்கானி, பாகம் – 03, பக்கம் – 259

Add Comment

Your email address will not be published.