அன்னை ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா

அன்னை ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா

By Sufi Manzil 0 Comment December 21, 2014

Print Friendly, PDF & Email

அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் அருமைத்தோழர் ஸித்தீகுல் அக்பர் அபூபக்கர் ரழியல்லாஹு அன்ஹு அவர்களின் அருமைப் புதல்வியாகும் அன்னை ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா அவர்கள். இவர்களது தாயார் உம்மு ருமான் (ரழி), தந்தையோ மிகப் பிரபலமான நபித்தோழரும், முதல் கலீபாவுமான அபுபக்கர் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களாவார்கள்.

உம்மு ருமான் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களது முதல் கணவரது பெயர் அப்துல்லா அஸ்தி, இவருக்குப் பிறந்த மகனின் பெயர் அப்துர் ரஹ்மான். உம்மு ருமானின் முதல் கணவர் இறந்ததன் பின்னர் அபுபக்கர் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் இவரை மணந்து கொண்டார்கள். இவருக்கும் அபுபக்கர் (ரழி) அவர்களுக்கும் பிறந்த செல்வம் தான் ஆயிஷா (ரழியல்லாஹு அன்ஹு) ஆவார்கள். கி.பி. 614 ஆம் ஆண்டு ஆயிஷா (ரழியல்லாஹு அன்ஹா) அவர்கள் பிறந்தார்கள்.

திருமறைக் குர்ஆனில் பல இடங்களில் அன்னையவர்களைக் குறித்து பல குர்ஆன் வசனங்களை இறைவன் இறக்கியருளியுள்ளான் என்ற நற்பெருக்குச் சொந்தக்காரராவார்கள். இன்னும் சுவனச் சோலைகளில் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய மனைவியாக இருப்பதற்கும் அல்லாஹ் அவர்களைத் தேர்ந்தெடுத்திருக்கின்றான்.

இன்னும் அன்னையவர்களின் உருவத்தை பச்சைப் பட்டுத் துணியில் வைத்து இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு வானவர் தலைவர் ஜிப்ரீல் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களால் காட்டப்பட்ட நற்பெயருக்கும் சொந்தக்காரவார்கள். இன்னும் இவரை நீங்கள் மணக்கவிருக்கின்றீர்கள், இன்னும் இவரே மறுமைநாளிலும் உங்களுக்கு மனைவியாக இருக்கப் போகின்றவர் என்றும் அப்பொழுது இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு ஜிப்ரீல் (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் நன்மாரயம் கூறினார்கள்.

நபிபெருமான் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் அன்னையவர்களை ஹிஜ்ரத்துக்கு முன்னர் மக்கா முகர்ரமாவில் வைத்து 500 திர்ஹம் மஹர் கொடுத்து ஷவ்வால் மாதம்மணம் புரிந்தனர். இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வாழ்க்கைத் துணைவியாக அவர்கள் வாழ்க்கைப் பட்ட பொழுது, அவர்களுக்கு ஒன்பது வயது தான் நிரம்பி இருந்தது.

ஆயினும், நபிகள் கோமானுடன் இல்லற வாழ்க்கையில் ஹிஜ்ரி 02ஆம் ஆண்டு ஷவ்வால் திங்களில்தான் காலடி எடுத்து வைத்தார்கள். அன்னையவர்கள் பெருமான் நபியுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் பேரன்பிற்கு உரித்தான துணைவியாக அமைந்திருந்தனர்.

“ஆயிஷாவின் மடியைத் தவிர வேறு எந்தத் துணைவியின் மடியிலும் எனக்கு ‘வஹீ‘இறங்கவில்லை“. இது அன்னை ஆயிஷா குறித்து அருமைக் கணவராம் அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் வழங்கிய நற்சான்று!

நூல் : புகாரி, பாகம் – 01, பக்கம் – 532

பிக்ஹ் சட்டக்கலை, ஹதீஸ்கலைகளில் அன்னையவர்கள் தன்னிகரற்று விளங்கினார்கள். பெரும்பெரும் நபிமணித்தோழர்கள் எல்லாம் அரிய விஷயங்கள் பலவற்றை அன்னையவர்களிடம் கேட்டுத் தெளிவு பெறறனர். வணக்க வழிபாடுகளில் அன்னையவர்கள் மிகுந்த பேணுதலும், அக்கறையும் கொண்டிருந்தனர். தஹஜ்ஜுதுத் தொழுகையினை மிகுந்த பேணுதலுடன் நிறைவேற்றி வந்ததோடு, அதிகமாக நபில் தொழுகைகளும் சுன்னத்தான நோன்புகளும் நோற்று வந்தனர்.

சுமார் 2210 ஹதீதுகளை அறிவித்திருக்கிறார்கள். அவை அனைததும் சட்டம் சார்ந்தவை. இவர்களுக்கு அரபி மொழியில் சிறந்தபுலமை இருந்தது. இவர்கள் சிறந்த கவிஞராகவும் இருந்தனர். இவர்கள் மருத்துவத் துறையிலும் தேர்ச்சி பெற்றிருந்தனர். ஏழைகளுக்கு இலவசமாக மருந்து வழங்கி வந்தனர்.

ஈகை, நற்செயல் போன்றவற்றில் அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் அருமை துணைவியருள் அன்னை ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா அவர்களுக்குத் தனித்தோர் இடமுண்டு. அவர்களது வீட்டிற்குள் நுழைந்த எவரும் வெறுங்கையுடன் திரும்பிச் சென்றதில்லை.

உம்மு துர்ரா ரழியல்லாஹு அன்ஹா அவர்கள் அன்னையாரின் அறத் தன்மை குறித்து அறிவிக்கின்றார்கள் :

ஒரு சமயம், தன்னிடம் இருந்த 70 ஆயிரம் திர்ஹம்களை ஒரே நேரத்தில் அல்லாஹ்வின் பாதையில் செலவிட்டார்கள் அன்னையவர்கள். அப்பொழுது அவர்களது கைத்துண்டு தான் அவர்களிடத்தில் மிச்சமிருந்தது. இன்னும் ஒரு மாலைப் பொழுதில் அவர்களுக்கு ஒரு லட்சம் தினார்களை முஆவியா (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் சிரியாவிலிருந்து அனுப்பி வைத்தார்கள். அதனை அப்பொழுதே தானமாக மக்களுக்கு வழங்கி விட்டார்கள்.

அப்பொழுது, அவர்களுக்கு பணிப்பெண்ணாக இருந்த பெண்ணொருத்தி, அன்னையவர்களே..! நீங்கள் இன்றைக்கு நோன்பு வைத்துள்ளீர்கள், உங்களுக்காக எதையாவது ஒதுக்கி வைத்துக் கொள்ளுங்கள் என்று கூறிய பொழுது, நீங்கள் எனக்கு ஏன் இதனை முன்பே தெரியப்படுத்தவில்லை என்று தான் கேட்டார்கள். இன்னும் ஒரு முறை அப்துல்லா பின் ஜுபைர் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் ஒரு லட்சம் திர்ஹம்களை அனுப்பி வைத்தார்கள். அது வந்த வேகத்தில் தானமாக வழங்கப்பட்டு விட்டது அன்னையவர்களால்..!

ஒரு நாள் அன்னையவர்கள் நோன்பு வைத்திருந்தார்கள். அப்பொழுது ஒரு ஏழைப் பெண் தானமாக எதனையாவது பெற்றுக் கொள்ளும் நோக்கில் அன்னையவர்களின் வீட்டுக்கு வந்திருந்தாள். அப்பொழுது அன்னையவர்கள் தனது பணிப் பெண்ணை நோக்கி, நம்மிடம் இருக்கின்ற அந்த துண்டு ரொட்டியை எடுத்து அந்தப் பெண்ணுக்குக் கொடுக்குமாறு கூறினார்கள். அந்தப் பணிப் பெண்ணோ, அன்னையே..! நீங்கள் நோன்பு திறப்பதற்கு இந்த ரொட்டித் துண்டை விட்டால் நம்மிடம் எதுவும் கிடையாது என்று கூறினார்கள். அதற்கு அன்னையவர்கள், அவளோ பசியென்று நம் வீடு தேடி வந்து நிற்கின்றாள். முதலில் அவளது பசியைப் போக்குவோம். மாலையில் நம் பசியைப் போக்க இறைவன் வேறு எதாவதொரு ஏற்பாட்டைச் செய்வான் என்று கூறினார்கள்.

அன்றைய மாலைப் பொழுதில், நோன்பு திறக்கும் நேரத்தில் ஒரு வீட்டிலிருந்து அன்னைக்காக சமைத்த இறைச்சித் துண்டு வந்திருந்தது. அப்பொழுது, பார்த்தாயா பெண்ணே..! நாம் காலையில் தானம் கொடுத்ததை விடச் சிறந்த உணவை அல்லாஹ் நமக்காக ஏற்பாடு செய்து தந்திக்கின்றான் என்று கூறினார்கள்.

நபிபெருமானாரின் எல்லா துணைவியரிலும் மிகக்குறைந்த வயதினை அன்னை ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா அவர்கள் பெற்றிருந்தாலும் ஞானம், இறையச்சம், வழிபாடு, ஈகை, வீரம், உலகப்பற்றற்ற தன்மை, ஆத்மீகப் பயிற்சி ஆகிய எல்லாத் துறைகளிலும் மற்றெல்லோரை விடவும் முன்னணியில் இருந்தனர்.

கலீபாக்களின் ஆட்சிக் காலத்தில் அன்னையவர்களின் மார்க்க தீர்ப்புகள் (ஃபத்வாக்கள்) ஏற்றுக் கொள்ளப்பட்டன. சொத்துப் பங்கீடு விசயத்தில் அன்னையவர்கள் மிகச் சிறந்த கல்வி ஞானத்தைப் பெற்றிருந்த காரணத்தினால், மக்கள் அதில் ஏற்படும் சந்தேகங்களுக்கு அன்னையை அணுகக் கூடியவர்களாக இருந்தார்கள். சொத்துப் பங்கீடு விசயத்தில் மிகவும் சிக்கலான பிரச்னைகளுக்கு அன்னையவர்கள் மிக எளிதாக, அதனை தீர்த்து வைக்கக் கூடியவர்களாக இருந்தார்கள்.

அன்னை ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா அவர்களின் வாழ்வு இஸ்லாமியத் தாய்க்குலத்திற்கு அழகிய முன்மாதிரியான வாழ்வாகும். நற்கருமங்களை விரைந்து செய்வதிலும், அறிவு ஞான வேட்கையிலும்,

தமது இனிய கணவரது இதயத்தை இன்புறச் செய்வதிலும் அன்னையவர்கள் கொண்டிருந்த ஈடுபாட்டை நம்மினத்துத் தாய்க்குலம் கைக்கொள்ளுமாயின் இம்மையிலும், மறுமையிலும் அவர்களது வாழ்வு சிறப்புற்றோங்கும்.

அன்னையவர்கள் ஹிஜ்ரி 58 ஆம் ஆண்டு இந்த மண்ணுலகை விட்டு, சொர்க்கச் சோலைகளை நாடிச் சென்று விட்டார்கள். தனது 66 ம் வயதில்ரமளான் மாதம் 17 ஆம் நாள் மரணமடைந்தார்கள்.இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

ஜனாஸாத் தொழுகையினை நபிமணித் தோழராம் அபூஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் நிறைவேற்றி வைத்தனர்.

இதர உம்முஹாத்துல் முஃமின்களான – அண்ணலாரின் அருந்துணைவிகளுடன், அன்னையாரும் இரவு நேரத்தில் ஜன்னத் பகீஃ இல் நல்லடக்கம் செய்யப்பட்டார்கள்.

அப்துல்லா பின் முஹம்மது பின் அப்துர்ரஹ்மான் பின் அபூபக்கர் சித்தீக் (ரழியல்லாஹு அன்ஹு) மற்றும் அப்துல்லா பின் அப்துர்ரஹ்மான் பின் அபூபக்கர் சித்தீக் (ரழியல்லாஹு அன்ஹு) ஆகிய இருவரும் அன்னையின் உடலை மண்ணறைக்குள் வைத்தனர்.

ஸர்கானி, பாகம் – 03, பக்கம் – 234

Add Comment

Your email address will not be published.